Last Updated : 27 Jan, 2021 07:00 PM

 

Published : 27 Jan 2021 07:00 PM
Last Updated : 27 Jan 2021 07:00 PM

தைப்பூசம் ஸ்பெஷல் ; கஷ்டம் தீர்ப்பான் கந்தகோட்டம் முருகன்! 

கந்தகோட்ட முருகப்பெருமான் ஆலயத்துக்கு வந்து, அழகன் முருகனை மனதாரப் பிரார்த்தனை செய்வோம். தைப்பூச நாள் முழுவதும் நடை திறந்திருக்கும் கந்தகோட்ட கந்தபெருமானை வேண்டுவோம். நம் வாழ்வில் இதுவரை பட்ட கஷ்டங்களையெல்லாம் நிவர்த்தி செய்து அருளுவார் முத்துக்குமார சுவாமி.

சென்னை பாரிமுனையில் அமைந்துள்ளது கந்தகோட்டம் திருக்கோயில். இங்கே உள்ள முருகக் கடவுளின் திருநாமம் ஸ்ரீமுத்துக்குமார சுவாமி. பிரசித்தி பெற்ற திருத்தலம். வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், ஐப்பசி கந்தசஷ்டி என விழாக்கள் விமரிசையாக நடைபெறுகின்றன. முக்கியமாக தைப்பூசத் திருநாள் வெகு விமரிசையாக நடைபெறுகின்றன.

சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் பாரிமுனையில் அமைந்துள்ள முத்துக்குமார சுவாமி கோயில் முக்கியமானதாகக் கொண்டாடுகின்றனர் பக்தர்கள். வடபழநி முருகன் கோயிலில் தைப்பூச நன்னாளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசிப்பார்கள்.

அதேபோல், பாரிமுனையில் கந்தகோட்டம் என்று புகழப்படுகிற ஆலயத்தில், தைப்பூசத் திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தைப்பூச நன்னாளில், காலை ஐந்து மணிக்கு நடை திறக்கப்படும்.

காலையில் இருந்தே பக்தர்கள் தரிசனத்துக்கு வந்துவிடுவார்கள். சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் அமர்க்களப்படும். கந்தகோட்ட முருகப்பெருமானுக்குக் குளிரக் குளிர அபிஷேகங்கள் நடைபெறும். பின்னர் முத்துக்குமார சுவாமி ராஜ அலங்காரத்தில் அற்புதமாகக் காட்சி தந்து அருளுவார்.

கோயிலின் இன்னொரு சிறப்பம்சம்... வழக்கமாக மதியத்தில் உச்சிகால பூஜைக்குப் பின்னர் நடை சார்த்தப்படும். ஆனால் தைப்பூச நன்னாளையொட்டி மதியம் நடை சார்த்தப்படாது. காலை ஐந்து மணியில் இருந்து முருகப்பெருமானை கண் குளிரத் தரிசிக்கலாம். உச்சிகால பூஜையில், முத்துக்குமார சுவாமிக்கு விசேஷ அபிஷேகங்கள் நடைபெறும்.

மாலையில் கந்தகோட்டக் கோயிலின் உத்ஸவ மூர்த்தி, சர்வ அலங்காரத்துடன் திருவீதியுலா வருவார். கந்தகோட்டத்துக்கு வந்தாலே கஷ்டங்கள் தீரும் என்பது ஐதீகம்.
சுமார் 400 வருடங்கள் பழைமை வாய்ந்த கந்தகோட்ட முருகப்பெருமான் ஆலயத்துக்கு வந்து, அழகன் முருகனை மனதாரப் பிரார்த்தனை செய்வோம்.

தைப்பூச நாள் முழுவதும் நடை திறந்திருக்கும் கந்தகோட்ட கந்தபெருமானை வேண்டுவோம். நம் வாழ்வில் இதுவரை பட்ட கஷ்டங்களையெல்லாம் நிவர்த்தி செய்து அருளுவார் முத்துக்குமார சுவாமி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x