Last Updated : 24 Jun, 2021 03:21 PM

 

Published : 24 Jun 2021 03:21 PM
Last Updated : 24 Jun 2021 03:21 PM

குளம்போல் தண்ணீர் நிரப்பப்பட்ட குளியல் தொட்டியில் குதூகலத்துடன் குளித்து மகிழ்ந்த திருவானைக்காவல் கோயில் யானை

குளம்போல் தண்ணீர் நிரப்பப்பட்ட குளியல் தொட்டியில் குதூகலத்துடன் குளித்து மகிழ்ந்த திருவானைக்காவல் கோயில் யானை அகிலா.

திருச்சி

யானைகள் இயல்பாகவே தண்ணீரைக் கண்டால் குதூகலமாகிவிடும். தண்ணீரை உறிஞ்சி உடலில் விசிறியடித்துக் கொள்ளும். அந்த வகையில், திருச்சி திருவானைக்காவல் கோயில் யானை 'அகிலா', தனக்காகக் கட்டப்பட்ட குளியல் தொட்டியில் முதல் முறையாக இன்று இறங்கி குதூகலத்துடன் குளித்து மகிழ்ந்தது.

பஞ்சபூதத் தலங்களில் நீர்த்தலமாக திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில் விளங்குகிறது. இந்தக் கோயிலில் 'அகிலா' என்ற யானை 2011 முதல் சேவையாற்றி வருகிறது.

யானை 'அகிலா'வை அதன் பாகன்கள் தினமும் ஷவரில் குளிப்பாட்டி வந்த நிலையில், கோயில் வளாகத்துக்குள்ளேயே நாச்சியார் தோப்புப் பகுதியில் 20 அடி நீளம், 20 அடி அகலம், 6 அடி ஆழத்தில் சுற்றுச்சுவருடன் கூடிய குளியல் தொட்டி கட்டும் பணி அண்மையில் தொடங்கியது. சுவர்கள் பூசப்படாத நிலையில், சிறிதளவு தண்ணீர் நிரப்பி, குளியல் தொட்டிக்குள் இறங்கி ஏறுவதற்கு யானை 'அகிலா'வுக்குச் சில நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், குளியல் தொட்டி கட்டுமானப் பணி முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், இன்று (ஜூன் 24) முதல் முறையாக தண்ணீர் நிரப்பப்பட்ட குளியல் தொட்டிக்குள் இறங்கி ஆனந்தமாகக் குளித்தது யானை 'அகிலா'. தகவலறிந்து சுற்றுப்பகுதி மக்கள் வந்து, யானை குளிப்பதைப் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.

இதுகுறித்து, யானைப் பாகன் பா.ஜம்புநாதன், உதவி பாகன் பா.அர்ஜுன் ஆகியோர், 'இந்து தமிழ் திசை' இணையதளத்திடம் கூறுகையில், "இதுவரை யானை 'அகிலா'வை ஷவரில் குளிப்பாட்டி வந்தோம். வழக்கமாக தினமும் 2 முறையும், கோடைக்காலத்தில் 3 முறையும் குளிப்பாட்டுவோம்.

தற்போது குளியல் தொட்டி கட்டி முடிக்கப்பட்டுள்ளதால், இன்று முதல் முறையாக குளியல் தொட்டிக்குள் இறக்கிக் குளிப்பாட்டினோம். குளம்போல் தேங்கிய தண்ணீரில் இறங்கியதால் யானை 'அகிலா' மிகவும் மகிழ்ச்சி அடைந்தது. சுமார் இரண்டரை மணி நேரம் தண்ணீரில் புரண்டும், தண்ணீரை உடல் மீது பீய்ச்சி அடித்தும் ஆனந்தமாகக் குளித்தது.

குளியலுக்கு ஒரு முறை பயன்படுத்தப்படும் தண்ணீரை மீண்டும் பயன்படுத்தாமல், அந்தத் தண்ணீரைக் கோயில் வளாகத்தில் உள்ள தோட்டத்துக்குப் பாய்ச்சவுள்ளோம். ஒரு நாளில் எத்தனை முறை குளிப்பாட்டினாலும், ஒவ்வொரு முறையும் புதிதாகத் தண்ணீர் நிரப்பித்தான் குளிப்பாட்டவுள்ளோம். இதுதவிர, வழக்கம்போல் காலை, மாலை வேளைகளில் யானை அகிலாவுக்கு நடைப்பயிற்சியும் வழங்கி வருகிறோம் என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x