Last Updated : 04 Feb, 2021 11:53 AM

 

Published : 04 Feb 2021 11:53 AM
Last Updated : 04 Feb 2021 11:53 AM

தை குருவாரம்... அஷ்டமி... குருவை வணங்குவோம்; கஷ்டமெல்லாம் தீர்க்கும் மகான் தரிசனம்

தை மாத குருவாரத்தில்... அற்புதமான வியாழக்கிழமையில், அஷ்டமியும் இணைந்த நன்னாளில், குருவை வணங்குவோம். குரு தட்சிணாமூர்த்தியை, குரு பிரம்மாவை, மகான்களைத் தரிசிப்போம்.

குருவாரம் என்று வியாழக்கிழமையைச் சொல்லுவார்கள். குரு பகவானுக்கு உரிய அற்புதமான நாள். குருவை வணங்குவதற்கும் குரு வந்தனம் சொல்லி அவர்களை ஆராதனை செய்வதற்கும் அற்புதமான நாள்.

நவக்கிரகத்தில் ஒரு கிரகமாகத் திகழ்பவர் வியாழ பகவான். தேவ குரு, அசுர குரு என்றும் உள்ளனர். நவக்கிரகத்தில் உள்ள குரு பகவான் தேவ குரு. இவரை பிரகஸ்பதி என்கிறோம். தேவகுருவான பிரகஸ்பதிக்கு, நவக்கிரகத்தில் ஒரு கிரகமாக அந்தஸ்து வழங்கி அருளினார் சிவபெருமான்.

குருவார வியாழக்கிழமையில், குருவுக்கு உகந்த நன்னாளில், நவக்கிரத்தில் உள்ள குருபகவானை வணங்குவதும் வழிபடுவதும் மிகச்சிறந்த பலன்களை வழங்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். அதேபோல், கல்லால மரத்தடியில் அமர்ந்து கொண்டு, சனகாதி முனிவர்களுக்கு உபதேசித்து அருளுகிற தட்சிணாமூர்த்தி, குரு அம்சமாக, குருவுக்கெல்லாம் குருவாகத் திகழ்கிறார்.

அனைத்து சிவாலயங்களிலும், குரு ஸ்ரீதட்சிணாமூர்த்தி தெற்குப் பார்த்து காட்சி தந்துகொண்டிருக்கிறார். தட்சிணாமூர்த்தி என்றாலே தென்முகக் கடவுள் என்றுதான் அர்த்தம். எனவே இந்தநாளில், குரு தட்சிணாமூர்த்தியை வணங்குவது ஞானத்தையும் யோகத்தையும் தந்தருளும் என்பது ஐதீகம். தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு, கொண்டைக்கடலை மாலை சார்த்துவது ரொம்பவே மகத்துவம் வாய்ந்தது.

இதேபோல், மகான்களை வணங்குவது நல்ல அதிர்வுகளை நமக்குள் உண்டாக்கும். மகான்கள் குருவுக்கு நிகரானவர்கள். குருவாகவே திகழ்பவர்கள். குரு அம்சமாக, குருவுக்கு உதாரண புருஷர்களாகப் போற்றப்படுபவர்கள்.

தை மாதம் விசேஷம். குருவாரம் விசேஷம். அஷ்டமி விசேஷம். அற்புதமான இந்தநாளில், மகான்களை வணங்குவோம். குரு ராகவேந்திரர், ஸ்ரீசாயிபாபா, காஞ்சி மகாபெரியவா முதலான எண்ணற்ற மகான்களை வணங்குவதும் வழிபடுவதும் மகத்தான பலன்களைத் தந்தருளும். ரமண மாலை பாராயணம் செய்து வணங்குவோம்.

குரு மகானை உரிய மந்திரங்களுடன் சொல்லி, மகான்களை வழிபடுவோம். வாழ்வில் இதுவரை இருந்த தடைகளையெல்லாம் தகர்த்தருளுவார்கள் மகான்கள்.
காஞ்சி மகான் அருளுரையை வாசிப்பதும் சாயி சத்சரிதத்தைப் பாராயணம் செய்வதும் எண்ணற்ற பலன்களையும் மனதில் தன்னம்பிக்கையையும் தந்தருளும் என்று போற்றுகிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x