Last Updated : 08 Dec, 2016 10:47 AM

 

Published : 08 Dec 2016 10:47 AM
Last Updated : 08 Dec 2016 10:47 AM

விசித்திரமான புத்தர்

ஓஷோ பிறந்த நாள்: டிசம்பர் 11

‘சம்பவாமி யுகே யுகே’ என்பது தெய்வங்களுக்குப் பொருந்துகிறதோ இல்லையோ ஞானாசிரியர்களுக்குப் பொருந்துகிறது. அந்தந்தக் காலகட்டத்தின் இயல்புக்கும் தேவைக்கும் ஏற்ப அவர்கள் தோற்றம் கொள்கிறார்கள். ஒருவரைப் போல் பிறிதொருவர் இல்லை. இதுவரை வந்தவர்களை வைத்து இனிவரும் ஒருவரைப் புரிந்துகொள்ள முடியாது.

ஆனால் ஆம்! அந்தப் பிழையையே எப்போதும் செய்கிறோம். ஞானாசிரியர்களுக்கென்று நம் மரபு ஒரு நிலைச்சித்திரத்தை அளிக்கிறது. அதில் அத்தனை ஆசிரியர்களையும் கொண்டு சென்று பொருத்துகிறோம். நம் புனிதர்கள் அத்தனை பேருக்கும் ஒரே முகம், ஒரே புராணம்.

அப்படிப் பொருந்தவில்லையென்றால் விளிம்புகளை வெட்டி மடித்து அந்தச் சட்டத்திற்குள் அடக்கிவிடுகிறோம். எப்படி மடித்தாலும் என்னென்ன வளைத்தாலும் எந்த சட்டத்திற்குள்ளும் அடங்காத ஒருவர் ஓஷோ.

ஓஷோ என்னும் காலத்தேவை

ஓஷோ உருவான சூழலை அறிந்தால் அவரைப் புரிந்துகொள்ளத் தொடங்கலாம். புரிந்துகொள்ளத் தொடங்கிய பின் அதை விட்டுவிட்டு அவருடைய ஆளுமையை மட்டும் நோக்கினால் போதும். எழுபதுகளில் உலகெங்கும் ஆன்மிகமான சோர்வு படர்ந்திருந்தது. இருமாபெரும் உலகப் போர்கள் உருவாக்கிய அவநம்பிக்கைச் சூழலில் பிறந்தவர்கள் இளைஞர்களாகிவிட்டிருந்தனர். மாற்றத்தின் கனவுடன் எழுந்த பல புரட்சி இயக்கங்கள் தோல்வி அடைந்தன. அமெரிக்க-ரஷ்ய மோதல் உச்சத்தில் இருந்தது. இன்னொரு உலகப் போர், எக்கணமும் நிகழும் என்ற பதற்றம் நிலவியது. தார்க்கோவ்ஸ்கியின் ‘சேக்ரிபைஸ்’ போன்ற திரைப்படங்களில் இன்று அந்தப் பதற்றத்தை நாம் காணலாம்.

மரபார்ந்த அனைத்து மதிப்பீடுகளையும் நிராகரிக்கும் ‘பீட்’ தலைமுறை போன்ற அறிவியக்கங்கள் உருவாகிவந்தன. ஹிப்பி இயக்கமாக அந்தப் பதற்றம் திரண்டது. தன்னைத்தானே சிதறடித்துக்கொண்ட ஒரு தலைமுறை அது. நேற்று இல்லாமல் நாளையும் இல்லாமல் இன்றில் மட்டுமே வாழ்பவர்களின் ஓர் உலகம். போதை இசையும் காமமும் மட்டுமே அங்கே ஓங்கி நின்றன.

இந்தியாவிலும் சுதந்திரத்துக்குப்பின் நேரு யுகம் உருவாக்கிய நம்பிக்கைகள் வீழ்ச்சியடைந்தன. அரசை மையமாக்கிய நிர்வாகம் இருந்தமையால் அனைத்து வளர்ச்சிகளும் குன்றி வேலையில்லாத் திண்டாட்டம் உச்சத்தில் இருந்தது. இடது சாரிப்போராட்டத்தின் தோல்விக்குப் பிந்தைய அவநம்பிக்கை எங்கும் நிறைந்திருந்தது.

