

ஏகாதசியில் பெருமாளை வணங்குவோம். விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து வேண்டிக்கொள்வது சுபிட்சத்தையும் நிம்மதியையும் தந்தருள்வார் வேங்கடவன்.
மார்கழி மாதம் முழுவதுமே மகாவிஷ்ணுவுக்கு உரிய நாள். மகாவிஷ்ணுவை மார்கழி மாதத்தில் ஏகாதசியில் மனமுருகி தரிசிப்போம். வழிபடுவோம். விஷ்ணு வழிபாட்டில், மார்கழி ஏகாதசி மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக போற்றப்படுகிறது.
இந்த நாள்தான், வைகுண்ட ஏகாதசியாக சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறுகின்றன. இதேபோல, ஒவ்வொரு மாதமும் வருகிற ஏகாதசி விரதம் மேற்கொள்வதற்கு உரிய நாள். ஏகாதசியில் விரதம் இருந்து பெருமாள் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்வது மகத்தான பலன்களை வழங்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
ஏகாதசியில் விரதம் மேற்கொண்டு துவாதசியில் நிறைவு செய்வார்கள் பக்தர்கள். இந்தநாளில், வீட்டில் உள்ள பெருமாள் படத்துக்கு துளசி மாலை சார்த்துவதும் துளசி தீர்த்தம் பருகுவதும் உன்னதமான பலன்களை வழங்கும்.
காலையும் மாலையும் விளக்கேற்றி விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வதும் ஒலிக்கவிட்டுக் கேட்பதும் எண்ணற்ற பலன்களைத் தரும். இல்லத்தில் மகாலக்ஷ்மி கடாக்ஷம் ததும்பும். இல்லத்திலும் உள்ளத்திலும் சுபிட்சமும் நிறைந்திருக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
ஞாயிற்றுக்கிழமை வருகிற ஏகாதசி, இன்னும் சிறப்பு வாய்ந்தது. இன்று ஞாயிற்றுக்கிழமை 7ம் தேதி ஏகாதசி. இந்த அற்புத நாளில், மாலையில் வீட்டில் விளக்கேற்றுவோம். மகாவிஷ்ணுவின் திருநாமங்களைச் சொல்லுவோம். எட்டெழுத்து மந்திரத்தை ஜபித்து வேண்டிக்கொள்வோம்.
மகாவிஷ்ணு காயத்ரி சொல்லி ஏகாதசி விரதம் மேற்கொள்வது மும்மடங்கு பலன்களைத் தந்தருளும் என்கிறார் அம்பிபட்டர். ஏகாதசி நாளில், மகாவிஷ்ணு காயத்ரி சொல்லி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வேண்டிக்கொண்டு, அக்கம்பக்கத்தாருக்கு வழங்கி பரந்தாமனின் பேரருளைப் பெறுவோம் என்று விவரிக்கிறார்.
இன்னல்களையெல்லாம் நீக்கி அருளுவார் வேங்கடவன். இதுவரையிலான தடைகளையெல்லாம் தகர்த்து அருளுவார் ஏழுமலையான்.