Last Updated : 05 Feb, 2021 03:05 PM

 

Published : 05 Feb 2021 03:05 PM
Last Updated : 05 Feb 2021 03:05 PM

பிரிந்த தம்பதியை சேர்த்துவைக்கும் ராமாஷ்டகம்! 

ராமாஷ்டகத்தைப் படிக்கிறவார்களும், கேட்கிறவர்களும் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். சகல ஐஸ்வரியங்களும் பெறலாம். குடும்பத்தில் நிம்மதி தவழும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கும். பிரிந்த தம்பதியும் ஒன்று சேருவார்கள் என்கிறார் ராமகிருஷ்ண பட்டாச்சார்யர்.

’ஒரு வில், ஒரு இல், ஒரு சொல்’ என்பதே வாழ்க்கைத் தத்துவம். இதனை வாழ்ந்து காட்டிய தெய்வமாகத் திகழ்பவர் ஸ்ரீராமபிரான். ஸ்ரீராமபிரானை எப்போதெல்லாம் நினைத்து மனதார பிரார்த்தனை செய்கிறோமோ, அப்போதே நம் வாழ்க்கையை பூரணப்படுத்தி விடுகிறார் ஸ்ரீராமபிரான். அர்த்தமான வாழ்க்கையை நமக்குத் தந்தருளுகிறார் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி.

நம் வாழ்க்கையை உய்யும் பொருட்டு, நம் வாழ்க்கையை செம்மையாக வாழ்தலின் பொருட்டு, நமக்கு வேதவியாசர் அருளியதுதான் ராமாஷ்டகம். மிக மிக வலிமைமிக்கதும் குடும்பத்தில் நிம்மதியையும் ஒற்றுமையையும் தந்தருளும் அற்புதங்கள் கொண்டது என்று ராமாஷ்டகத்தைச் சொல்கிறார்கள் பக்தர்கள்.

வியாசரால் சொல்லப்பட்டதும், எளிமையானதும், ஏராளமான புண்ணியத்தைத் தருவதுமான ராமாஷ்டகத்தைப் படிக்கிறவர்களுக்கும் கேட்கிறவர்களுக்கும் மகா புண்ணியம் கிடைக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

கல்வி, செல்வம், கலை என்பவற்றைத் தரும் அற்புத பாராயணம் இது. அளவற்ற சுகம், சகல ஐஸ்வரியம், மங்காத புகழ், குடும்ப மேன்மை, தம்பதி ஒற்றுமை என தந்தருளும் வீரியம் மிக்க பாராயண வழிபாடு இது.

பஜே விசேஷ சுந்தரம் ஸமஸ்தபாப கண்டனம்
ஸ்வபக்த சித்தரஞ்ஜனம் ஸ தைவ ராம மத்வயம்

அதாவது, அதீதமான அழகுள்ளவரும், அனைத்துப் பாவங்களையும் போக்குபவரும், தனது பக்தர்களின் மனதை களிக்கச் செய்கிறவருமான ஸ்ரீராமனை பூஜிக்கிறேன் என்று அர்த்தம்.

ஜடாகலாப சோபிதம் ஸமஸ்தபாப நாஸனம்
ஸ்வபக்த பீதி பஜ்ஜனம் பஜேஹராம மத்வயம்

அதாவது அழகான திருமுடியினை உடையவரும், எல்லாப் பாவங்களையும் அழிப்பவரும், தன் பக்தர்களின் பயத்தைப் போக்குகின்றவருமான இணையற்ற ஸ்ரீராமனை துதிக்கிறேன் என்று அர்த்தம்.

நிஜ ஸ்வரூப போதகம் க்ருபாகரம் பவாபஹம்
ஸமம் சிவம் நிரஞ்ஜனம் பஜேஹ ராமமத்வயம்

அதாவது, ஆன்மாவின் வடிவை உணர்த்தி உபதேசிப்பவரும், கருணைக்கடலும், பிறப்பு இறப்பு என்ற பயத்தைப் போக்குபவரும், எங்கும் எப்போதும் ஒரே சம நிலையிலிருப்பவரும், மங்கலத்தைச் செய்கிறவரும், தோஷமற்றவரும், இணையற்றவருமான ஸ்ரீராமபிரானை வணங்குகிறேன்.

