Last Updated : 15 Jan, 2021 07:55 PM

 

Published : 15 Jan 2021 07:55 PM
Last Updated : 15 Jan 2021 07:55 PM

தை முதல் சனி; குணசீலம் பெருமாளுக்கு சிறப்பு வழிபாடு

தை மாதத்தில் குணசீலம் பெருமாளுக்கு சிறப்பு வழிபாடுகளும் நடைபெறும். தை முதல் சனிக்கிழமையிலும் ஞாயிற்றுக்கிழமையிலும் ஏராளமான பக்தர்கள் குணசீலம் திருத்தலத்து நாயகனை, பிரசன்ன வேங்கடாசலபதியை வேண்டுங்கள்.

திருப்பதி தலத்துக்கு நிகரான திருத்தலங்கள் ஏராளம் உண்டு. திவ்விய க்ஷேத்திரமாக இல்லாத தலங்கள் கூட, திருப்பதிக்கு நிகரான திருத்தலம் என்று போற்றப்படுகின்றன. ‘திருப்பதியில் நேர்த்திக்கடன் செலுத்த வேண்டும் என்று இருப்பவர்கள், திருப்பதிக்குச் செல்ல இயலாத சூழலில், இங்கேயே வந்து பிரார்த்தனைகளை நிறைவேற்றிக்கொள்ளலாம்’ என்று இணையான திருத்தலங்கள் ஏராளமாக இருக்கின்றன. அந்த வகையிலான திருவேங்கடத்துக்கு நிகரான தலமாகத் திகழ்கிறது குணசீலம்.

திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில் சுமார் 22 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்தக் கோயிலுக்குச் செல்லும் வழியில், சிவா, விஷ்ணு, பிரம்மா மூவரும் குடியமர்ந்து அருள்பாலிக்கும் உத்தமர் கோவில் திருத்தலம் இருக்கிறது.

இதைக் கடந்து நொச்சியம் எனும் ஊரை அடுத்து திருவாசி எனும் சிவ ஸ்தலம் இருக்கிறது. அதையடுத்து துடையூர் விஷமங்களேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
இந்தத் தலங்களையெல்லாம் கடந்து சென்றால், 22 கி.மீ. தொலைவில், குணசீலம் திருத்தலத்தை அடையலாம். கையில் செங்கோலுடன், அழகனாகக் காட்சி தருகிறர் பெருமாள். இங்கே பெருமாளின் திருநாமம் ஸ்ரீபிரசன்ன வேங்கடாசலபதி.

திருப்பதி தலத்துக்கு இணையானவர் பிரசன்னை வேங்கடாசலபதி. மன நலம் காக்கும் தெய்வம் என்று போற்றுகின்றனர் பக்தர்கள். தமிழகத்தில் வேறு எந்தத் தலத்திலும் இல்லாத வகையில், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் இங்கே தங்கவைக்கப்படுகின்றனர்.

குணசீலம் திருத்தலத்தில் உச்சிகால பூஜையின் போது முகத்தில் தீர்த்தம் தெளிப்பது வழக்கம். மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு முகத்தில் தீர்த்தம் தெளிப்பார்கள். மேலும் வந்திருக்கும் பக்தர்களுக்கும் தீர்த்தம் தெளிப்பார்கள். இதனால் பக்தர்களுக்கு துஷ்ட சக்திகள் அண்டாது. கவலைகள் துக்கங்கள் என சகலமும் பறந்தோடும். மனக்குழப்பங்களும் மனோபயங்களும் விலகும் என்பது ஐதீகம்.

கையில் செங்கோலுடன் உள்ள குணசீலம் பெருமாளை தரிசித்தால், முன் ஜென்ம பாவங்கள் விலகும் என்கிறார் பிச்சுமணி பட்டாச்சார்யர். தை மாதத்தின் முதல் சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் ஏராளமான பக்தர்கள், சிறப்பு வழிபாடுகளைச் செய்வார்கள். மன பலம் தரும் குணசீலம் பிரசன்ன வேங்கடாசலபதியை தரிசியுங்கள். மங்கல காரியங்களை நடத்திக் கொடுப்பார். மங்காத செல்வத்தைத் தந்தருளுவார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x