

இந்துக் கோவில்களில், சுவாமி சன்னதியின் நுழைவாயிலின் இருபுறமும் துவார பாலகர்களை நாம் பார்த்திருப்போம். அதுபோல, தாயார் சன்னதியில் துவார பாலகியர் உண்டு.
ஆனால் தஞ்சை பெரிய கோவிலில் காணப்படும் துவார பாலகர்கள் சற்றே வித்தியாசமானவர்கள். இவர்களைக் கூர்ந்து கவனித்தால் அவர்கள் சொல்லும் சேதி புலப்படும்.
வலது பாதத்தைக் கவனித்தால், யானையை விழுங்க முயற்சிக்கும் பாம்பு ஒன்றைக் காணலாம். அவரது பாதத்தைவிடவும் உருவத்தில் யானை சிறிதாக உள்ளது. எனில் அவர் எவ்வளவு பெரியவர்! ஒரு யானையையே விழுங்க முயற்சிக்கிறது என்றால் அந்தப் பாம்பு எவ்வளவு பெரியதாக இருக்க வேண்டும்? அந்த யானையின் அருகில் நீளவாக்கில் உள்ள முதலையின் உருவமோ அதைவிடப் பெரிதாக உள்ளது.
ஆனால் அந்த துவார பாலகரோதான் அத்தனை பெரியவன் இல்லையென்கிறார். அவரது வலதுகைச் சுட்டுவிரல் உயர்ந்திருக்கிறது. தன்னைவிடப் பெரியவர் யார் என்பதை அடையாளம் காட்டுகிறது. அவரது இடது கை, தமக்குப் பின்னே உள்ள சன்னதியை கம்பீரத்துடன் சுட்டிக்காட்டுகிறது.
உள்ளே நடுநாயகமாக வீற்றிருக்கிறார் பெருவுடையார், பிரகதீஸ்வரர்.