Last Updated : 20 Jan, 2021 06:13 PM

 

Published : 20 Jan 2021 06:13 PM
Last Updated : 20 Jan 2021 06:13 PM

அப்பர் பெருமானுக்கு அன்னமிட்ட சிவன்! 

திருப்பைஞ்ஞீலி தலம் கல்யாண வரம் தரும் தலம். அதேபோல், தனம் தானியம் பெருக்கித் தரும் தலம் என்றும் இல்லத்தில் சுபிட்சத்தைத் தந்தருளும் தலம். இழந்ததையெல்லாம் மீட்டுக் கொடுக்கும் தலம்.

திருச்சியில் இருந்து 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருப்பைஞ்ஞீலி திருத்தலம். இங்கே உள்ள சிவனாரின் திருநாமம் ஸ்ரீஞீலிவனநாதர். ஸ்ரீநீலகண்டேஸ்வரர் எனும் திருநாமமும் உண்டு. அம்பாளின் திருநாமம் ஸ்ரீவிசாலாட்சி.

ஞீலி என்றால் ஒருவகை கல்வாழை. ஞீலிவனம் என்றால் வாழைத் தோப்பாக, வனமாக இருந்ததால் இந்தப் பெயர் அமைந்தது. பைஞ்ஞீலி என்றால், பசுமையான வாழை என்று அர்த்தம். அப்படி, பசும் வாழையை தலவிருட்சமாகக் கொண்ட தலம் இது என்று திருப்பைஞ்ஞீலி ஸ்தல புராணம் விவரிக்கிறது.

அற்புதமான திருத்தலம். வாழையடி வாழையாக சந்ததி வளருவதற்கு ஆணிவேராக இருப்பது திருமணம் எனும் பந்தம். ஆகவே, இந்தத்தலம் கல்யாண வரம் தரும் தலமாக போற்றப்படுகிறது.

சீராப்பள்ளி உள்ளிட்ட ஆலயங்களை தரிசித்த திருநாவுக்கரசர் பெருமான், அடுத்து திருப்பைஞ்ஞீலி தலம் நோக்கி நடந்தார். வழியில் கடும் தாகம் ஏற்பட்டது. பசிக்களைப்பும் சேர்ந்து வாட்டியது. ‘கொஞ்சம் தண்ணீர் கிடைத்தால் நன்றாக இருக்குமே... ஆனால் வீடோ சத்திரமோ எதுவுமே இல்லையே...’ என்று யோசித்துக் கொண்டே, நடக்கமுடியாமல் நடந்து வந்தார். நாவுக்கரசரின் அயர்ச்சியை அறிந்த சிவனார், அவருக்கு உதவ நினைத்தார்.

வழியில், சிறியதொரு குளத்தை உண்டுபண்ணினார். சத்திரம் போல் ஒரு மண்டபமும் அமைத்தார். அங்கே அன்னத்தையும் காய்கறிகளையும் கொண்டு முதிய அந்தணர் வடிவில் சிவபெருமான் சமைத்துக் கொண்டிருந்தார்.

அப்பர் பெருமான் வந்தார். அவரை அழைத்தார் முதியவர். ’பசியோடு இருக்கிறீர்களே... வாருங்கள் சாப்பிடுங்கள்’ என்றார். அப்பர் அந்த உணவைச் சாப்பிட்டார். தாகம் தீருமளவுக்கு தண்ணீர் அருந்தினார். அதன் பிறகுதான் தெம்பு வந்தது அப்பருக்கு.

‘பெரியவரே... எங்கே செல்கிறீர்கள்?’ என்று அப்பர் கேட்டார். ‘திருப்பைஞ்ஞீலிக்கு’ என்றார் அந்தணர். ‘வாருங்கள், நானும் அங்குதான் செல்கிறேன். இருவருமாகச் செல்வோம்’என்றார் அப்பர். இருவரும் பேசிக்கொண்டே வந்தனர். கோயிலுக்குள் நுழையும் தருணத்தில் முதியவர் மாயமானார். வந்தது சிவமே என அறிந்து சிலிர்த்தார் அப்பர் பெருமான்.

திருப்பைஞ்ஞீலி கோயிலுக்குள் நுழையும் போதே, ராவணன் வாயில் எனப்படும் இரண்டாவது கோபுரம் உள்ளது. இந்த கோபுரத்துக்கு இடதுபக்கத்தில் சிவலிங்க சந்நிதி இருக்கிறது. இந்த சிவலிங்கத்துக்கு சோற்றுடை ஈஸ்வரர் என்று பெயர். முதியவராக நாவுக்கரசருடன் வந்து முதியவர் மறைந்த இடம் இது. நாவுக்கரசருக்கு லிங்க ரூபமாகக் காட்சி தந்து அருளிய இடம் இது. சித்திரை மாதம் அவிட்டம் நட்சத்திர நாளில், நாவுக்கரசருக்கு சிவபெருமானே உணவிட்டதை நினைவு கூரும் வகையில் சோறு படைத்த விழா என்று நடக்கிறது.

வருடந்தோறும் சித்திரை அவிட்டத்தில் நடைபெறும் சோறு படைத்த விழாவில், இந்த ஊர்க்காரர்களும் அக்கம்பக்கத்து ஊர்க்காரர்களும் கலந்து கொள்கின்றனர் .குறிப்பாக விவசாயிகள் கலந்துகொண்டு, சிவபெருமானை தரிசித்து வேண்டிக்கொள்கின்றனர்.

திருப்பைஞ்ஞீலி தலம் கல்யாண வரம் தரும் தலம். அதேபோல், தனம் தானியம் பெருக்கித் தரும் தலம் என்றும் இல்லத்தில் சுபிட்சத்தைத் தந்தருளும் தலம். இழந்ததையெல்லாம் மீட்டுக் கொடுக்கும் தலம் என்றெல்லாம் போற்றுகிறார் சங்கர குருக்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x