பக்தர்கள் வருகை அதிகரிப்பால் சபரிமலை ஐயப்பன் கோயில் இரவு 11.30 மணி வரை திறப்பு: தேவஸ்வம் போர்டு அறிவிப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

கொச்சி: மண்டல பூஜைகளுக்காக கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த மாதம் திறக்கப்பட்டது. அதன் பின்னர் நாளுக்கு நாள் பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது.

கடந்த சனிக்கிழமை 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். அதற்கு முந்தைய நாள் வெள்ளிக்கிழமை 1 லட்சத்து 7,695 பக்தர்கள் தரிசனத்துக்கு முன்பதிவு செய்திருந்தனர்.

இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் சிலர் காயம் அடைந்ததாகவும் தகவல் வெளியானது. பக்தர்களை கட்டுப்படுத்த போலீஸாரும் திணறுகின்றனர்.

இதற்கிடையில், பக்தர்களின் வசதிக்காக கோயிலை இரவு கூடுதலாக ஒரு மணி நேரம் திறப்பது குறித்து பரிசீலிக்கும்படி திருவாங்கூர் தேவஸ்வம் போர்டுக்கு கேரள உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இதுகுறித்து, தேவஸ்வம் போர்டு தலைவர் கே.அனந்தகோபன் நேற்று கூறும்போது, ‘‘வழக்கமாக சபரிமலை ஐயப்பன் கோயில் இரவு 11 மணி வரை திறந்திருக்கும். தற்போது பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால், இரவு 11.30 மணி வரை கோயிலை திறந்து வைக்க முடிவெடுக்கப்பட்டு உள்ளது’’ என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in