ஜூலை 26 ஆடி அமாவாசை: மாங்கல்ய பலம் பெருக்கும் மங்களக் கதை

ஜூலை 26 ஆடி அமாவாசை: மாங்கல்ய பலம் பெருக்கும் மங்களக் கதை
Updated on
1 min read

பொதுவாகவே ஆடி அமாவாசை அன்று முன்னோர்களுக்குத் திதி கொடுப்பது வழக்கம். முன்னோர் வழிபாடு குலம் காக்கும் என்பது ஆழ்ந்த நம்பிக்கை. இதற்காக ஆறு, கடல் போன்ற நீர்நிலைகளில் மக்கள் நீராடி முன்னோர்களுக்குத் திதி கொடுப்பது வழக்கம். அப்படித் திதி கொடுப்பதுடன் ஆடி அமாவாசையுடன் தொடர்பு கொண்ட இந்தக் கதையையும் நினைவுகூரலாம்.

சிறிய நிலப்பரப்புகளைக் ஆண்ட மன்னர்கள் பலர் இந்தியாவில் இருந்திருக்கிறார்கள். இந்த ராஜ்ஜியங்களில் உருவான கதைகளும் பல்லாயிரக்கணக்கானவை. அவற்றில் ஒன்று அழகாபுரி அரசனின் கதை. இம்மன்னனுக்கு நெடுங்காலமாகக் குழந்தைப் பேறு இல்லை.

விரதங்கள் பல மேற்கொண்டு இறையருளால் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றான். அக்குழந்தை பிறந்த அன்றே அசரீரி ஒன்று ஒலித்தது. மார்க்கண்டேயன் போல் இக்குழந்தைக்கும் பதினாறு வயதே ஆயுள் என்று தெரிவிக்கப்பட்டது.

மன்னன் மன வேதனை அடைந்தான். காளி கோயிலுக்குச் சென்று கதறி அழுதான். காளியை உபாசனை செய்தான். காளி தோன்றி அவனுக்கு ஆறுதலளித்தாள். ஆயுளை உடனடியாக நீட்டிக்க அக்குழந்தைக்கு விதி இல்லை என்றும், தனது சக்தியால் பரிகாரம் ஒன்றினைக் கூறுவதாகவும் தெரிவித்தாள்.

அதன்படி பதினாறாவது வயதில் இந்த இளவரசன் இறந்த பின், உடலை எரியூட்டிவிடாமல், உயரிய குணங்கள் கொண்ட ஒரு பெண்ணுக்கு மணமுடித்துக் காட்டில் விட்டுவிடுமாறு கூறி மறைந்தாள் காளி. இதனால் தன் மகன் நீண்ட ஆயுள் பெறக்கூடும் என்பதை உணர்ந்த மன்னன் ஒருவாறு சமாதானம் அடைந்தான்.

ஆண்டுகள் உருண்டோடின. இளவரசன் ஆயுளும் முடிந்தது. கதறி அழுத மன்னனின் நினைவில் காளி கூறிய பரிகாரம் ரீங்காரமிட்டது. இளவரசனின் உடலை வாசனை திரவியங்களால் தூய்மைப்படுத்தி, அழகுபடுத்தி பட்டாடைகளையும், ஆபரணங்களையும் அணிவிக்கச் செய்தான். வாழ வழியில்லாத அனாதைப் பெண்ணை அழைத்து வரச் செய்து, இறந்த இளவரசனுக்கு மணம் முடித்தான்.

தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அப்பெண் தனிமையில் கதறி அழுதாள். இறந்த இளவரசனை மணந்ததால் சுமங்கலித்துவத்தை இழந்ததாக எண்ணி எண்ணிக் குமுறி அழுதாள். அவளது துயர் தீர ஈசன் திருவுளம் கொண்டான். இளவரசன் உடலை உயிர்ப்பித்து, அவளுக்குத் தீர்க்க சுமங்கலித்துவம் அளித்தான்.

இப்படியாக அந்த இளவரசனின் விதியானது அவனுடைய மனைவியின் பிரார்த்தனையால் மாறியது என்கிறது அந்தக் கதை. இக்கதையை ஆடி அமாவாசைக்கு முதல் நாள் படித்து, மறு நாள் அம்பிகைக்கு வெல்லப் பாயசம் செய்து நிவேதனம் செய்தால், பெண்களின் மாங்கல்ய பலம் அதிகரிக்கும் என்றும் ஈசன் வரமளித்தானாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in