Published : 12 Nov 2021 12:11 PM
Last Updated : 12 Nov 2021 12:11 PM

குருப்பெயர்ச்சி பொதுப் பலன்கள்:  மீன ராசி வாசகர்களே (13.11.2021 முதல் 13.4.2022 வரை)

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

வேதாந்தம், சித்தாந்தம் பேசி மற்றவர்களை வழிநடத்தும் நீங்கள், சொந்த விஷயத்தில் தடுமாறுவீர்கள். சிகரத்தைத் தொட்ட போதும் தலைக்கனம் கொள்ளாத நீங்கள், அடித்தட்டு மக்களுக்காக அயராது உழைப்பீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து கொண்டு ஓரளவு வசதி, வாய்ப்புகளையும், திடீர் யோகங்களையும், பணவரவையும் தந்து கொண்டிருந்த குருபகவான் 13.11.2021 முதல் 13.4.2022 வரை ராசிக்கு 12-ம் வீடான விரய ஸ்தானத்தில் மறைவதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமையும், அலைச்சலும் இருக்கும். செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

பழைய வீட்டை சிலர் இடித்து புதுப்பிப்பீர்கள். சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ அப்ரூவல் கிடைத்து சிலர் புதிதாக வீடு கட்டத் தொடங்கு வீர்கள். லோன் கிடைக்கும். உறவினர், நண்பர்கள் வீட்டு திருமணம், கிரகப் பிரவேசம், காது குத்து போன்ற சுப நிகழ்ச்சிகளையெல்லாம் நீங்களே செலவு செய்து முன்னின்று நடத்துவீர்கள்.

குரு உங்கள் சுகஸ்தானத்தை பார்ப்பதால் தாயாரின் உடல் நிலை சீராகும். அடிக்கடி பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். நல்ல காற்றோட்டம், குடிநீர் உள்ள வீட்டுக்கு மாறுவீர்கள். சிலர் வேறு ஊருக்குக் குடிப்பெயர்வீர்கள். கூடாப்பழக்க வழக்கமுள்ளவர்களின் நட்பைத் துண்டிப்பீர்கள். குரு ஆறாம் வீட்டைப் பார்ப்பதால் பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்ய வழி கிடைக்கும். பெரிய நோய் இருப்பது போன்ற பிரமை ஏற்பட்டு நீங்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். குரு எட்டாம் வீட்டைப் பார்ப்பதால் ஆயுள், ஆரோக்கியம் கூடும். வழக்குகள் சாதகமாகும். ஷேர் மூலம் பணம் வரும். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

13.11.2021 முதல் 30.12.2021 வரை அவிட்டம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசாங்க அதிகாரிகள், அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் உதவியால் தடைபட்ட காரியங்களை முடிப்பீர்கள்.

31.12.2021 முதல் 02.03.2022 வரை சதயம் நட்சத்திரத்துக்கு குருபகவான் செல்வதால் குடும்பத்தில் அவ்வப்போது சச்சரவு வரும். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. தவிர்க்க முடியாத செலவுகளால் திணறுவீர்கள். திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்யாதீர்கள்.

02.03.2022 முதல் 13.04.2022 வரை குருபகவான் தன் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தில் செல்வதால் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வந்து சேரும்.

வியாபாரத்தில் சில புதிய அனுபவங்கள் கிடைக்கும். தேங்கிக் கிடந்த சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்று முடிப்பீர்கள். வேலையாட்கள் ஒத்துழைப்பு தந்தாலும் அவ்வப்போது முரண்டு பிடிப்பார்கள். புதிதாக அறிமுகமாகும் நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். புகழ்பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். கடையையும் நவீனமயமாக்குவீர்கள். சங்கத்தில் மறைமுக எதிர்ப்புகள் இருந்தாலும் உங்களுக்கென்று தனி இடம் உண்டு. இரும்பு, உணவு, ரியல் எஸ்டேட், பதிப்பகம், சிமெண்ட் வகைகளால் லாபம் கிடைக்கும்.

உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். மூத்த அதிகாரிகளுடன் சின்னச் சின்ன முரண்பாடுகள் வந்து போகும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் நினைத்ததை முடிப்பீர்கள். வேற்றுநாட்டு நிறுவனங்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். அரசுப் பணியாளர்கள் அலுவலக ரகசியங்களை வெளி யிடாமல் இருப்பது நல்லது. பதவி உயர்வையும் எதிர் பார்க்கலாம். பழைய சம்பள பாக்கியும் கைக்கு வரும். இந்த குரு மாற்றம் சுபச் செலவுகளைத் தருவதாகவும் நட்பு வட்டத்தை விரிவடையச் செய்வதாகவும் உங்களுக்கு அமையும்.

பரிகாரம்: தஞ்சை மாவட்டம் வலங்கைமான் வட்டத்தில் ஆலங்குடியில் வீற்றிருக்கும் ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரரையும், குருபகவானையும் புனர்பூசம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். ஏழைப்பிள்ளைகளின் கல்விக்கு உதவுங்கள். வெற்றி கிட்டும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x