Last Updated : 10 Jan, 2021 10:55 AM

 

Published : 10 Jan 2021 10:55 AM
Last Updated : 10 Jan 2021 10:55 AM

மார்கழி... ஞாயிறு... ராகுகாலம்... பிரதோஷம்! 


மார்கழி மாதத்தின் பிரதோஷ நன்னாள் இன்று (10ம் தேதி). ஞாயிற்றுக்கிழமயில், பிரதோஷமும் ராகுகாலமும் இணைந்த வேளையில் சிவ தரிசனம் செய்து வேண்டிக்கொண்டால், பாவங்கள் தொலையும், புண்ணியங்கள் பெருகும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

மார்கழி மாதம் என்பது வழிபாட்டுக்கு உகந்த அற்புதமான மாதம். மார்கழி என்பது பூஜைகளுக்கு உரிய மாதம். இந்த மாதத்தில் நாம் செய்யும் வழிபாடுகள் எண்ணற்ற பலன்களை வழங்கும் என்பது ஐதீகம். இந்த மாதத்தில் நாம் செய்யும் பூஜைகளும் ஜபதபங்களும் மந்திரங்களும் மும்மடங்கு பலன்களைக் கொடுக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

சிவ வழிபாடுகளில் மிக மிக முக்கியமான வழிபாடு என்று பிரதோஷத்தைக் குறிப்பிடுவார்கள். பிரதோஷம் என்பது திரயோதசி திதியில் வருவது. திரயோதசி என்பது ஒவ்வொரு பெளர்ணமிக்கும் முந்தைய மூன்றாம் நாளும் அமாவாசைக்கு முந்தைய மூன்றாவது நாளும் வருகிறது.

திரயோதசி திதி வருகிற மாலை நேரம் பிரதோஷம். பிரதோஷத்தில் சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகளும் அபிஷேக ஆராதனைகளும் விமரிசையாக நடந்தேறும். பிரதோஷ நேரம் என்பது மாலை 4.30 முதல் 6 மணி வரை. இந்த நேரத்தில்தான் சிவனாருக்கு பூஜைகள் நடத்தப்படும்.

பிரதோஷ நன்னாளில், சிவலிங்கத்திருமேனிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது போலவே, அந்த நாளில், நந்திதேவருக்கும் வழிபாடுகளும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெறும். நந்திதேவருக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடைபெறும்.

ஞாயிற்றுக்கிழமை வருகிற பிரதோஷத்துக்கு இன்னொரு சிறப்பும் மகிமையும் உண்டு. பிரதோஷம் என்பது எப்போதுமே, மாலை 4.30 முதல் 6 மணி வரை. ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 4.30 முதல் 6 மணி வரை ராகுகால நேரம்.

செவ்வாய்க் கிழமையிலும் வெள்ளிக்கிழமையிலும் ராகுகால வேளையில், அருகில் உள்ள ஆலயத்துக்குச் சென்று துர்கைக்கு விளக்கேற்றுவார்கள். நெய்தீபம் அல்லது எலுமிச்சை தீபமேற்றி வழிபடுவார்கள். ஞாயிற்றுக்கிழமையன்று பிரதோஷம் வந்தால், ராகுகால வேளையில்தான் சிவனாருக்கு பூஜைகளே நடைபெறுகின்றன.

எனவே, ஞாயிறு பிரதோஷம் மகிமைமிக்கது. கூடுதல் பலன்களை தந்தருளக்கூடியது. இன்று 10ம் தேதி பிரதோஷம். மார்கழி மாதத்தின் பிரதோஷ நாளில், ஞாயிற்றுகிழமை பிரதோஷ நாளில், மாலையில் அருகில் உள்ள சிவாலயத்துக்குச் செல்லுங்கள். நந்திதேவருக்கும் சிவலிங்கத்திருமேனிக்கு நடைபெறும் பிரதோஷ அபிஷேகத்துக்கு பொருட்களை வழங்கி, அபிஷேகத்தை தரிசியுங்கள். நமசிவாய மந்திரத்தைச் சொல்லி சிவனாரை வழிபடுங்கள். சிந்தையைத் தெளிவாக்கி, வாழ்வை வளமாக்கித் தந்தருள்வார் சிவனார்!

இன்று 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x