அந்த இருண்ட தலைமுறையின் ஞானி ஓஷோ. அந்தக் காலகட்டத்தின் மிகச்சிறந்த உள்ளங்களுடன் உரையாடியவர். அவர்களுக்கு மரபான உபதேசங்களைச் சொல்லவேண்டியதில்லை. தத்துவ நோக்குகளை, ஒழுக்கத்தை, துறவைக் கற்பித்துக்கொண்டிருந்த ஆசிரியர்கள் அவர்களிடம் பேச முடியாது. அவர்களின் வினாக்களிலிருந்து ஓஷோ எழுந்தார்.

அன்றைய ‘தெய்வங்களால் கைவிடப்பட்ட இளைஞர்’களில் ஒருவன்தான் நானும். படிப்பை முடிக்காமல் வீட்டை விட்டு ஓடியவன். மெய்மை தேடிப் பிச்சைக்காரனாக அலைந்தவன். என் தலைமுறையின் குரலான மலையாளக் கவிஞர் பாலசந்திரன் சுள்ளிக்காடு பாடியதுபோல, ‘பைத்தியத்திற்கும் தற்கொலைக்கும் நடுவே ஓர் அலறல் போலக் கடந்து சென்ற வாழ்க்கை’ கொண்டவன்.

ஆகவேதான் அவர் ஞானாசிரியர்

1982 முதல் மூன்றுமுறை ஓஷோவின் புனா குருகுலம் சென்றிருக்கிறேன். அவரைச் சந்திக்க நேரவில்லை. அவருடைய நூல்களைப் பாலைவனத்தில் தொலைந்துபோனவன் கண்டெடுத்த வரைபடத்தை ஆராய்வதுபோல ஆவேசத்துடன் வாசித்திருக்கிறேன். அவர் எனக்கு எதையும் கற்பிக்கவில்லை. நான் கற்றதை எல்லாம் சிதறடித்தார். மீண்டும் நானே அடுக்கிக்கொண்டபோது சிந்திக்கக் கற்றிருந்தேன். அவருக்கு நேர் எதிராகவே என் சிந்தனைகள் சென்றன. ஆயினும் எனக்கு அவர் ஞானாசிரியர். ஆகவேதான் அவர் எனக்கு ஞானாசிரியர்.

ஓஷோவின் முதல் பணி என்பது உடைப்பதுதான். நம் பண்பாடு ஆயிரம் ஆண்டுத் தொன்மை கொண்டது. ஆகவே சிந்தனைகளையும் உணர்வுகளையும் எல்லாம் ஆசாரங்களாக ஆக்கிக்கொள்கிறோம். ஆசாரம் என்பது மாற்றமில்லாதது. கண்மூடித்தனமாக ஒழுக வேண்டியது. ஆசாரங்கள் அனைத்தும் மெய்மை நோக்கிய பயணத்துக்கு எதிரானவை.

அந்த உறைநிலையைத் தன் துடுக்குத்தனம் வழியாக, அப்பட்டமான ஆணவம் வழியாக, அராஜகச் சிந்தனை வழியாக, அபத்தம் வழியாக,ஏன் ஆபாசம் வழியாக அவர் உடைத்தார். பகவத் கீதை பற்றிய உரைக்கு நடுவில் ஒரு பாலியல் நகைச்சுவைத் துணுக்கு வருவது இன்றும்கூட இந்தியர்களை நடுங்கவைப்பதுதான்.

மனிதன் எப்படி கடவுளாக முடியும்?

ஓஷோவின் அராஜகம் அவரைத் தொடர்பவனைக் கிறுக்கனாக்கிவிடும். ஒரே உரையாடலில் “ஒஷோ நீங்கள் கடவுளைக் கண்டிருக்கிறீர்களா?” என்று ஒருவர் கேட்கிறார். “ஆம் நானே கடவுள்”என்கிறார். அடுத்த வினா “ஓஷோ, உண்மையிலேயே நீங்கள் கடவுளா?” அதற்கான பதில், “நீ என்ன முட்டாளா? மனிதன் எப்படிக் கடவுளாக முடியும்?”

