Published : 24 Jun 2014 07:16 PM
Last Updated : 24 Jun 2014 07:16 PM

கேப்டன் பொறுப்பை குக் கைவிட வேண்டும்: ஜெஃப்ரி பாய்காட் காட்டம்

இங்கிலாந்து கேப்டன் அலிஸ்டர் குக் பேட்டிங் ஃபார்ம் மோசமாகி வருகிறது, அவர் கேப்டன் பொறுப்பைக் கைவிட இதுவே சிறந்த தருணம் என்று ஜெஃப்ரி பாய்காட் கருத்துத் தெரிவித்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 350 ரன்கள் வெற்றி இலக்குடன் ஆடி வரும் இங்கிலாந்து 6 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் என்று தோல்வி முகம் காட்டியுள்ளது. இன்று 5ஆம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து இன்னும் 58 ஓவர்களை மீதமுள்ள 4 விக்கெட்டுகளைக் கொண்டு சமாளிக்குமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கையின் தம்மிக பிரசாத் நேற்று அருமையாக வீசி இங்கிலாந்தின் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதில் குக் விக்கெட்டை 16 ரன்களில் அவர் வீழ்த்தினார்.

தொடர்ந்து ஆஷஸ் தொடர் முதல் பேட்டிங்கில் சொதப்பி வரும் குக் உடனே கேப்டன் பொறுப்பை உதற வேண்டும் என்று பாய்காட் கூறியுள்ளார். அவர் பிபிசி-க்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

கேப்டன் குக் படு மோசமாக ஆடி வருகிறார், அவர் ராஜினாமா செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது. அவர் செய்வாரா இல்லையா என்பது தெரியாது, ஆனால் நேரம் வந்து விட்டது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-0 தோல்வி என்ற துர்கனவு முடிந்தது என்று நினைத்தோம் ஆனால் இலங்கைக்கு எதிராகவும் அது தொடர்கிறது. இந்த இங்கிலாந்து அணி எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை.

அவர் இந்தப் பணியில் மகிழ்ச்சியாக இல்லை, டிராட் சென்று விட்டார், பீட்டர்சன் இல்லை, இந்த நிலையில் இவரும் சொதப்பினால் அணி என்னவாகும் என்பதை அவர் உணர வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ளார் பாய்காட்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x