Published : 23 Jun 2021 01:45 PM
Last Updated : 23 Jun 2021 01:45 PM

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேகம் 

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேகம்.

திருச்சி

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேகம் இன்று நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடைபெறும் விழாக்களில் ஜேஷ்டாபிஷேகம் விழா முக்கியமான ஒன்றாகும். ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் பெரிய திருமஞ்சனம் ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேகம் இன்று (ஜூன் 23) நடைபெற்றது.

ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி காலை 6 மணிக்கு கருட மண்டபத்தில் இருந்து திருமஞ்சன ஊழியர்கள், சீமான்தாங்கிகள், நாச்சியார் பரிகளம் ஆகியோர் புறப்பட்டு காவிரி ஆற்றுக்கு வந்தனர். அங்கு கோயில் வழக்கப்படி கோயில் அதிகாரிகள், பணியாளர்கள், மிராசுதாரர்களுக்கு மரியாதை வழங்கப்பட்டது.

பின்னர், காவிரி ஆற்றில் 1 தங்கக் குடம், 28 வெள்ளிக் குடங்களில் புனித நீர் சேகரிக்கப்பட்டது. அங்கிருந்து காலை 7 மணிக்கு தங்கக் குடத்தில் உள்ள புனித நீர் யானை மீது வைத்தும் 28 வெள்ளிக் குடங்களைத் தோளில் சுமந்தும் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து புனித நீர் ஊர்வலமாக அம்மா மண்டபம் சாலை, ராஜகோபுரம் வழியாக கோயிலுக்கு எடுத்துவரப்பட்டது.

பின்னர், மூலவர் ரங்கநாதர், உற்சவர் நம்பெருமாள் மற்றும் உபயநாச்சியார்கள் திருமேனியில் உள்ள கவசங்கள், திருவாபரணங்கள் அனைத்தும் களையப்பட்டு எடை சரிபார்க்கப்பட்டது. சிறு பழுதுகள் செப்பனிட்டு, தூய்மை செய்து மெருகூட்டப்பட்டன.

பின்னர், உற்சவ நம்பெருமாள் மற்றும் உபயநாச்சியாருக்கு காலை 9.30 மணியளவில் திருமஞ்சனம் நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் கோயிலில் மூலவர் ரங்கநாதருக்கு அபிஷேகம் மற்றும் திருமஞ்சனம் எதுவும் செய்யப்படுவதில்லை. அவரது திருமேனி சுதையினால் செய்யப்பட்டதாகும். இந்த சுதை திருமேனியை ஆண்டுக்கு இருமுறை பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் தனித் தைலத்தைப் பூசிப் பாதுகாத்து வருகின்றனர். இந்தத் தைலம் சந்தனம், சாம்பிராணி, அகில், வெட்டிவேர் உள்பட வாசனை திரவியங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான முதல் தைலகாப்பு மூலவர் பெரிய பெருமாள் மீது பூசப்பட்டது. இதையடுத்து, பெருமாளின் திருமுகம் தவிர்த்து, திருமேனியின் இதர பகுதிகள் மெல்லிய துணிகளால் தற்காலிகத் திரையிட்டு மறைக்கப்பட்டன. 48 நாட்களுக்குப் பிறகு இந்த தைலம் உலர்ந்த பின்தான் பெரிய பெருமாளின் திருமேனியை முழுமையாக தரிசிக்க முடியும். அதுவரை பெரிய பெருமாளின் திருமேனியில் முகத்தை மட்டும் தரிசிக்க முடியும். மூலவர் பெரிய பெருமாளுக்கு பதிலாக உற்சவர் நம்பெருமாள் மற்றும் உபயநாச்சியார்களுக்கும் ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது.

ஜேஷ்டாபிஷேகத்தின் ஒரு பகுதியாக கருவறை மற்றும் அதைச் சார்ந்த பகுதிகளில் வருடாந்திர பராமரிப்பு மற்றும் சிறப்பு துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஜேஷ்டாபிஷேகத்தின் மறுநாளான நாளை (ஜூன் 24) காலை திருப்பாவாடை எனப்படும் தளிகை நிகழ்ச்சி நடைபெறும். அப்போது, மூலஸ்தானத்துக்கு எதிரே உள்ளே மண்டபத்தில் தரையில் விரிக்கப்பட்ட துணியில் பெருமளவில் குவிக்கப்படும் அன்ன பிரசாதத்தில் பலாச்சுளை, தேங்காய், மாங்காய், வாழைப்பழம், நெய் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் சேர்க்கப்பட்ட சாதத்தை பெரிய பெருமாளுக்கு படைக்கப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

இந்த விழாவில் கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x