Published : 04 Jun 2014 09:44 AM
Last Updated : 04 Jun 2014 09:44 AM

எஸ்எஸ்எல்சி சிறப்பு துணைத்தேர்வு: ‘தட்கல்’ திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் - அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவிப்பு

எஸ்எஸ்எல்சி சிறப்பு துணைத்தேர்வுக்கு தனித் தேர்வர்கள் தட்கல் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் கு.தேவராஜன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஜூன், ஜூலை மாதத்தில் நடக்கவுள்ள 10-ம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வுக்கு நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கத் தவறி, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்களிடமிருந்து சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தத் தேர்வில் பங்கேற்க, கடந்த மார்ச் மாதம் எஸ்எஸ்எல்சி தேர்வை பள்ளி மாணவராகவோ அல்லது தனித் தேர்வராகவோ எழுதியிருக்க வேண்டும். பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் வருகை புரியாத அனைத்துப் பாடங்களையும் உடனடித் தேர்வில் எழுத விண்ணப்பிக்கலாம்.

தேர்வுக் கட்டணம்

சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் தேர்வெழுத விரும்பும் தனித்தேர்வர்கள் தங்களது மாவட்டத்துக்குரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஜூன் 6, 7 ஆகிய தேதிகளில் பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும். தேர்வுக் கட்டணம் ரூ.125. சிறப்பு அனுமதி கட்டணம் ரூ.500. பதிவுக் கட்டணம் ரூ.50 என மொத்தம் ரூ.675. இக்கட்டணத்தை விண்ணப்பம் பதிவு செய்யும் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டும். தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தேவராஜன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x