Last Updated : 05 Mar, 2021 11:25 AM

 

Published : 05 Mar 2021 11:25 AM
Last Updated : 05 Mar 2021 11:25 AM

அஷ்டமியில் கஷ்டங்கள் தீர்க்கும் பைரவ வழிபாடு

அஷ்டமியில் பைரவரை வணங்குவோம். நம் கஷ்டங்களையெல்லாம் தீர்த்து வைப்பார் காலபைரவர்.

கலியுகத்துக்கு கால பைரவர் என்பார்கள். பெண் தெய்வங்களில் துர்கை வழிபாடு, வாராஹி வழிபாடு, பிரத்தியங்கிரா தேவி வழிபாடு முதலானவை முக்கியமான வழிபாடு என்பார்கள். இவர்கள் உக்கிர தெய்வங்கள் என்று சொல்லி சிலாகிக்கிறார்கள் சாக்த வழிபாடு செய்யும் அன்பர்கள்.

அதேபோல், ஆண் தெய்வங்களில் பைரவ வழிபாடு, நரசிம்மர் வழிபாடு, சரபேஸ்வர வழிபாடு முதலான வழிபாடுகள் முக்கியமான வழிபாடுகள் என்பார்கள். இந்த தெய்வங்கள், உக்கிர தெய்வங்கள் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

பைரவ மூர்த்தங்கள் பல திருநாமங்களில் உள்ளனர். அனைத்து சிவாலயங்களிலும் பைரவருக்கு தனிச்சந்நிதி அமைந்திருக்கிறது. சமீபமாக, பைரவருக்கென்றே தனிக்கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபடப்பட்டு வருகின்றனர்.

பைரவ மூர்த்தங்களுக்கு மிளகு கலந்த சாதம் நைவேத்தியம் செய்வது ரொம்பவே விசேஷமானது. பைரவருக்கு வடைமாலை சார்த்தி வேண்டிக்கொள்வதும் வழக்கு முதலான சிக்கல்களில் இருந்தும் பிரச்சினைகளில் இருந்தும் நிவர்த்தியாக்கும் என்பது ஐதீகம்.

கண்ணுக்குத் தெரிகிற எதிரிகளையும் கண்ணுக்குத் தெரியாத எதிர்ப்புகளையும் பலமிழக்கச் செய்து நம்மை வாழவைத்து அருளுவார் காலபைரவர். முன் ஜென்ம வினைகளின் வீரியத்தைக் குறைத்து, பாவங்களையெல்லாம் போக்கி அருளுவார். பக்கத்துணையாக இருப்பார் பைரவர் என்று ஆச்சார்யர்கள் விவரிக்கின்றனர்.

சஷ்டி திதி முருகப் பெருமானுக்கு உரியது. ஏகாதசி திதி பெருமாளுக்கு உகந்தது. சதுர்த்தி விநாயகருக்கும் பஞ்சமி வாராஹி தேவிக்கும் முக்கியமான நாள். திரயோதசி திதி என்பது பிரதோஷமாக சிவ வழிபாட்டுக்கு உரிய நாளாக போற்றி வணங்கப்படுகிறது.

இதேபோல், அஷ்டமி திதி என்பது பைரவ வழிபாட்டுக்கு உரிய நாளாகப் போற்றப்படுகிறது. தேய்பிறை அஷ்டமி என்பது கூடுதல் விசேஷமான நாளாகச் சொல்கின்றனர். தேய்பிறை அஷ்டமியில் அருகில் உள்ள சிவாலயத்துக்குச் செல்வதும் பைரவருக்கு செவ்வரளி மாலை சார்த்தி வேண்டுவதும் தடைகளையெல்லாம் தகர்க்கவல்ல வழிபாடு என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

நாளை 6ம் தேதி சனிக்கிழமை தேய்பிறை அஷ்டமி. இந்தநாளில், பைரவாஷ்டகம் பாராயணம் செய்வோம். பைரவரை தரிசிப்போம். செவ்வரளி மாலை சார்த்தி வணங்குவோம். முக்கியமாக, மிளகு கலந்த சாதம் நைவேத்தியம் செய்து அக்கம்பக்கத்தாருக்கு வழங்குவோம். நம்மைச் சுற்றியுள்ள துர்குணங்களும் தீய சக்திகளும் விலகும். இன்னும் குறிப்பாக, தேய்பிறை அஷ்டமி நன்னாளில், தெருநாய்களுக்கு பிஸ்கட்டோ உணவோ வழங்குவோம். நம் கர்மவினைகளையெல்லாம் போக்கி அருளுவார் காலபைரவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x