Published : 04 Oct 2022 07:30 AM
Last Updated : 04 Oct 2022 07:30 AM

சூரிய, சந்திர பிரபையில் மலையப்பர் பவனி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாள் இரவு பெரிய சேஷ வாகனத்தில் தொடங்கிய வாகன சேவை, தொடர்ந்து காலை, இரவு என இரு வேளைகளிலும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 7-ம் நாளான நேற்று காலை சூரிய பிரபை வாகனத்தில், மச்ச அவதார அலங்காரத்தில் ஸ்ரீமன் நாராயணராக மலையப்பர் காட்சியளித்தார்.

வாகன சேவையில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நடனக் கலைஞர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். மாலையில் கோயில் ரங்க நாயக மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத
மலையப்பருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இரவு, சந்திரபிரபை வாகனத்தில் மலையப்பர் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதிலும் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்தனர். திருமலை சந்திரனுக்குரிய திருத்தலம் என்பதால் பக்தர்கள் ஏராளமானோர் சுவாமியை வழிபட்டனர்.

பிரம்மோற்சவத்தின் 8-ம் நாளான இன்று காலை 7 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது. இதற்காக திருத்தேரில் அனைத்து அலங்காரமும் செய்து முடிக்கப்பட்டுள்ளது. தேரோட்டத்தை தொடர்ந்து கடைசி வாகன சேவையாக இன்று இரவு குதிரை வாகனத்தில் ஏழுமலையான் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.

நாளை சக்கர ஸ்நானம்

பிரம்மோற்சவத்தின் கடைசி நாளான நாளை 5-ம் தேதி காலை, திருமலையில் வராக சுவாமி திருக்கோயிலின் அருகே உள்ள சுவாமி புஷ்கரணியில் சக்கரத்தாழ்வாருக்கு திருமஞ்சனம் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து சக்கர ஸ்நான நிகழ்ச்சிகள் நடைபெறும். இத்துடன் பிரம்மோற்சவம் நிறைவடைய உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x