Last Updated : 15 Oct, 2021 07:27 PM

 

Published : 15 Oct 2021 07:27 PM
Last Updated : 15 Oct 2021 07:27 PM

சங்கராபரணியில் ஏப்ரல் மாதம் புஷ்கரணி விழா: விரைவில் 80 அடியில் பிரம்மாண்ட சிவன் சிலை

புதுச்சேரி

சங்கராபரணி ஆற்றில் 2023ஆம் ஆண்டு ஏப்ரலில் புஷ்கரணி விழா நடப்பதையொட்டி திருக்காஞ்சி கெங்கவராக நதீஸ்வரர் கோயிலில் கங்கா ஆரத்தி சிறப்பு பூஜை சனிக்கிழமைதோறும் நடக்கிறது. அத்துடன் இங்கு 80 அடி பிரம்மாண்ட சிவன் சிலை அமைக்கப்படவுள்ளது.

புதுச்சேரி திருக்காஞ்சியில் உள்ள கெங்கவராக நதீஸ்வரர், மேற்கு நோக்கி காட்சி தருகிறார். மயிலை கபாலீஸ்வரர், திருக்கடையூர் வைத்தீஸ்வரர், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆகியோரும் மேற்கு நோக்கியே தரிசனம் தருகிறார்கள்.

புதுச்சேரியில் வில்லியனூர் திருக்காஞ்சி கெங்கவராக நதீஸ்வரர் கோயிலில் புஷ்கரணி விழா நடத்த முடிவு எடுக்கப்பட்டது. அதன்பின் புஷ்கரணி விழா தொடர்பாக அரசு சார்பில் பல்வேறு குழுக்கள் அமைத்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு முன் வரலாறு இல்லை என்பதால் இதுவே புதுச்சேரியில் முதல் முறையாக நடத்தப்படும் புஷ்கரணி விழாவாகும். இதற்காக மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கியதன் மூலம் கோயில் திருப்பணிகள், படித்துறை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.

இவ்விழா தொடர்பாகக் கோயில் சிவாச்சாரியார் சரவணனிடம் கேட்டதற்கு, "ஒவ்வொரு ஆண்டும் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியடையும்போது குறிப்பிட்ட ராசிக்குரிய நதியில் நடைபெறுவதுதான் புஷ்கரணி விழா. ஒரு நதியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகத்தான வைபவம் இது. 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுவது மகா புஷ்கரணி என்று சிறப்பிக்கப்படுகிறது.

குரு இடம்பெயரும் ராசிக்குரிய நதியில் முதல் 12 நாட்களில் நடைபெறும் புஷ்கரணி விழாவில் மும்மூர்த்திகளும், தேவர்களும், ரிஷிகளும் வந்து நீராடி மகிழ்வதாகவும், நீராடும் மக்களுக்கு பித்ருதோஷம் உள்பட அனைத்துவிதமான தோஷங்களும் நீங்கி முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.

அந்த வகையில் மீனம் ராசியில் இருந்து மேஷம் ராசிக்கு குரு பகவான் இடம் பெயர்வதால் வருகிற 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மேஷம் ராசிக்குரிய கங்கை நதிக்கு இணையான சங்கராபரணி நதியில் புஷ்கரணி விழா நடைபெற இருக்கிறது. புஷ்கரணி விழா சிறப்பாக நடைபெற வேண்டி சனிக்கிழமைதோறும் மாலை 6.30 மணி முதல் இரவு 7 மணி வரை கங்கா ஆரத்தி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களும் இதில் கலந்துகொண்டு வாழை மட்டையில் தீபம் ஏற்றி ஆற்றில் விட்டு வழிபடலாம்" என்று குறிப்பிட்டார்.

80 அடியில் சிவன் சிலை

புஷ்கரணி விழாவையொட்டி கெங்கரவராக நதீஸ்வரர் கோயிலில், சங்கராபரணி ஆற்றின் கரையோரத்தில் 80 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக சிவபெருமான் அமர்ந்த நிலையில் இருப்பது போன்ற சிலை அமைக்கப்பட உள்ளது. புஷ்கரணிக்கு முன்பாகச் சிலை அமைத்து பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x