Last Updated : 26 Mar, 2021 04:50 PM

 

Published : 26 Mar 2021 04:50 PM
Last Updated : 26 Mar 2021 04:50 PM

 சொந்த வீடு அமையுமா?  வீடு மனை யோகம் தரும் வேலவன்! 

ஒவ்வொருவரின் வாழ்விலும் உணவு, உடை, உறைவிடம் என மூன்று விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்த மூன்றிலும் மிக மிக முக்கியமானது உறைவிடம். வீடு என்பதுதான் பெரும்பாலானோரின் கனவாகவும் லட்சியமாகவும் ஆசையாகவும் இருக்கிறது.

ஒரு ஜாதகருக்கு சொந்த வீடு அமையுமா? எந்த இடத்தில் அமையும்? அவர் பிறந்த ஊரில் சொந்த வீடு அமையுமா? வசித்துக் கொண்டிருக்கும் ஊரில் சொந்த வீடு அமையுமா? வெளிநாட்டில் வீடு அமையுமா? எந்த திசையைப் பார்த்த வீடு அமையும்? என்பதெல்லாம்தான் நூற்றுக்கு தொந்நூறு பேரின் சிந்தனையாக இருக்கிறது.

எந்த திசையைப் பார்த்து உறங்க வேண்டும், எந்த திசையை நோக்கி அவர் தலை வைத்து படுக்க வேண்டும், எந்தெந்த வண்ணங்களை வீட்டில் பயன்படுத்தலாம், எந்தெந்த வண்ணங்களில் தரைத்தளம் அமையலாம் என்றெல்லாம் ஒருவரின் ஜாதகத்தைக் கொண்டே சொல்லிவிடலாம் என்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள்.

இப்போதைய சூழ்நிலையில், தனி வீடு என்ற கலாச்சாரம் மாறி அடுக்குமாடி குடியிருப்புகளின் கலாச்சாரம் வளர்ந்து நிற்கிறது. இந்தச் சூழ்நிலையில் எந்தந்த திசையைப் பார்த்து எது எப்படி அமைய வேண்டும் என்று சொல்வதற்கு சில விஷயங்கள் ஜாதகத்தில் ஆராய வேண்டியிருக்கிறது. எந்தவொரு சூழ்நிலையிலும் தலைவாசல்தான் பிரதானமாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர காவலுக்கு போடப்பட்டிருக்கும் இரும்புக் கதவையோ அல்லது அடுக்குமாடி குடியிருப்புகளில் பொதுவாக அனைவரும் நுழையக்கூடிய வாசல்களையோ நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது.

ஒவ்வொருவருடைய வீட்டின் தலைவாசலைத் தான் பிரதானமாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அது எந்த ஊராக இருந்தாலும் சரி - அது எந்த நாடாக இருந்தாலும் சரி. தலைவாசலை தான் நாம் பிரதானமாக எடுத்துக் கொள்ளவேண்டும். அப்படி பார்க்கும்போது, ஒவ்வொருவருடைய ராசிக்கும் ஒவ்வொரு திசையானது கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஒருவருக்கு சொந்த வீடு அமையுமா என்பதை லக்னத்திலிருந்து நான்காவது வீட்டை ஆராய்ந்து பார்த்து அதன் பிறகு முடிவு எடுக்க வேண்டும். நான்காவது வீட்டின் அதிபதி பலமாக இருந்தால் கண்டிப்பாக அவருக்கு சொந்த வீடு அமையும். குறைந்தபட்சம் சொந்த மனையாவது அமையும். நான்காவது அதிபதி பலமாக இருந்து லக்னாதிபதி பலம் பெற்று இருந்தால் நிச்சயமாக சொந்த ஊரிலேயே சொந்த வீடு அமையும் என்பது விதி.

லக்னாதிபதியின் பலம் இறங்கி நான்காம் வீட்டு அதிபதியும் பலமிழந்து காணப்படும் நிலையில் செவ்வாய் பலமாக இருந்தால் நிச்சயமாக அவருக்கு சொந்த வீடு - மனை யோகம் உண்டு.
பொதுவாகச் சொல்வதென்றால் நான்காம் வீட்டு அதிபதி அல்லது செவ்வாய் மிகவும் பலம் வாய்ந்து இருந்தால், அவருக்கு சொந்த வீடு மனை உண்டு. நான்காம் வீட்டு அதிபதியும் பலமிழந்து அல்லது செவ்வாயும் பலமிழந்து ஒருவருக்கு வீடு அமையுமானால் அவர் பெயரில் இருக்கக்கூடிய வீடு அல்லது மனையில் அவரால் வசிக்க முடியாது. அல்லது அது நீண்ட நாளைக்கு வராது என்பார்கள்.

சொந்த வீடு அமைவதற்கு பரிகாரம் என்ன என்றெல்லாம் கேட்பார்கள் பலரும். முருகப்பெருமானை தொடர்ந்து வணங்க வேண்டும். ஆழ்ந்த பக்தியுடன் முருகக் கடவுளை தொடர்ந்து வணங்கி வரவேண்டும். நவகிரகங்களில் செவ்வாய் கிரகத்துக்கு பூமிகாரகன் என்று பெயர். செவ்வாயினுடைய அதிதேவதை முருகன். யாருக்கெல்லாம் சொந்த வீடு மனை வேண்டும் என்று ஆசையும் கனவும் இருக்கிறதோ... அவர்கள் முருகக் கடவுளை வழிபடுவதன் மூலம் சொந்த வீடு மனை பாக்கியம் அமையும் என்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள்.

செவ்வாய்க்கிழமை தோறும் முருகப்பெருமானை செவ்வரளி மாலை சார்த்தி எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து அக்கம்பக்கத்தாருக்கு வழங்குவோம். வீடு மனை யோகம் கிடைப்பது உறுதி என்கிறார் பாஸ்கர குருக்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x