தாய்லாந்தில் அருளும் ஆண்டாள்

தாய்லாந்தில் அருளும் ஆண்டாள்
Updated on
2 min read

மத்திய அரசு கலச்சார அமைச்சகத்தின் நிதி உதவியுடன் கர்னாடக இசையில் பெண் சாகித்யகர்த்தாக்கள் என்னும் தலைப்பில் ஆறு விளக்க உரை நிகழ்ச்சிகளை நடத்த இருக்கிறார் டாக்டர் அலமேலு ராமகிருஷ்ணன். இதில் முதலாவது நிகழ்ச்சி சமீபத்தில் சென்னை, ராயப்பேட்டையில் அக்டோபர் 26-ம் தேதி, ஆர்.கே. கன்வன்சன் அரங்கில் நடந்தது.

காரைக்கால் அம்மையார், ஆண்டாள், அக்கமகாதேவி, செங்கோட்டை ஆவுடை அக்காள் ஆகியோரைப் பற்றி பல சுவையான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார் அலமேலு.

திருவாலங்காட்டு மூத்த பதிகம்

காரைக்கால் அம்மையார் தலைகீழாக கைகளால் நடந்தே இறைவனின் அருளைப் பெற்ற வரலாற்றை நெகிழ்ச்சியுடன் பேசினார் அலமேலு. அதோடு இரண்டு பதிகங்களையும் அற்புத திருவந்தாதியிலிருந்து இரண்டு பாடல்களையும் பாடினார்.

ஆண்டாளைப் போற்றிய கிருஷ்ண தேவராயர்

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என புகழப்படும் ஆண்டாளின் திருப்பாவைகளிலிருந்து இரண்டு பாடல்களையும் நாச்சியார் திருமொழியிலிருந்து இரண்டு பாசுரங்களையும் பாடினார்.

கிருஷ்ண தேவராயர் `அமுக்த மால்யாதா’ என்னும் நூலில் ஆண்டாளைப் போற்றி எழுதியிருக்கிறார் என்பதும் மார்கழி மாதத்தில் மட்டும் திருப்பதியில் சுப்ரபாதத்துக்குப் பதிலாக திருப்பாவை ஒலிப்பதும் ஆண்டாளின் பக்தி சிறப்புக்குச் சான்றுகள். தாய்லாந்தில் ஆண்டாளுக்கு கோயிலும் இருக்கிறது என்றார் அலமேலு.

தென்னாட்டு மீரா

வடக்கில் மீராவின் கதையைப் போல் விரிகிறது கர்நாடகத்தில் பிறந்த அக்கமகாதேவியின் கதை. சிவபிரேமையில் இருக்கும் அக்கமகாதேவிக்கு மிகக் குறைந்த வயதிலேயே வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்துவைக்கின்றனர். அவரின் நோக்கம் எல்லாம் சிவனை அடைவதிலேயே இருந்தது. சென்ன மல்லிகார்ஜுனாவை நாடி ஆந்திரத்தின் ஸ்ரீசைலம் அடைகிறார் அக்கமகாதேவி. அங்கு இறைவனை நினைத்து அக்கமகாதேவி தியானம் செய்த குகை இன்றைக்கும் கதலிவனம் என்ற இடத்தில் இருக்கிறது. அவரின் பாடல்முறையை `வசனா’ என்கின்றனர். அதில் சென்ன மல்லிகார்ஜுனா என்பது அவரின் முத்திரையாக வெளிப்படுகிறது. 30 வயதிலேயே இவர் சமாதி நிலையை அடைந்துவிடுகிறார். நிகழ்ச்சியில் மூன்று வசனா உருப்படிகள் பாடப்பட்டன.

செங்கோட்டை ஆவுடை அக்காள்

இவருக்குச் சிறிய வயதில் திருமணம் ஆனது. 10 வயதில் விதவை ஆனார். எந்தப் பிடிப்பும் இல்லாமல் அனாதரவான அந்தக் குழந்தைக்கு ஆதரவு தருபவரே ஞான குருவாகிறார். பேச்சு வழக்கில் பாமர மொழியில் ஏறக்குறைய 1000 பாடல்களை ஆவுடை அக்காள் எழுதியிருக்கிறார். பாரதியின் கவிதைகளில் இவரது தாக்கம் உண்டு. இவரின் சில பாடல்களை பம்பாய் சகோதரிகள் பாடி இசைக் குறுந்தகடை வெளியிட்டிருக்கின்றனர். அவரின் குருநாதரை மையப்படுத்தியும் பெருமைப்படுத்தியும் அத்வைத வேதாந்தக் கோட்பாடுகளையும் கொண்டு பெரும்பாலான பாடல்களை எழுதியிருக்கிறார். இவற்றில் சிலவற்றை அலமேலு அன்றைய நிகழ்ச்சியில் பாடினார்.

அலமேலு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in