ஸப்ரபஞ்ச கல்பிதம் ஹ்யநாமரூப வாஸ்தவம்
நிராக்ருதிம் நிராமயம் பஜேஹ ராமமத்வயம்

அதாவது, உலகத்தையே காப்பவரும் நாமரூப மற்றவரும், எப்பொழுதுமுள்ளவரும், உருவமற்றவரும், அழிவற்றவரும், இணையற்றவருமான ஸ்ரீராமபிரானை நமஸ்கரிக்கிறேன்.

நிஷ்ப்ரபஞ்ச நிர்விகல்ப நிர்மலம் நிராமயம்
சிதேகரூப ஸந்ததம் பஜேஹ ராமமத்வயம்

அதாவது, பந்த பாசங்களுக்கு அப்பாற்பட்டவரும், நிர்குணமானவரும், பாபமற்றவரும், அழிவற்றவரும், ஒளிமயமானவரும், இணையற்றவருமான ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியை பூஜிக்கிறேன்.

பவாப்தி போதரூபகம் ஹ்யசேஷ தேஹ கல்பிதம்
குணாகரம் க்ருபாகரம் பஜேஹ ராம மத்வயம்

அதாவது, சம்சாரம் எனும் சாகரத்தைக் கடக்க உதவும் தோணியைப் போன்றவரும், எல்லோருடைய ஆன்மாவிலும் வியாபித்துள்ளவரும், குணங்களுக்கு இருப்பிடமானவரும், கருணைக் கடலும் இணையற்றவருமான ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியை வணங்கிப் போற்றுகிறேன்.

மஹாவாக்ய போதகைர் விராஜமான வாக்பதை
பரப்ரஹ்மவ்யாபகம் பஜேஹ ராமமத்வயம்

அதாவது, மஹா வாக்கியத்தின் பொருளை வெளிப்படுத்துகின்ற சிறந்த சொற்களால் கூறப்படும் பரப்பிரம்மமாவாகவும், எங்கும் நிறைந்திருப்பவராகவும் இணையற்றவருமாக உள்ள ஸ்ரீராமபிரானை பூஜிக்கிறேன்.

சிவப்ரதம் ஸுகப்ரதம் பவச்சிதம் ப்ரமாபஹம்
விராஜமான தேசிகம் பஜேஹ ராமமத்வயம்

அதாவது, நன்மைகளைக் கொடுப்பவரும், சுகத்தை அளிப்பவரும், ஜனனமரண பயத்தைப் போக்குபவரும், அஞ்ஞானத்தை அழிப்பவரும், ஆச்சார்யனாக எங்களுக்குள்ளே பிரகாசிக்கிறவரும், ஈடுஇணையற்றவருமான ஸ்ரீராமபிரானை வணங்குகிறேன்.

ராமாஷ்டகம் படத்யஸ்ஸுக கரம் ஸீபுண்யம்
வ்யாஸேன பாஷித மிதம் ஸ்ருனுதே மனுஷ்ய
வித்யாம் ஸ்ரியம் விபுல ஸெளக்ய மனந்த கீர்த்தி
ஸம்ப்ராவ்ய தேஹவிலயே லபதேச மோக்ஷம்
ஸ்ரீ ராம புஜங்காஷ்டகம் ஸம்பூர்ணம்

அதாவது, வியாசரால் சொல்லப்பட்டதும், எளிமையானதும், ஏராளமான புண்ணியத்தைத் தந்தருளக் கூடியதுமான ராமாஷ்டகத்தைப் படிக்கிறவார்களும், கேட்கிறவர்களும் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். சகல ஐஸ்வரியங்களும் பெறலாம். குடும்பத்தில் நிம்மதி தவழும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கும். பிரிந்த தம்பதியும் ஒன்று சேருவார்கள் என்கிறார் ராமகிருஷ்ண பட்டாச்சார்யர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x