Last Updated : 23 Feb, 2021 02:48 PM

 

Published : 23 Feb 2021 02:48 PM
Last Updated : 23 Feb 2021 02:48 PM

காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள் வெண்ணெய்த்தாழி சேவை

வெண்ணய்த்தாழி சேவையில் காட்சியளித்த நித்ய கல்யாணப் பெருமாள்.

காரைக்கால்

காரைக்காலில் உள்ள புகழ்பெற்ற நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவ விழாவின் ஒரு நிகழ்வாக இன்று வெண்ணெய்த்தாழி சேவை நடைபெற்றது.

காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் 15 நாட்கள் சிறப்பான வகையில் நடைபெறும் பிரம்மோற்சவ விழா, கடந்த 16-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. ஏழாம் நாள் நிகழ்வாக, நேற்று (பிப். 22) மாலை நித்யகல்யாணப் பெருமாள்-ரங்கநாயகி தாயார் திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து இரவு யானை வாகனத்தில் பெருமாள் வீதியுலா நடைபெற்றது. பின்னர் கோயிலில் ருத்ர வேடத்தில் பெருமாள் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். தொடர்ந்து, திருப்பள்ளியறை சேவை நடைபெற்றது.

நேற்று மாலை திருக்கல்யாண கோலத்தில் காட்சியளித்த காரைக்கால் நித்ய கல்யாணப் பெருமாள்.

எட்டாம் நாள் நிகழ்வாக இன்று (பிப். 23) நித்யகல்யாணப் பெருமாள் வெண்ணெய்த்தாழி சேவை நடைபெற்றது. தொடர்ந்து திருப்பல்லக்கில் பெருமாள் மாடவளாகம், பெரிய வீதி வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. மாலை குதிரை வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வுகளில், கைலாசநாத சுவாமி, நித்யகல்யாணப் பெருமாள் வகையறா தேவஸ்தான அறங்காவல் வாரிய நிர்வாகிகள், நித்யகல்யாணப் பெருமாள் பக்தஜன சபாவினா், பக்தர்கள் திரளானோர் கலந்துகொண்டு பெருமாளை வழிபட்டனர்.

பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வுகளான தேரோட்டம் மற்றும் சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி நாளை (பிப். 24) நடைபெறுகிறது. திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாளுடன் இணைந்து திருமலைராயன்பட்டினம் கடற்கரையில் மாசி மக தீர்த்தவாரி 27-ம் தேதி, தெப்போற்சவம் மார்ச் 1-ம் தேதி, விடையாற்றி 2-ம் தேதி நடைபெறவுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x