Last Updated : 14 Feb, 2021 03:21 PM

 

Published : 14 Feb 2021 03:21 PM
Last Updated : 14 Feb 2021 03:21 PM

பிப்.22-ல் மாசி தெப்பத் திருவிழா: ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோயில் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி தொடக்கம்

திருச்சி

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோயில் மாசி தெப்பத் திருவிழா பிப்.22-ம் தேதி நடைபெறவுள்ளதையொட்டி மேலவாசலில் உள்ள தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மாசி தெப்பத் திருவிழா நாளை (பிப்.15) தொடங்கி பிப்.23-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

தெப்பத் திருவிழாவின் முதல் நாள் ஹம்ச வாகனத்திலும், 2-வது நாள் ஹனுமந்த வாகனத்திலும், 3-வது நாள் கற்பகவிருட்ச வாகனத்திலும், 4-வது நாள் வெள்ளி கருட வாகனத்திலும், 5-வது நாள் இரட்டைப் பிரபை வாகனத்திலும், 6-வது நாள் யானை வாகனத்திலும் நம்பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

தெப்பத் திருவிழாவின் 7-வது நாளில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளுகிறார். முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உத்சவம், விழாவின் 8-வது நாளான பிப்.22-ம் தேதி மாலை நடைபெறுகிறது. இதையொட்டி, ஸ்ரீரங்கம் மேலவாசலில் உள்ள 5 1/2 ஏக்கர் பரப்பிலான தெப்பக்குளத்தில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் இருந்து வாய்க்கால் மூலம் தண்ணீர் நிரப்பும் பணியும், மிதவைத் தெப்பம் தயாரிக்கும் பணியும் நடைபெற்று வருகின்றன.

தெப்பத் திருவிழா அன்று மாலை 3 மணியளவில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து திருச்சிவிகையில் புறப்பட்டு மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்துக்கு மாலை 5 மணிக்கு வந்து சேருகிறார்.

இரவு 7.15 மணியளவில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு , இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணி வரை தெப்ப உத்சவம் கண்டருளுகிறார்.

இரவு 9.15 மணிக்கு தெப்பக்குளத்தின் மைய மண்டபத்தைச் சென்றடைந்து, அங்கிருந்து இரவு 9.45 மணிக்குப் புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

தொடர்ந்து, 9-வது திருநாளான பிப்.23-ம் தேதி பந்தக் காட்சி நடைபெறும். இதையொட்டி, அன்று காலை 7 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி, பகல் 1.30 மணியளவில் தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் சேருகிறார். பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை திருமஞ்சனம் கண்டருளுகிறார். பின்னர், மாலை 7 மணிக்கு மண்டபத்திலிருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் புறப்பட்டு, பந்தக் காட்சியுடன் சித்திரை வீதிகளில் வலம் வந்து, படிப்பு கண்டருளி இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். இத்துடன் தெப்பத் திருவிழா நிறைவு பெறுகிறது.

விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் வேணு சீனிவாசன், ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து, உதவி ஆணையர்கள் கு.கந்தசாமி மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x