சிந்தனைகளை நாம் அறிதல்களாகவும் உணர்தல்களாகவும் ஆக்கிக்கொள்வதில்லை. அவற்றைத் தெரிந்துகொள்கிறோம். திரும்பச்சொல்கிறோம். நம்மை அவற்றை உள்வாங்க விடாமல் தடுப்பது, அச்சிந்தனைகளுக்கு முன்பு அதுவரைக்கும் இருந்த சிந்தனைத் தொடர்ச்சியும் வரலாறும்தான். அச்சிந்தனையின் நாளைய பயன்மதிப்பு அடுத்த பெரும் தடை.

ஓஷோ நேற்று, நாளை என இரண்டிலிருந்தும் அவற்றை விடுவித்து அந்தந்தக் கணங்களில் நின்று சிந்தனையை நம்முடையதாக்குவதற்கு அறைகூவல் விடுக்கிறார். ஆகவே, அவருடைய மொத்த நூல்களை வாசிப்பவன் ஒத்திசைவுள்ள சிந்தனைக் கட்டுமானம் உருவாகிவருவதையோ ஒரு மையச் சிந்தனைச் சரடு ஓடுவதையோ காண முடியாது. ஏகப்பட்ட முரண்பாடுகள் தென்படும். பார்வைகள் சிதறிக் கிடக்கும்.

ஓஷோ என்ன சொல்கிறார் என எவர் சொன்னாலும், அது ஓஷோ அல்ல. அவர் நம் தர்க்க சிந்தனையைத் திகைக்க வைக்கிறார். ஒத்திசைவு உள்ள எண்ண ஓட்டங்கள் உருவாகாமல் தடுக்கிறார். நாமே சிந்தித்தாக வேண்டும் எனும் கட்டாயத்தை உருவாக்குகிறார்.

ஓஷோ உலகச் சிந்தனையாளர்களில் மிகப் பெரும்பாலானவர்களைப் பற்றிப் பேசியிருக்கிறார். ஏறத்தாழ எழுநூறு நூல்களாக அவை வெளிவந்துள்ளன. அவர் உலகச் சிந்தனைகளைக் கொண்டு மாபெரும் புனைவுலகை உருவாக்கியவர். கிருஷ்ணனையும் நீட்சேயையும் புத்தரையும் அவர் சுயமாக உருவாக்குகிறார்; ஒரு நாவலில் கதாபாத்திரங்கள் போல. அவர்களை நாம் வெளியே வேறு வகையில் காணலாம். அந்த வேறுபாடுதான் ஓஷோ அளிக்கும் ஞானம்.

மேற்கோளாக ஓஷோவை அறிய முடியாது. ஏனெனில் அந்த மேற்கோளுக்கு மறுப்பான இன்னொரு மேற்கோளை உடனே எடுத்துவிட முடியும். ஓஷோ என்ன சொல்லுகிறார் என்று அள்ளி அள்ளித் தொகுப்பவர்கள் ஓஷோவை அறிந்துவிட முடியாது. எப்படித் தொகுத்தாலும் பாதி உடலாக ஓஷோ வெளியே இருப்பார். சார்லி சாப்ளின் கார் ரிப்பேர் செய்வது போல. கார் நன்றாகவே ஓடும். ஆனால் எந்திரத்தில் பாதி வெளியே கிடக்கும்.

