மகா சிவராத்திரி ;  விரதம் இருந்தால் அஸ்வமேத யாகம் செய்த பலன்!  

மகா சிவராத்திரி ;  விரதம் இருந்தால் அஸ்வமேத யாகம் செய்த பலன்!  
Updated on
1 min read

மகா சிவராத்திரி நன்னாளில், சிவனாரை விரதம் மேற்கொண்டு தரிசிப்பதும் வேண்டுவதும் மகா புண்ணியமும் உன்னதமான பலன்களும் தரக்கூடியது. இந்த விரதத்தை முறையே கடைப்பிடித்து ஈசனைத் தொழுவோம். 11ம் தேதி வியாழக்கிழமை, மகா சிவராத்திரி.

சிவ வழிபாடுகளில் மிக மிக முக்கியமான நாளாகப் போற்றப்படுகிறது மகா சிவராத்திரி. இந்த நாளில், சிவ பக்தர்கள் கடைப்பிடிக்கக் கூடிய மிக முக்கியமான விரதம் மகா சிவராத்திரி விரதம் என்கின்றனர் சிவனடியார்கள். . சிவராத்திரி நன்னாளில் கண்விழித்து சிவபெருமானை வழிபட்டால் நம்முடைய பாவங்கள் அனைத்தும் விலகும்; கர்ம வினைகள் யாவும் நீங்கும் என விவரிக்கிறது சிவ புராணம்.

மகாசிவராத்திரி நாளில் விரதம் இருப்பது எப்படி? விரதம் இருப்பதால் ஏற்படும் பலன்கள் என்னென்ன என்றெல்லாம் ஆச்சார்யர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மாதந்தோறும் சிவராத்திரி விரதம் மேற்கொள்வது என்பதே மிகப்பெரிய புண்ணியம். நம்முடைய பாவங்களெல்லாம் தொலையும். கர்ம வினைகளெல்லாம் நீங்கும். அப்படி மாதந்தோறும் விரதம் இருக்க இயலாதவர்கள், மாசியில் வரும் மகா சிவராத்திரி நாளில், விரதம் இருந்தால், நாம் நம்மையும் அறியாமல் செய்த பாவங்களும் நாம் தெரிந்தே செய்த பாவங்களும் நீங்கும். கர்மவினைகள் அகன்று புண்ணியங்கள் பெருகும் என்பது ஐதீகம்.

சிவராத்திரி தினத்தன்று முழு உபவாசத்தைக் கடைப்பிடித்தால் நம் இல்லத்தில் உள்ள தரித்திரம் விலகும். வீட்டில் சுபிட்சம் குடிகொள்ளும். இல்லத்தில் தனம், தானியம் பெருகும். முக்கியமாக, முக்திப் பேறு அடையலாம் என்கிறார்கள் சிவாச்சார்யர்கள்.


மனிதர்களுக்கு மிகவும் தேவையானது என இரண்டு விஷயங்களைச் சொல்லுவார்கள். உணவு, தூக்கம் என்கிற இரண்டும் மிக மிக முக்கியம். . இந்த இரண்டையும் விலக்கி, சிவபெருமானுக்காக மகாசிவராத்திரி நாளில் விரதமிருப்பதுதான் இந்த நாளின் நோக்கம். விரதத்தின் தாத்பரியம். உணவையும் உறக்கத்தையும் விலக்கினால் புலன்கள் தானாகவே அடங்கும். அப்போதுதான் இறையுணர்வில் நாம் முழுவதுமாக லயிக்கமுடியும். அப்படியான கடவுள் சிந்தனையே முக்தியைத் தரவல்லது என்கிறார்கள் சிவனடியார்கள்.
அதுமட்டுமா? உணவை விடுப்பதும் தூக்கம் துறப்பதுமாக இருந்து, பக்தியில் திளைத்திருந்தால், காரியம் அனைத்தும் வீரியமாகும். செயல்களில் தெளிவு பிறக்கும். எண்ணம் போல் வாழ்க்கை அமையும்.

மகாசிவராத்திரி அன்று விரதம் மேற்கொண்டால், அஸ்வமேதயாகம் செய்த பலன் கிடைக்கும் என்கின்றன ஆகமங்கள். இந்த விரதத்தை 24 அல்லது 12 வருடங்களாவது மேற்கொள்ள வேண்டும். அன்றைய தினம் இரவு முழுவதும் சிவபுராணம் படிக்கலாம். கேட்கலாம். சிவ சிந்தனையுடன் இருக்க வேண்டும். இதனால் எல்லா சத்விஷயங்களும் கிடைக்கப் பெறலாம் எனப் போற்றுகின்றனர். வளமும் நலமும் பெற்று சந்ததி சிறக்க இனிதே வாழலாம் என்கிறார்கள்.

சிவம்... சிவம்... சிவம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in