Last Updated : 07 Apr, 2016 11:27 AM

 

Published : 07 Apr 2016 11:27 AM
Last Updated : 07 Apr 2016 11:27 AM

பைபிள் கதைகள் 1: தோட்டத்தை இழந்த தோழர்கள்

இத்தனை அழகான பூமியை கடவுள் எதற்காகப் படைத்திருப்பார்? சந்தேகமே வேண்டாம்; மனிதர்களுக்காகவே அவர் பூமியைப் படைத்தார்.

மனிதர்களைப் படைக்கும் முன் கடவுள் வானதூதர்களை உண்டாக்கினார். அவர்கள் சர்வ வல்லமைகொண்ட கடவுளுக்கு கீழ்படிந்து நடக்கும் அவரது ஊழியர்கள். அவர்கள் கடவுளைப்போல் ஆவித்தன்மை கொண்டவர்கள். ஆனால் அவரைப்போல் தலைமைப் பண்பு கொண்டவர்கள் அல்ல. இந்த ஊழியர்களில் ஒருவன் கடவுளைப்போல் இந்த பிரபஞ்சத்தை ஆள விரும்பினான்.

அவருக்கு எதிரியாக மாறினான். எனவே கடவுள் அவனுக்குத் தந்திருந்த புனிதத்தன்மையை இழந்தான். சாத்தானாக போகும்படி கடவுளால் சபிக்கப்பட்டான். கோபம்கொண்ட சாத்தான், “ நீர் படைத்த பூமியின் மீதும் அதில் வாழும் மனிதர்கள் மீதும் நான் ஆட்சிசெலுத்துவேன்” என்று கடவுளிடம் சவால் விட்டான். ‘உன்னால் அது முடியாது’ என்று கடவுள் புன்னகை புரிந்தார்.

அழகிய தோட்டம்

பூமியையும் மனிதர்களை சாத்தான் ஏன் ஆள விரும்பினான்? ஏனென்றால் கடவுளின் கைவண்ணத்தில் படைப்பின் உச்சமாக பூமியே இருந்தது. எனவே அது பூலோக சொர்க்கம் எனப்பட்டது. அப்படிப்பட்ட பூமியை மேலும் அர்த்தமுள்ளதாகவும் அழகானதாகவும் மாற்றிட விரும்பிய கடவுள் முதல் மனிதனை உண்டாக்கினார்.

மண்ணை எடுத்து, தன் சாயலில் ஒரு மனித உடலை உருவாக்கினார். பின்பு அந்த உடலின் மூக்கிற்குள் காற்றை ஊதினார், அப்போது அந்த உடலுக்கு உயிர் வந்தது. அவன் சுவாசிக்க ஆரம்பித்தான். ஆதாம் என அவனுக்குப் பெயரிட்டார். அக்கணமே அவனுக்கு சிந்திக்கும் ஆற்றலையும் பசியையும் அளித்தார். கடவுளாகிய தன் தந்தையைக் கண்டு அவருக்குக் கீழ்படிந்தான் ஆதாம். அவனது கீழ்படிதலைக் கண்ட கடவுள் அகமகிழ்ந்தார். அவன் வசிக்க அழகிய தோட்டம் ஒன்றை உருவாக்கினார்.

அதுவே ஏதேன் தோட்டம். அழகின் உச்சமாக இருந்த அத்தோட்டத்தில் வசிக்கத் தொடங்கிய ஆதாமுக்கு கடவுளாகிய யகோவா தேவன் ஒரு வேலையைக் கொடுத்தார். அத்தோட்டத்தில் அன்புடன் வாழும் எல்லா விலங்குகள், பறவைகளுக்கு பெயர் சூட்டும்படிக் கூறினார். தனக்களிக்கப்பட்ட வேலையை சரியாகச் செய்து தந்தையை மகிழ்விக்க விரும்பினான் ஆதாம். அதனால் அவகாசம் எடுத்துக்கொண்டான். பொருத்தமான பெயர்களைச் சூட்ட, விலங்குகள், பறப்பன, ஊர்வன ஆகிய அனைத்து உயிர்களையும் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான்.

அப்போது அங்கிருந்த எல்லா உயிர்களும் ஜோடி ஜோடியாக இருந்தன. ஆனால் தனக்கு மட்டும் ஏற்ற ஒரு ஜோடி இல்லையே என ஏங்கினான். அவனது ஏக்கத்தைப் போக்கவிரும்பினார் யகோவா. ஆதாமை நன்றாகத் தூங்க வைத்து, அவனுடைய விலா எலும்புகளில் ஒன்றை எடுத்தார். அந்த விலா எலும்பினால் ஆதாமுக்காக ஒரு பெண்ணை உண்டாக்கினார். அந்தப் பெண்ணை அவனுக்குத் தோழியாக்கினார். ஏதேன் தோட்டத்தின் மலர்களோடு பூமியின் முதல் நட்பு மலர்ந்தது.

