Last Updated : 06 Jan, 2021 04:27 PM

 

Published : 06 Jan 2021 04:27 PM
Last Updated : 06 Jan 2021 04:27 PM

மைத்ர முகூர்த்தத்தில் கடனில் ஒரு தொகை;  விரைவில் தீரும் கடன் பிரச்சினைகள்! 

மைத்ர முகூர்த்தத்தில் கடனில் ஒரு தொகையைக் கொடுத்தால் விரைவில் கடன் பிரச்சினையில் இருந்து விடுபடலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

கடன் என்பது கர்மவினைகளால் ஏற்படுவது என்று சொல்கிறது ஜோதிட சாஸ்திரம். ’தேவகடன், ரிஷி கடன், பித்ருக் கடன்’ என்று இந்த ஜென்மமே கடன்களால் பிறப்பெடுத்திருக்கிறது. இந்த வாழ்க்கையில், ஒருவர் இன்னொருவருடன் கடன் வாங்குவதும் வட்டிக்கு பணம் வாங்குவதும் முந்தைய கர்மவினைகளின் விளைவு என்று சொல்லப்பட்டிருக்கிறது.

கடன், நோய், எதிரி, துன்பங்கள், மன உளைச்சல் என வாழ்வில் ஒவ்வொரு விதமாக எதையோ அனுபவித்து உழன்றுகொண்டுதான் இருக்கிறோம்.

முன்பெல்லாம் கடன் வாங்குவது கெளரவக் குறைச்சலாகப் பார்க்கப்பட்டது. இன்றைக்கு கலிகாலம். எல்லாம் இ.எம்.ஐ. காலமாகிவிட்டது. இருபது வருடங்களுக்கு முன்பு, நூற்றுக்கு பத்துபேர் கடன் வாங்கினார்கள். ஆனால் இன்றைக்கு நூற்றுக்கு பத்துபேர்தான் கடன் வாங்காமல் இருக்கிறார்கள். இப்போது ஏதேனும் ஒன்றுக்காக, வீடு, இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், தொழில், வியாபாரம் என ஏதேனும் ஒன்றுக்காகக் கடன் வாங்கிக் கொண்டிருப்பவர்களே அதிக அளவில் இருக்கிறார்கள்.
ஒருகட்டத்தில், இந்தக் கடனே நம் நிம்மதியைக் குலைத்துப் போடுகிறது. சந்தோஷமாக இருப்பதற்காக வாங்குகிற கடனே, நம் சந்தோஷங்களைக் கபளீகரம் செய்துவிடுகிறது. நிம்மதியில்லாமலும் தூக்கமில்லாமலும் எத்தனையோ பேர், கடனால் மருகிக் கலங்கி, தவித்துக் கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கும் நிலையும் ஏற்பட்டு விடுகிறது.

செவ்வாய்க்கிழமையும் அஸ்வினி நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாள், மேஷ லக்னம் அமைந்துள்ளதே மைத்ர முகூர்த்தம் எனப்படுகிறது. செவ்வாய்க்கிழமையும் அனுஷ நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாள், விருச்சிக லக்னம் அமைந்துள்ளதே மைத்ர முகூர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. ஒருவேளை, லக்கினமும் நட்சத்திரமும் இணைந்து, செவ்வாய்க்கிழமை அமையாது போனாலும் 75 சதவிகிதப் பலன்கள் நிச்சயம் என்றும் அவையும் மைத்ர முகூர்த்தம் என்றே கொள்ளலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

2021ம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் மூன்று மைத்ர முகூர்த்த நாட்கள் வருகின்றன. வருகிற 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 5.18 முதல் 7. 18 வரை மைத்ர முகூர்த்தம். அடுத்து 21ம் தேதி புதன்கிழமை அன்று மதியம் 2 மணி முதல் 2.55 வரை மைத்ர முகூர்த்தம். மூன்றாவது 21ம் தேதி வியாழக்கிழமை மதியம் 1.10 முதல் 3.10 மணி வரை மைத்ர முகூர்த்தம்.

ஜனவரி மாதத்தில் உள்ள மைத்ர முகூர்த்த நாட்களில், நீங்கள் வாங்கிய கடன் தொகையில் ஒரு சிறு அளவேனும் திருப்பிக் கொடுங்கள். இந்த மைத்ர முகூர்த்த நாளையும், நேரத்தையும் பயன்படுத்தி, உங்களால் முடிந்த தொகையைக் கொடுத்தால், விரைவிலேயே கடனையெல்லாம் அடைத்துவிடுவீர்கள் என்பது உறுதி என்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள்.

மைத்ர முகூர்த்த நாளில், கடன் வாங்கியவரை சந்தித்து அந்தத் தொகையைக் கொடுக்க இயலாத நிலை இருந்தால், நாம் கொடுக்க திட்டமிட்டிருந்த தொகையை சுவாமிப் படத்துக்கு முன்னே வைத்துவிடுங்கள். மைத்ர முகூர்த்த நேரத்தில் சுவாமி படத்துக்கு முன்னே வைத்துவிட்டு, அன்றைய நாளிலோ அதையடுத்த நாளிலோ வழங்குங்கள். சீக்கிரமே கடன் பிரச்சினையில் இருந்து விடுபடுவீர்கள். கடனில்லா பெருவாழ்வு வாழ்வீர்கள்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x