Last Updated : 08 Jan, 2021 11:08 AM

 

Published : 08 Jan 2021 11:08 AM
Last Updated : 08 Jan 2021 11:08 AM

மாங்கல்யம் காப்பாள் மகாலக்ஷ்மி

மார்கழி மாதம் என்பது குளுமையான மாதம். மார்கழி மாதம் என்பது வழிபாட்டுக்கு உரிய மாதம். மார்கழி,பெருமாள் வழிபாட்டுக்கு வைகுண்ட ஏகாதசி; சிவ வழிபாட்டுக்கு ஆருத்ரா தரிசனம். மேலும் மார்கழி முழுவதுமே சிவாலயங்களிலும் பெருமாள் கோயில்களிலும் அதிகாலை வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

திருப்பாவையும் திருவெம்பாவையும் பாராயணம் செய்வது உத்தமமான விஷயங்களைக் கொடுக்கும். இந்த 30 நாட்களில், ஏதேனும் ஒருநாளேனும் விருப்பப்பட்ட ஆலயங்களுக்குச் செல்வதும் அங்கே வெண்பொங்கலோ புளியோதரையோ சர்க்கரைப் பொங்கலோ நைவேத்திய உபயம் செய்வதும் பக்தர்களுக்கு வழங்கச் செய்வதும் மகா புண்ணியம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

இதேபோல், வீட்டில் இருந்து வழிபடுவதும் ஜப மந்திரங்களில் மனதைச் செலுத்துவதும் நற்பலன்களைக் கொடுக்கவல்லவை. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மகாலக்ஷ்மியை வழிபடுவதும் அவளுக்கு பால் பாயசம் முதலான பால் கலந்த இனிப்பைக் கொண்டு நைவேத்தியம் செய்து மற்றவர்களுக்கு வழங்குவதும் தரித்திர நிலையில் இருந்து வீட்டை சுபிட்ச நிலைக்கு மாற்றும் என்பது ஐதீகம்.

மார்கழி மாதம் என்பதும் மார்கழி வெள்ளியில் மகாலக்ஷ்மியை வழிபடுவதும் மும்மடங்குப் பலன்களைக் கொடுக்கக்கூடியது. குழந்தைகள் கல்வி கேள்வியில் சிறந்துவிளங்குவார்கள்.

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் கமலே

கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத

ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்

ஓம் மஹாலக்ஷ்ம்யை நம;

என்ற மந்திரத்தையும் சொல்லலாம்.

மகாலக்ஷ்மியை நினைத்துக் கொண்டு, பீஜமந்திரங்களைச் சொல்லியபடி, பூக்களால் அல்லது குங்குமத்தால் மகாலக்ஷ்மியை அர்ச்சித்து வழிபடுங்கள்.

இந்த ஸ்லோகங்களை ஆத்மார்த்தமாகச் சொல்லுங்கள். அட்சரம் பிசகாமல் சொல்லுங்கள். 11 முறை சொல்லலாம். 16 முறை சொல்லலாம். 24 முறை சொல்லலாம். முடியுமெனில் 108 முறை சொல்லி வழிபடலாம்.

கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லலாம். அல்லது ஒலிக்க விடலாம். வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் நிறைந்திருக்கும். இல்லத்தில் அமைதியும் ஆனந்தமும் குடிகொள்ளும்.
மாங்கல்யம் தருவாள் மகாலக்ஷ்மி. மாங்கல்யம் காப்பாள் அம்பாள். மங்காத செல்வம் தந்து அருளுவாள்.

பொதுவாகவே, மார்கழி வெள்ளிக்கிழமை என்றில்லாமல், எல்லா வெள்ளிக்கிழமையும் அம்பாள் வழிபாடு செய்வது அவசியம். மகாலக்ஷ்மி வழிபாடு என்பது மகத்தானது. இதனால் வீட்டின் தரித்திர நிலையெல்லாம் நீங்கும். தம்பதி ஒற்றுமை மேலோங்கும். வீட்டில் இதுவரை தடைபட்டிருந்த மங்கல காரியங்கள் அனைத்தும் அடுத்தடுத்து நடைபெறும். மகாலக்ஷ்மியின் பூரணமான அருள் கிடைத்து ஆனந்தமாக வாழலாம்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x