Last Updated : 12 Mar, 2021 01:37 PM

 

Published : 12 Mar 2021 01:37 PM
Last Updated : 12 Mar 2021 01:37 PM

முன்னோர் வழிபாடு; குலதெய்வ வழிபாடு; மாசி அமாவாசையில் நான்குபேருக்கு உணவுப்பொட்டலம்! 

மாசி அமாவாசை தினத்தில், முன்னோர் வழிபாடு செய்வோம். தர்ப்பணம் முதலான கடமைகளைச் செய்து நம்முடைய முன்னோர்களை வேண்டுவோம். நம் குலதெய்வத்தை மனதார நினைத்துக்கொண்டு வேண்டுவோம். மாசி மாத அமாவாசை நன்னாளில், நான்கு பேருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்குவோம். முன்னோர்களின் ஆசியைப் பெறுவோம்.

மாசி மாதம் மகத்துவமான மாதம். மாசி மாதத்தில் கலைகளையும் கல்வியையும் கற்றறியலாம். உபநயனம் முதலான விசேஷங்கள் செய்யலாம். தீர்த்த நீராடுவது மிகுந்த புண்ணியத்தைத் தரும் என்றெல்லாம் போற்றுகிறார்கள் ஆச்சார்யர்கள்.

மாசி மாதத்தில் முன்னோர் வழிபாடு செய்வதும் அவர்களுக்குப் படையலிடுவதும் நம் குலத்தைக் காக்கும். குடும்பத்தை மேம்படுத்தும். சந்ததியைச் சிறக்கச் செய்யும் என்கிறது சாஸ்திரம்.

முன்னோர் வழிபாடு என்பதும் குலதெய்வ வழிபாடு என்பதும் மிக மிக முக்கியம். முன்னோர்களுக்கு ஒரு வருடத்துக்கு 96 தர்ப்பணங்கள் செய்யவேண்டும் என்கிறது தர்ம சாஸ்திரம். மாதந்தோறும் வருகிற அமாவாசை, ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பு, கிரகண காலங்கள், திதி, புரட்டாசி மகாளய பட்சத்தின் பதினைந்து நாட்கள் என 96 தர்ப்பணங்கள் செய்யவேண்டும் என அறிவுறுத்துகின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்.

மாசி மாதத்தின் அமாவாசை தினம் 13ம் தேதி (சனிக்கிழமை). இந்தநாளில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வோம். எள்ளும் தண்ணீரும் விடுவோம். முன்னோர்களின் படங்களுக்கு பூக்களிட்டு, அலங்கரித்து, நமஸ்கரித்து குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து பிரார்த்தனை செய்வோம்.

அதேபோல், நாளைய தினம் மாலையில் குலதெய்வத்துக்கு பொங்கலிட்டு வேண்டிக்கொள்வோம். வீட்டைச் சுத்தப்படுத்தி, வாசலில் மாவிலை தோரணம் கட்டி, குலதெய்வப் படத்துக்கு பூக்களிடுவோம். புடவை, ஜாக்கெட், பழங்கள், மங்கலப் பொருட்கள் வைத்து வேண்டிக்கொள்வோம். அந்தப் புடவை முதலான மங்கலப் பொருட்களை யாரேனும் சுமங்கலிக்கு வழங்கி ஆசிபெறுவோம். இதுவரை தடைப்பட்டிருந்த மங்கல காரியங்கள் இனிதே நடந்தேறும். இல்லத்தில் ஒற்றுமையும் சந்தோஷமும் குடிகொள்ளும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x