Published : 18 Sep 2022 06:01 AM
Last Updated : 18 Sep 2022 06:01 AM

108 வைணவ திவ்ய தேச உலா - 2. உறையூர் அழகிய மணவாளர் பெருமாள்

முனைவர் கே. சுந்தரராமன்

108 வைணவ திவ்ய தேச தலங்களுள், திருச்சி மாவட்டம், உறையூர் அழகிய மணவாளர் பெருமாள் கோயில் இரண்டாவது திவ்ய தேசமாக போற்றப்படுகிறது. திருக்கோழி, உறந்தை, நிகளாபுரி, திருவுறையூர் என்றும் இவ்வூர் அழைக்கப்படும். இத்தலம் பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவரான திருப்பாணாழ்வாரின் அவதாரத் தலம் ஆகும்.

சோழ நாட்டு யானை, உறையூர் வந்தபோது கோழி ஒன்று அந்த யானையைத் தாக்கி ஓடச் செய்ததால், இவ்வூருக்கு ‘கோழியூர்’என்றும் ‘திருக்கோழி’என்றும் பெயர் கிட்டியது. திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து 5 கிமீ தொலைவிலும், திருவரங்கம் ரங்கநாதர் கோயிலில் இருந்து 3 கிமீ தொலைவிலும் இக்கோயில் அமைந்துள்ளது.

தான் எழுதிய பெரிய திருமொழியில் ஒரே ஒரு பாசுரத்தில் இத்தலத்தைப் போற்றி, திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.

கோழியும் கூடலும் கோயில் கொண்ட கோவலரே ஒப்பர் குன்றமன்ன

பாழியும் தோளும் ஓர் நான்குடையர் பண்டு இவர் தம்மையும் கண்டறியோம்

வாழியரோ இவர் வண்ணமெனில் மாகடல் போன்று உளர் கையில் வெய்ய

ஆழி ஒன்று ஏந்தி ஓர் சங்கு பற்றி அச்சோ ஒருவர் அழகியவா


மூலவர் : அழகிய மணவாளர்

தாயார்: கமலவல்லி நாச்சியார்

தீர்த்தம்: கமலபுஷ்கரிணி, கல்யாண தீர்த்தம்

ஆகமம்: பாஞ்சராத்ரம்

விமானம்: கமல விமானம்

தல வரலாறு

துவாபர யுகத்தில் தர்மவர்ம சோழரின் வம்சத்து அரசர் நந்த சோழர் உறையூர் பகுதியை ஆண்டு வந்தார். ரங்கநாதரின் பக்தரான இவருக்கு நீண்ட காலமாக குழந்தைப் பேறு கிட்டவில்லை. மன்னர், தன் வருத்தத்தை ரங்கநாதரிடம் தெரிவித்தார். அவரும், தன் பக்தருக்காக, மகாலட்சுமியையே அவரது மகளாக அவதரிக்குமாறு பணித்தார்.

ஒரு சமயம் மன்னர் வேட்டைக்குச் சென்றபோது, ஒரு தடாகத்தில், தாமரை மலரில் படுத்திருக்கும் குழந்தையைக் கண்டார். மகிழ்ச்சி அடைந்த மன்னர் அக்குழந்தையை அரண்மனைக்கு கொண்டு சென்று கமலவல்லி என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். பருவம் அடைந்ததும் அவளுக்கு திருமணம் செய்ய மன்னர் எண்ணினார். ஒருநாள் தோழியருடன் கமலவல்லி வனத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, குதிரையில் பயணிக்கும் ரங்கநாதரைக் காண்கிறார். அவரையே மணக்க வேண்டும் என்று உறுதி கொள்கிறார். இதைத் தொடர்ந்து, மன்னரின் கனவில் தோன்றிய பெருமாள், கமலவல்லியை மணக்க விரும்புவதாகக் கூறுகிறார். மன்னரும், கமலவல்லியை ஸ்ரீரங்கம் அழைத்துச் செல்கிறார். ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதருடன் கமலவல்லி ஐக்கியமானார். மன்னரும் தனது மகளுக்காக கோயில் எழுப்பினார்.


நாச்சியார் கோயில்

தாயாரின் அவதாரத் தலம் என்பதால் இத்தலம் நாச்சியார் கோயில் என்று அழைக்கப்படுகிறது. மேலும், இங்கு தாயாரே பிரதானமாகக் கருதப்படுகிறார். இங்கு பெருமாளுக்குரிய அனைத்து ஆராதனைகளும், கமலவல்லித் தாயாருக்கு நடைபெறும். மூலஸ்தானத்தில் அழகிய மணவாளப் பெருமாளும், கமலவல்லித் தாயாரும் மணக் கோலத்தில் வடக்கு திசை நோக்கி ரங்கநாதரைப் பார்த்தவாறு நின்றபடி அருள்பாலிக்கின்றனர். திருமணத் தடை உள்ளவர்கள், ஆயில்யம் நட்சத்திர தினத்தில் தாயாருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் விரைவில் திருமணம் நிச்சியமாகும் என்பது நம்பிக்கை.

வைகுண்ட ஏகாதசி தினத்தில் இத்தலத்தில் தாயார் மட்டுமே சொர்க்கவாசல் கடக்கிறார். ரங்கநாதர் மார்கழியில் வைகுண்ட வாசல் கடந்ததும், தை அல்லது மாசியில் வரும் ஏகாதசி தினத்தில், கமலவல்லி நாச்சியார் சொர்க்கவாசல் கடக்கிறார். பங்குனி உத்திர திருவிழாவின்போது, நம்பெருமாள் இத்தலத்துக்கு எழுந்தருளி, கமலவல்லி தாயாருடன் சேர்த்தி சேவை அருள்கிறார். மீண்டும் சுவாமி ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாயகி தாயாருடன் சேர்த்தி சேவை அருள்கிறார். இவ்வாறு பங்குனித் திருவிழாவில், பெருமாள் இரண்டு தாயாருடன் சேர்த்தி சேவை அருள்வதைக் காண கண்கோடி வேண்டும்.

5 நிலை கோபுரம் கொண்டு இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கோயில் பிரகாரத்தில் நம்மாழ்வார், ராமானுஜருக்கு சந்நிதிகள் உள்ளன.

திருவிழாக்கள்

புரட்டாசி நவராத்திரி விழா, கார்த்திகை திருப்பாணாழ்வார் 10 நாள் திருவிழா, மார்கழி வைகுண்ட ஏகாதசி 21 நாள் வைபவம் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x