Last Updated : 05 Feb, 2021 10:06 PM

 

Published : 05 Feb 2021 10:06 PM
Last Updated : 05 Feb 2021 10:06 PM

நோய் தீர்க்கும் வைத்தியர் தன்வந்திரி பகவான்! 

நமக்குத் தெரிந்தவர்களின் ஆரோக்கியத்துக்காக, தேக நலனுக்காக தீராத நோய் தீர வேண்டும் என்பதற்காக தன்வந்திரி பகவானை பிரார்த்திப்போம்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்றொரு புகழ் மிக்க வாசகம் உண்டு. நோயில்லாத வாழ்க்கையே பூமியின் சொர்க்கம் என்பார்கள். அப்பேர்ப்பட்ட நோய்களை போக்குவதற்கான, நோய்த் தாக்கத்தில் இருந்து விடுபடுவதற்காகவும் தெய்வங்கள் உண்டு. ஆலயங்கள் உள்ளன.

சிவபெருமான் குடிகொண்டிருக்கும் வைத்தீஸ்வரன் கோவில் அப்படிப்பட்ட திருத்தலம். அதேபோல வைஷ்ணவத்தில், திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில் வைத்திய க்ஷேத்திரம் என்று போற்றப்படுகிறது.

நோய்களைத் தீர்க்கும் தெய்வம் என்று தனியே போற்றப்படுகிறார் தன்வந்திரி பகவான். தமிழகத்தில், தன்வந்திரி பகவானுக்கென்று கோயில்கள் அவ்வளவாக இல்லை. ஆனாலும் பிற்காலத்தில், தன்வந்திரிக்கு சில இடங்களில் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. வழிபாடுகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

அதேசமயம், தன்வந்திரி பகவானை வீட்டிலிருந்தே வழிபடலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். திருச்சி ஸ்ரீரங்கம் திருத்தலத்தில், தன்வந்திரி பகவானுக்கு மிக அற்புதமான சந்நிதி அமைந்திருக்கிறது.

தன்வந்திரி பகவானை நோயுள்ளவர்கள் மனதார வழிபட்டால், தீராத நோயும் தீரும் என்கிறார் அம்பி பட்டாச்சார்யர். மேலும் அவர், நோயாளிகள் அவர்களுக்காக அவர்களே வழிபட வேண்டும் என்றில்லை. பிரார்த்தனை செய்யவேண்டும் என்றில்லை. நோயுற்றவர்களுக்காக எவர் வேண்டுமானாலும் வேண்டிக்கொண்டு, தன்வந்திரி பகவானை வழிபடலாம் என்று விவரிக்கிறார்.

பொதுவாகவே, திரயோதசி எனப்படும் பிரதோஷ நாள், சிவனாருக்கு உரிய நாள் என்பது போல், சஷ்டி திதி முருகக் கடவுளுக்கு உகந்தது என்பது போல், அஷ்டமி பைரவருக்கு உரிய நாள் என்பது போல, நரசிம்மருக்கு திரயோதசி எனும் பிரதோஷ நாள் சிறப்பு வாய்ந்தது போல், தன்வந்திரி பகவானுக்கு புதன் கிழமையும் சனிக்கிழமையும் திரயோதசி திதியும் மிகச் சிறந்த நாட்கள்.

சனிக்கிழமையில் தன்வந்திரி பகவானை வணங்குவோம். தேய்பிறை திரயோதசி என்பது இன்னும் மகத்துவமானது. தவிர, எந்த நாளிலும் தன்வந்திரியை வணங்கலாம். பூஜிக்கலாம். விரதம் மேற்கொள்ளலாம்.

ஓம் நமோபகவதே வாசுதேவாய
தன்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய
சர்வாமய விநாசனாய த்ரைலோக்யநாதாய
ஸ்ரீமஹா விஷ்ணவே நம:

என்பது ஸ்ரீதன்வந்திரி பகவான் மந்திரம்.

இந்த மந்திரத்தை, நோய்வாய்ப்பட்டவர்களுக்காக தினமும் 21 முறை சொல்லுங்கள். நீங்கள் யாருக்காக பிரார்த்தனை செய்தீர்களோ, அவர்களின் தீராத நோய்கள் அனைத்தும் தீர்ந்துவிடும். நீண்ட காலம், ஆரோக்கியமாக வாழ்வார்கள்.

பாரபட்சமில்லாமல், எல்லோருக்கும் வரம் தந்தருளுகிற வாசுதேவராக இருப்பவரே. அமிர்த கலசத்தை திருக்கரத்தில் ஏந்திக்கொண்டிருப்பவரே. மூவுலகத்தையும் பார்த்தபடி, சகல நோய்களையெல்லாம் தீர்த்து அருளுபவரே. மகாவிஷ்ணுவாக, திருமாலாக அவதரித்திருப்பவரே. தன்வந்திரி பகவானே... உமை வணங்குகிறேன். நோய்களையெல்லாம் தீர்த்தருள்வாயாக! என்று அர்த்தம்.

நமக்குத் தெரிந்தவர்களின் ஆரோக்கியத்துக்காக, தேக நலனுக்காக தீராத நோய் தீர வேண்டும் என்பதற்காக தன்வந்திரி பகவானை பிரார்த்திப்போம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x