தீயவனின் பொறாமை

ஆதாமும் ஏவாளும் மட்டற்ற மகிழ்ச்சியுடன் தோட்டத்தை வலம் வந்தார்கள். இதே மகிழ்ச்சியும் அமைதியும் அவர்கள் உள்ளத்தில் என்றும் தங்கியிருக்க வேண்டுமென கடவுள் விரும்பினார். ஏதேன் தோட்டத்தின் அழகையும் ஆதாம் ஏவாளின் மகிழ்வையும் கண்ட சாத்தான் பொறாமையால் புழுங்கினான். கடவுளின் படைப்புகள் மீது அவனால் நேரடியாக கைவைக்கமுடியாது. எனவே அவற்றின் உள்ளத்துள் ஊடுருவ தக்க தருணத்தை எதிர்பார்த்து ஒவ்வொரு நொடியும் காத்திருந்தான்.

ஏதேன் தோட்டத்தின் மரங்கள் தருகிற பழங்களை சாப்பிடலாம் என்று ஆதாம் ஏவாளிடம் கடவுள் சொல்லியிருந்தார். “ஆனால் ஒரேயொரு மரம் உங்களுக்குரியதல்ல; அதிலிருந்து கிடைக்கும் பழங்களை மட்டும் நீங்கள் உண்ணக் கூடாது. இதை அறிந்திருந்தும் அதை மீறினால் அதன் சம்பளமாக மரணம் நேரும்” என்று எச்சரிக்கை செய்திருந்தார்.

தோட்டத்தை இழந்தார்கள்

ஒருநாள் ஆதாம் பழங்களைப் பரித்துவரச் சென்றிருந்தான். ஏவாள் தனியாக இருந்தாள். அவளது தனிமையை சாத்தான் பயன்படுத்திக் கொண்டான். ஏவாளை நெருங்கிய ஒரு பாம்பு அவளிடம் பேசியது. எந்த மரத்தின் பழத்தைச் சாப்பிடக் கூடாது என்று கடவுள் சொன்னாரோ அந்த மரத்திலிருந்த பழத்தைப் பறித்துச் சாப்பிடும்படி ஏவாளிடம் சொன்னது. பாம்புகளை கடவுளாகிய யகோவா தேவன் உண்டாக்கியபோது அவற்றுக்கு பேசும் திறனை அவர் உண்டாக்கவில்லை. அப்படிப்பட்ட பாம்பிற்குள் ஊருருவிய சாத்தான் அதற்குள்ளிருந்து பேசினான். “விலக்கப்பட்ட மரத்தின் அந்தப் பழத்தைச் சாப்பிட்டால் கடவுளைப் போல் ஆக முடியும்!” என்று ஏவாளை ஏமாற்றினான்.

ஒருகணம் சிந்திக்கத் தவறிய ஏவாள், அதை உண்மையென்று நம்பினாள். பழத்தைப் பறித்துச் சாப்பிட்டாள். அங்கே வந்த ஆதாமுக்கும் அதைச் சாப்பிடக் கொடுத்தாள். “ நான் கடவுளின் வார்த்தைகளைத் தட்டமாட்டேன்” என்று மறுத்திருக்கவேண்டிய ஆதாம் தோழியின் வார்த்தைகளை நம்பினான். பழத்தை உண்டு முடித்தபோது வெட்கமும் பயமும் அவர்களை ஆட்கொண்டது.

தற்காலிக வெற்றியைப்பெற்றுவிட்ட சந்தோஷத்தில் கடவுள் அங்கே பிரசன்னமாகும்முன் பாம்பிலிருந்து வெளியேறி ஓடினான் சாத்தான். ஆதாம் ஏவாளைக் குறை கூறினான். ஏவாள் பாம்பை குறை கூறினாள். ஆனால் அவர்களது விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாத கடவுள் அவர்களை ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியே அனுப்பினார். “ ஆதாம்! நீ கீழ்படிதலை மறந்து, பாவம் செய்தபடியால் இனி பூமியில் நீ வியர்வை சிந்தி உழைத்து உன் உணவைப் பெறுவாய்” என்றார்.

தங்கள் அழகிய தோட்ட வீட்டை இழந்து வெளியே வந்த ஆதாமும் ஏவாளும் நிறைய பிரச்சினைகளைச் சந்தித்தார்கள். ஏதேன் தோட்டத்தில் திரும்பிய பக்கமெல்லாம் பழ மரங்களைக் கண்ட அவர்கள் பூமியில் முள் செடிகளையும் புதர்களையும் கண்டார்கள். கடவுளுக்குக் கீழ்ப்படியாமல், அவருடனிருந்த தங்கள் அன்பை முறித்துக்கொண்டதால் வாழ்க்கை வாழ்வது ஒரு தினசரி போராட்டமாக மாறியது. ஆனால் கடவுள் இந்த முழு பூமியையும் ஒரு நாள் ஏதேன் தோட்டத்தைப் போல் அழகாக மாற்றப் போவதாக வாக்குத் தந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x