Last Updated : 08 Jan, 2021 01:21 PM

 

Published : 08 Jan 2021 01:21 PM
Last Updated : 08 Jan 2021 01:21 PM

காலம் அறிந்து உதவுவாள்; காலத்துக்கும் அருளுவாள்! - ஸ்ரீபாலாவின் மகிமை

ஸ்ரீபாலாவை, ஸ்ரீபாலா திரிபுரசுந்தரியை ஆத்மார்த்தமாக, முழு ஈடுபாட்டுடன், கர்மசிரத்தையாக வழிபடுங்கள். காலம் அறிந்து தேவைகளை நிவர்த்தி செய்வாள். காலத்துக்கும் நம்மை வாழச் செய்வாள் பாலா திரிபுரசுந்தரி.

சிவ வழிபாடு, விஷ்ணு வழிபாடு, சாக்த வழிபாடு, முருக வழிபாடு, விநாயக வழிபாடு என்றெல்லாம் உண்டு. இதில் சாக்த வழிபாடு மிக மிக முக்கியமானது. சாக்த வழிபாடு என்றால் சக்தி வழிபாடு என்று அர்த்தம். பொதுவாகவே பெண் தெய்வ வழிபாடுகள் மிக மிக வலிமையானவை. அவசியமானவை. வாழ்வில் இல்லறத்திலும் சொந்த பந்தங்களிலும் உள்ள சகல பிரச்சினைகளையும் சிக்கல்களையும் வேறுபாடுகளையும் மாறுபாடுகளையும் பெண் தெய்வ வழிபாடுகள் தீர்த்துவைக்கும் என்கின்றனர் சாக்த வழிபாடு செய்பவர்கள்.

அம்பிகையின் திருநாமங்கள் பலப்பல இருந்தாலும் அம்பிகையின் திருவுருவங்கள் பலப்பல என்ற போதும் அம்பிகை என்பவள் அருள்மழை பொழிபவள், அருளும் பொருளும் அள்ளித்தருபவள் என்கின்றன ஞானநூல்கள்.

நமக்கெல்லாம் அன்னையெனத் திகழ்கிறாள் அம்பிகை. ஆனால், அந்த அன்னையை சிறுமியாக, ஒன்பது வயதுக் குழந்தையாக வழிபடுகிற முறையும் உள்ளது. அப்படி ஒன்பது வயது சிறுமியாகவும் இருந்து அருள்பாலிக்கிறாள் அம்பிகை.

அம்பிகைகளில் ஒருத்தியான ஸ்ரீராஜேஸ்வரி எடுத்துக்கொண்ட அவதாரம் தான் ஸ்ரீபாலா எனும் தேவி.

ஸ்ரீபாலா என்றும் பாலா என்றும் பாலா திரிபுரசுந்தரி என்றும் அழைத்துப் போற்றப்படுபவளின் மகாசக்தியானது மகோன்னதமானது என்கிறார்கள், பாலாவை வழிபடும் பக்தர்கள்.

ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி எனும் தேவதையை, தேவியை, அம்பாளை ஆராதிப்பதும் பூஜிப்பதும் வழிபடுவதும் எண்ணற்ற பலன்களைக் கொடுக்கவல்லவை. ஸ்ரீவித்யை எனப்படும் சக்தி உபாஸனையில், ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி மிக முக்கியமான தெய்வமாகப் போற்றப்படுகிறாள். ஸ்ரீபாலாவின் மந்திரம், பல்லாயிரம் மடங்கு சக்தியும் வீரியமும் கொண்டது. ‘ஸ்ரீவித்யை’யில் உள்ள எல்லா மந்திரங்களின் பலன்களையும் உள்ளடக்கிய மந்திரம், பாலாவின் மந்திரம். குழந்தை பாலா எனும் தெய்வத்தை வழிபட்டால், இழந்த பொருட்கள், இழந்த செல்வம், இழந்த கெளரவம், இழந்த உறவுகள் என அனைத்தையும் தந்திடுவாள் என்பது ஐதீகம்.

செவ்வாய்க்கிழமையிலும் வெள்ளிக்கிழமையிலும் ஸ்ரீபாலாவை செவ்வரளி மலர் சூட்டி, விளக்கேற்றி பூஜித்து வந்தால், வீட்டில் ஏற்படும் கண் திருஷ்டியைக் களைந்தெடுப்பாள். ஏமாற்றியவர்களையும் எதிர்ப்பவர்களையும் தவிடுபொடியாக்குவாள்.

ஸ்ரீபாலாவை, ஸ்ரீபாலா திரிபுரசுந்தரியை ஆத்மார்த்தமாக, முழு ஈடுபாட்டுடன், கர்மசிரத்தையாக வழிபடுங்கள். காலம் அறிந்து தேவைகளை நிவர்த்தி செய்வாள். காலத்துக்கும் நம்மை வாழச் செய்வாள் பாலா திரிபுரசுந்தரி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x