ஓஷோவைப் பின்பற்றுபவர்கள் இருளில் இருக்கிறார்கள். ஏனெனில் பின்பற்றுவதற்குரிய ஆசிரியன் அல்ல அவர். என்னால் பின்பற்ற முடியாதென்று தன் மரபை நோக்கித் திமிருடன் சொன்ன ஒரு தலைமுறைக்கு முன்னால் நின்று பேசியவர். ஓஷோவுடன் விவாதித்தவர்கள்தான் ஓஷோவை உடைத்துச் சென்றவர்கள்தான் தங்களுக்குரிய வழியை தாங்களே கண்டு கொள்கிறார்கள். என் தலைமுறையில் மெய்மை நோக்கிச் சென்ற அனைவரிலும் ஓஷோவின் பங்களிப்பு உண்டு

குளித்து விபூதி பூசி ஆசாரமாக அறியும் மெய்ஞானத்தை, காலையில் எழுந்து கழிப்பறைக் கிண்ணத்தின் மேல் அமர்ந்தபடி அறிய முடியும் என்று இந்திய மனதிற்குக் காட்டியவர் அவர். ஓஷோவுக்குப் பின் இந்தியாவெங்கும் நவீன குருமார்களின் நிரை உருவாகிவந்ததைப் பார்க்கலாம். நகைச்சுவை, நவீனச் சிந்தனைகளூடான தொடர்பு, அறிவியல் ஈடுபாடு கொண்ட ஆசிரியர்கள் அவர்கள். இன்று இந்திய மெய்ஞானத்தைப் பற்றிப் பேசுபவர்களை ஓஷோவை எதிர்கொண்டவர்கள், கொள்ளாதவர்கள் என பிரித்துவிடலாம்.

ஓஷோ வாழ வழிகாட்டும் ஞானி அல்ல. உலகியல் வாழ்க்கைக்கு ஓஷோவின் பங்களிப்பென்று எதுவுமில்லை. தேர்வில் வெல்லவோ வணிகம் செய்யவோ அவரிடம் போய் கேட்கவேண்டியதில்லை. அவர் இந்த விளையாட்டின் விதிகளென்ன என்று யோசிப்பவர்களுக்குரிய ஆசிரியன்.

ஆனால் ஓஷோ இந்திய மரபுக்குப் புதியவர் அல்ல. நமக்கு சார்வாகம் போன்ற நாத்திக ஞான மரபு இருந்துள்ளது. காபாலிகம், காளாமுகம், பாசுபதம் போன்ற தாந்த்ரீக மரபுகள் இருந்துள்ளன. எங்கும் நில்லாத சித்தர்களின் மரபு இருந்துள்ளது. என்னுடையது வெண்முகில்களின் வழி என ஓஷோ அதைத்தான் சொல்கிறார்.

பௌத்த மரபிலும் இத்தகைய ஞான மரபுகள் அனைத்தும் உண்டு. ஆனால் அனைத்தையுமே புத்தரின் முகங்களாக அவர்கள் ஆக்கிக்கொள்வார்கள். கருணை மிக்க புத்தருக்கு நிகராகவே யோகமோகினியை அணைத்துப் புணர்ந்ந்துகொண்டிருக்கும் புத்தரும் உண்டு. கால வடிவமாகக் கொடூர முகம் கொண்ட புத்தரும் உண்டு

தொண்ணூறுகளுக்குப் பின் உலகமயமாக்கல் தொடங்கியது. தொழில்நுட்பம், பண்பாடுகளை உருக்கி இணைத்தது. மானுட ஞானங்கள் அனைத்தும் ஒற்றையிடத்தில் குவிந்தன. ஓஷோவின் கேலியும் கிறுக்கும்தான் இன்று ஊடகமெங்கும் விரவிக் கிடக்கின்றன.

முகநூல் கேளிக்கைகளில் ஊறிய ஓர் இளைஞன் ஓஷோவை இன்று படித்தால், அவன் என்ன செய்கிறானோ அதைத்தான் ஓஷோ செய்திருப்பதாகத் தோன்றும். ஆனால் அதுவே அவனை ஓஷோவுக்குக் கொஞ்சம் அருகில் கொண்டு செல்லும். கொஞ்சம் அவன் செவிகொடுத்தான் என்றால், கைமுத்திரைகளும் வாய்ச்சொற்களும் விளையாட்டுக்காட்ட, கண்களால் மெய்மையைச் சொல்லும் விசித்திரமான ஒரு புத்தர் அவர் என்று அவன் அறிவான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x