சுத்தி செய்யும் பஞ்சகவ்யம்

சுத்தி செய்யும் பஞ்சகவ்யம்
Updated on
1 min read

இந்து சமயத்தில் ஐந்து என்ற எண்ணிற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. பஞ்சகவ்யம், பஞ்சோபசாரம், பஞ்சமகாயக்ஜம், பஞ்ச மகாபாபம், பஞ்சபூதம், பஞ்சகோசம், பஞ்சசம்ஸ்காரம், பஞ்சசபை, பஞ்சலோகம், பஞ்சதந்திரம், பஞ்சமுகம், பஞ்சாபிஷேகம், பஞ்சாங்கம், பஞ்சகங்கை, பஞ்சாமிர்தம் என அடுக்கிக்கொண்டே போகலாம்.

பஞ்ச என்றால் ‘ஐந்து’, கவ்ய(ம்) என்றால் ‘பசுவிடமிருந்து’ அல்லது ‘பசுவினுடையது’ என்று பொருள். பசுவிலிருந்து கிடைக்கப்படும் ஐந்து பொருட்களை சரியான விகிதாசாரத்தில் கலந்து தயாரிக்கப்படும் கலவை பஞ்சகவ்யம் எனப்படும். பால், தயிர், நெய், கோமியம், கோமயம் (பசுஞ்சாணம்) ஆகியன பசுவிடமிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களாகும்.

இந்த ஐந்து பொருட்களுக்கும் பஞ்சபூதங்களில் ஒவ்வொன்றைச் சுத்தி செய்யும் திறன் உள்ளது. பால் ஆகாசத்தைச் சுத்தி செய்யும். தயிர் வாயுவைச் சுத்தி செய்யும். நெய் அக்னியைச் சுத்தி செய்யும். கோமியம் ஜலத்தைச் சுத்தி செய்யும். கோமயம் ப்ருதிவியைச் சுத்தி செய்யும். மனித சரீரம் பஞ்சபூதங்களால் உருவானபடியால் மேற்கூறியபடி, பால், சோர்வடைந்த ஆத்ம (பிராண) சக்தியைச் சீர் செய்யும். தயிர், சீர்கெட்டுப் போன வாயுவை சரி செய்யும். நெய், உஷ்ணச் சீர்கேட்டைச் சரி செய்யும். கோமூத்திரம், நீர்க்கட்டு சம்பந்தப்பட்ட உபாதைகளைச் சரி செய்யும். கோமயம், உடம்பில் உள்ள அசுத்த மலங்களை நீக்கும்.

பஞ்சகவ்யத்தை உட்கொள்வதால் ஆத்ம சுத்தியும், சரீர சுத்தியும் அடைய முடியும் என்றும் சாஸ்திரம் கூறுகிறது. மேலும் பஞ்சகவ்யத்தை உட்கொள்வதால் உடம்பின் நோய் எதிர்ப்பு சக்தி வலுவடைகிறது என்ற நம்பிக்கையும் நிலவி வருகிறது. செடிகளுக்கும் பயிர்களுக்கும் செயற்கையான நச்சுப் பொருட்கள் அடங்கிய உரங்களைத் தவிர்த்து, பஞ்சகவ்யத்தை உரமாக உபயோகிப்பதன் மூலம் இயற்கை விவசாயமும் வெற்றிகரமாக நடக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in