Last Updated : 18 Feb, 2021 09:16 AM

 

Published : 18 Feb 2021 09:16 AM
Last Updated : 18 Feb 2021 09:16 AM

’என்னைக் கூப்பிடுங்கள், நான் வருகிறேன்!’ என்கிறார் ஷீரடி சாயிபாபா

‘என்னைக் கூப்பிடுங்கள். உங்களுக்காக நான் ஓடோடி வருகிறேன்’ என அருளியுள்ளார் ஷீரடி சாயிபாபா.

கலியுகத்தில் கண்கண்ட தெய்வங்களாக எத்தனையோ மகான்கள், நம் பாரத தேசத்துக்குப் பொக்கிஷமாகக் கிடைத்திருக்கிறார்கள். அந்த மகான்களை வணங்கித் தொழுதால்தான், நம் முந்தைய பிறவிக்கான பாவங்களை, கர்மாக்களை துடைத்தெடுக்கமுடியும் என்கிறார்கள் ஆன்றோர்கள்.

இந்த உலகின் மகான்கள், சத்புருஷர்கள். சித்த புருஷர்கள். சித்தர்களின் சாந்நித்தியமானது, அவர்களின் பூதவுடல் மறைந்துவிட்டாலும் புதைத்துவிட்டாலும் உலகெங்கும் வியாபித்து நமக்கு அருள் வழங்கிக் கொண்டே இருக்கும். சூட்சுமமாக நம்மை அரவணைத்துக் காத்துக் கொண்டே இருக்கும் என்று போற்றுகிறார்கள் ஆச்சார்யர்கள்.

பகவான் ஷீர்டி சாயிபாபா, அப்படிப்பட்ட சித்தபுருஷர். சாதாரண மனிதர்களுக்குக் கூட தன்னுடைய சக்தியையும் சாந்நித்தியத்தையும் மிக எளிமையாக உணர்த்தியவர். ‘எங்கெல்லாம் என் பெயர் உச்சரிக்கப்படுகிறதோ, எவரெல்லாம் என் பெயரைச் சொல்லுகிறார்களோ... அங்கே ஏதேனும் ஒருவடிவில் நான் வந்துவிடுவேன்’ என அருளியுள்ளார் ஷீர்டி சாயிபாபா.

ஷீர்டி எனும் வடக்கே உள்ள சின்னஞ்சிறிய கிராமம், இன்றைக்கும் உலகம் முழுக்க மந்திரச்சொல்லாகவே பார்க்கப்படுகிறது. மந்திரச்சொல்லாகவே உச்சரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் பாபாவுக்குக் கோயில் கட்டி வழிபட்டு வருகிறார்கள் பக்தர்கள்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள சாயிபாபா மிகப் பிரபலமான ஆலயம். தி.நகரில் உள்ள சாயிபாபா கோயில், மகாபலிபுரம் சாலையில் அமைந்திருக்கும் சாயிபாபா கோயில், செங்கல்பட்டை அடுத்த மாமண்டூரில் அமைந்துள்ள சாயிபாபா ஆலயம், நெல்லை தருவையிலும், மதுரை சோழவந்தானுக்குச் செல்லும் வழியிலும் என ஏராளமான ஆலயங்கள், பாபாவின் சக்தியை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கின்றன.
திருச்சி சமயபுரம் டோல்கேட்டில் உள்ள அக்கரைப்பட்டி சாயிபாபா கோயில், மிகப்பிரமாண்டமாக கட்டப்பட்டு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசித்தவண்ணம் இருக்கிறார்கள்.

‘சாய்ராம்’ என்றோ ‘பாபா’ என்றோ ‘சாய்பாபா’ என்றோ 'சாய் அப்பா’ என்றோ சாயி சித்தபுருஷரை எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். எப்போது வேண்டுமானாலும் அழைக்கலாம். ’அடுத்தது என்ன செய்யவேண்டும், இந்த துன்ப நிலையில் இருந்து மீள்வதற்கு வழியேதும் இல்லையா என்று ஏங்கிக் கலங்குபவர்கள், என்னை என் பெயர் சொல்லிக் கூப்பிடுங்கள். நான் உங்களைப் பார்க்க ஓடோடி வந்துவிடுவேன். உங்கள் கர்மாவைக் கழிப்பதற்கு பக்கபலமாக இருப்பேன்.

கர்மவினைகளைத் தொலைத்தால்தான் அடுத்தடுத்த நிலைக்கு நீங்கள் நகரவும் உயரவும் முடியும். என்னைக் கூப்பிடுங்கள். நான் வருகிறேன். நான் இருக்கிறேன்’ என சாயி பகவான் அருளியுள்ளார் என ‘சாயி சத்சரிதம்’ விவரிக்கிறது.

ஷீர்டி சாயிபாபாவை, ‘சாய்ராம் சாய் ராம் சாய்ராம்’ என்றோ அல்லது எப்படி கூப்பிட விருப்பமோ அப்படி அவரை கூப்பிடுங்கள். மனதாரக் கூப்பிடுங்கள். ஓடோடி வருவார் சாயிபாபா!

சாய்ராம் சாய்ராம் சாய்ராம்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x