Last Updated : 22 Jan, 2021 03:52 PM

 

Published : 22 Jan 2021 03:52 PM
Last Updated : 22 Jan 2021 03:52 PM

நர்த்தன கணபதி; ஊர்த்துவ தாண்டவர்; அழகன் ஆறுமுகன்! சிற்பக் கலையில் பிரமிக்க வைக்கும் பேரூர் கோயில்

புராண - புராதனச் சிறப்பு மிக்க பேரூர்க் கோயிலின் ஒவ்வொரு தூண்டும் அற்புதம்... ஒவ்வொரு சிலையும் அதிசயம் என்று பூரிப்புடன் தெரிவிக்கின்றனர் பக்தர்கள்.

கோவை நகரில் உள்ள மிக முக்கியமான ஸ்தலம் பேரூர் திருத்தலம். புராண - புராதனப் பெருமை கொண்ட பேரூர்த் தலத்தில் அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறார் சிவபெருமான். இங்கே உள்ள சிவனாரின் திருநாமம் ஸ்ரீபட்டீஸ்வரர்.

காமதேனு, பட்டி எனும் பசுக்கள் வழிபட்டதால் சிவபெருமானுக்கு இந்தத் திருநாமம் அமைந்தது என விவரிக்கிறது ஸ்தல புராணம்.

கலை நயத்துடன் சிற்பங்களை அதிகம் கொண்ட கோயில்களில் பேரூர் பட்டீஸ்வரம் கோயிலும் ஒன்று. திருமலை நாயக்க மன்னரின் சகோதரர் அளகாத்ரி நாயக்கர் என்பவர், இங்கே இந்தத் தலத்தில் 36 தூண்களைக் கொண்ட பிரமாண்டமானதொரு கனகசபை மண்டபத்தை எழுப்பினார் என்று விவரிக்கிறது ஸ்தல வரலாறு.
இந்தக் கோயிலில், நர்த்தன கணபதி அற்புதக் கோலத்தில் காட்சி தருகிறார். இடது திருப்பாதத்தை மூஞ்சுறு வாகனத்தின் மீது ஊன்றியபடி காட்சி தருகிறார். வலது திருப்பாதம் மூஞ்சுறுவின் செவியைத் தொட்டபடி காட்சி தருகிறார்.

நர்த்தன கணபதிக்கு எட்டுத் திருக்கரங்கள் அமைந்திருக்கின்றன. வலஞ்சுழி கணபதியாக காட்சி தருகிறார். திருக்கரங்களில், மோதகம், அங்குசம், பாசம், கொம்பு முதலானவை ஏந்தியபடி காட்சி தந்தருள்கிறார்.

இதில் மூஷிக வாகனம் அழகுற அமைக்கப்பட்டிருக்கிறது. கலைநயத்துடனும் சிற்ப நுட்பத்துடனும் நர்த்தன கணபதி, நடனத் திருக்கோலத்தில் காட்சி தருவது வியப்பைக் கூட்டுகின்றன.

அண்ணன் கணபதி அப்படியென்றால்.. அழகன் முருகப் பெருமானைச் சொல்லவா வேண்டும்?

ஆறுமுகப் பெருமானின் சிற்பம் பிரமிக்க வைக்கிறது. ஆறுமுகம் பனிரெண்டு திருக்கரங்களுமாக, மயில் வாகனத்துடன் திகழ்கிறார் ஆறுமுகக் கடவுள். பனிரெண்டு திருக்கரங்கள்... அவற்றில் அபய வரத முத்திரைகளுடன் வஜ்ரம், கத்தி, சேவல், வில் முதலானவற்றை ஏந்தியபடி காட்சி தருகிறார் முருகக் கடவுள்.
ஆறுமுகத்தில், ஐந்து திருமுகங்களை தரிசிக்க முடியும். பின்பகுதியில் இன்னொரு முகம் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், மயிலின் முகம் கால்களும் நுட்பமாக செதுக்கப்பட்டுள்ளன.

இன்னொரு வியக்கத்தக்க சிலை... ஊர்த்துவ தாண்டவராக நடராஜ பெருமானின் சிற்பம். காளிதேவியுடன் போட்டிப் போட்டுக் கொண்டு நடனமாடினார் நடராஜர் பெருமான். அப்போது, வலது காலை தன் செவி வரைக்கும் உயர்த்தியபடி ஆடினார். கைகளில் உடுக்கை ஏந்தியிருக்கிறார். ரிஷபத்தண்டு, திரிசூலம் தாங்கியிருக்கிறார். பிரம்மாவின் சிரசை எடுப்பதற்கு முன்னதாக உள்ள நிகழ்வைக் குறிக்கும் வகையில் பிரமமா ஐந்து தலைகளுடன் அற்புதமாகக் காட்சி தருகிறார். இந்தச் சிற்பமும் கலைநயத்துடன் வியப்பையும் பிரமிப்பையும் ஏற்படுத்துகின்றன.

புராண - புராதனச் சிறப்பு மிக்க பேரூர்க் கோயிலின் ஒவ்வொரு தூண்டும் அற்புதம்... ஒவ்வொரு சிலையும் அதிசயம் என்று பூரிப்புடன் தெரிவிக்கின்றனர் பக்தர்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x