Last Updated : 08 Jan, 2021 05:16 PM

 

Published : 08 Jan 2021 05:16 PM
Last Updated : 08 Jan 2021 05:16 PM

மார்கழி கடைசி சனிக்கிழமை... திருப்பம் தரும் திருமால் தரிசனம்! 


மார்கழி கடைசி சனிக்கிழமையில், அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று வேங்கடவனை தரிசியுங்கள். வேண்டுவதையெல்லாம் தந்தருளுவார் மகாவிஷ்ணு.
மற்ற மாதங்களை விட மார்கழி மாதத்துக்கு தனிச்சிறப்பு உண்டு. கிருஷ்ணாவதாரத்தில், ‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்’ என தெரிவித்துள்ளார் மகாவிஷ்ணு. அப்பேர்ப்பட்ட மார்கழி மாதத்தை தனுர் மாதம் என்றும் சொல்லுவார்கள்.

தனுர் மாதம் என்று சொல்லக்கூடிய மார்கழி மாதம், வழிபாட்டுக்கு உகந்த மாதம். ஜப மந்திரங்கள் சொல்லவும் கலை கல்விகளைக் கற்கவும் உகந்த மாதம். மார்கழி மாதத்தில் அதிகாலை பிரம்ம முகூர்த்த வேளையில், அருகில் உள்ள ஆலயங்களுக்குச் செல்வதே புண்ணியம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
மார்கழி மாதத்தில், குளிர்ந்த அதிகாலைப் பொழுதில், குளித்துவிட்டு, ஆலயத்துக்குச் சென்று, திருப்பாவை பாடி வணங்குவதும் திருவெம்பாவை பாடி வழிபடுவதும் இன்னும் இன்னுமான சத்விஷயங்களைக் கொடுக்கும்.

பெருமாள் கோயிலுக்குச் சென்று வணங்குவதும் சிவபெருமான் குடிகொண்டிருக்கும் கோயிலுக்குச் சென்று வழிபடுவதும் மகத்தான பலன்களைத் தரும் என்கிறார் ஸ்ரீதர பட்டாச்சார்யர். மேலும் அவர், மார்கழி மாதத்தில் அதிகாலை பூஜையின் நைவேத்தியத்துக்கு உபயம் அளிப்பதும் அந்த உணவை பக்தர்களுக்கு வழங்குவதும் இல்லத்தில் தனம் - தானியப் பெருக்கத்தை உண்டுபண்ணும் என்றும் கடன் தொல்லையில் இருந்து மீள்வார்கள், குடும்பத்தில் ஒற்றுமை மேம்படும் என்றும் விவரிக்கிறார்.

பெருமாள் கோயில், சிவாலயம் என்பது மட்டுமின்றி, அம்மன் கோயிலோ முருகன் கோயிலோ புற்றுக் கோயிலோ... அனுமன் ஆலயமோ.... எந்தக் கோயிலாக இருந்தாலும் மார்கழி மாதத்தில் வழிபட்டு, தரிசனம் செய்து, பிராகார வலம் வந்து கொடிமரத்தில் நமஸ்கரித்து வருவதால், நம் பாவங்களெல்லாம் தொலையும் என்பது ஐதீகம்.

மார்கழி மாதத்துக்கு இத்தனை மகத்துவங்கள் இருக்கின்றன. சனிக்கிழமை என்பது பெருமாளுக்கு உகந்த நன்னாள். மார்கழி சனிக்கிழமையில் பெருமாள் தரிசனம் செய்யுங்கள். வீட்டில் விளக்கேற்றி பெருமாளுக்கு தீப தூப ஆராதனை செய்யுங்கள். சர்க்கரைப் பொங்கலோ புளியோதரையோ நைவேத்தியம் செய்து, ஆத்மார்த்தமாக, குடும்பத்துடன் நமஸ்கரித்து வேண்டிக்கொள்ளுங்கள்.

மார்கழி மாதத்தின் கடைசிச் சனிக்கிழமை நாளைய தினம் (9.1.2021). மறக்காமல், திருமால் தரிசனம் செய்யுங்கள். வேங்கடவனை கண்ணார தரிசியுங்கள். வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்களையும் ஏற்றங்களையும் தந்தருள்வார் மகாவிஷ்ணு.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x