அகந்தை, ஆணவம்; நெய் தேங்காய் தத்துவம்! -ஐயப்ப பாடகர் வீரமணி ராஜூ விளக்கம் 

அகந்தை, ஆணவம்; நெய் தேங்காய் தத்துவம்! -ஐயப்ப பாடகர் வீரமணி ராஜூ விளக்கம் 
Updated on
2 min read

இருமுடி கட்டும் போது தேங்காய் மற்றும் நெய்யால் நிரப்பப்படுவது குறித்தெல்லாம் ஐயப்ப பாடகர் வீரமணி ராஜூ விளக்கியுள்ளார்.

சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் இருமுடியுடன் செல்வார்கள். இருமுடியில் முக்கியமாக இருக்க வேண்டிய விஷயம். முத்திரைத் தேங்காய். இந்தத் தேங்காயில், இருமுடி கட்டுகிற தருணத்தில் நெய்யால் நிரப்புவது வழக்கம்.

அப்படி முத்திரைத் தேங்காயில் நெய் நிறைக்கும் தருணத்தில் சொல்லவேண்டிய மந்திரம் ரொம்பவே விசேஷம்.

அஷ்டாதஸம் மஹாஸாரம்
சாஸ்த்ரு தர்ஸன தாயகம்

விதிதம் ஸுத்தம் உத்குருஷ்டம்
ஸந்நிதானம் நமாம்யஹம்

மனஸாவாஸா கர்மணா
ஸுத்தயா பக்தயா ஜகத்குரோ

குப்தஸ்ய தேவ கார்யார்த்தம்
பூரயந் கபிலாக்ருதம்

எந்தத் தெய்வ வழிபாட்டிலும் தேங்காய் முக்கியத்துவம் பெறுகிறது.

‘’தேங்காய் மற்றும் ஓடு என்பது நமது உடலைக் குறிக்கிறது. தேங்காயில் எல்லாம் நமது நாடி நரம்புகளால் சூழபட்டது என்கிறார்கள் முன்னோர்கள். தேங்காயின் உள்ளே உள்ள வெள்ளைப் பகுதி, நம் உடலின் சதை பகுதியை விவரிக்கிறது.

நமது உடல் முழுவதும் நீர் மற்றும் ரத்தம் நிரம்பி உள்ளது. தேங்காய்க்குள்ளே இருக்கிற இளநீர் இவற்றைத்தான் குறிக்கிறது.

நமக்கு இருப்பது போல் தேங்காயின் வெளியே இரண்டு கண்கள் உள்ளன. மூன்றாவது கண் ஞானக்கண். நெய் நிறைப்பதற்கு முன் தேங்காயின் மூன்றாவது கண் எனும் ஞானக் கண் திறக்கப்பட்டு, அதன் உள்ளே உள்ள இளநீர் வெளியே எடுக்கப்பட்டு, பிறகு நமது ஆன்மாவை நெய்யாக உருக்கித் தருகிறோம் என்பதையே தேங்காய்க்குள் நெய் நிறைப்பதை உணர்த்துகிறது. மூன்றாவது கண்... ஞானக் கண் வழியாக நமது தூய்மையான ஆத்மாவை நெய் வடிவில் உருக்கி நிறைக்கிறோம் என்கிறார்கள் குருசாமி மார்கள்.

சபரிமலை சென்று அடைந்த பிறகு குரு சுவாமியின் துணை கொண்டு அந்த தேங்காயை இரு பாகமாக உடைக்கிறோம். அதாவது நமது ஆணவம், அகம்பாவம் அனைத்தையும் உடைத்து,நெய்யை மட்டும் வெளியே எடுத்து, அந்த பரிசுத்தமான நமது ஆன்மா வடிவிலான நெய்யை சரணாகத வத்சலனான சபரிமலை ஐயப்ப சுவாமிக்கு அபிஷேகிக்கிறோம்.

நமது ஆன்மாவே இறைவனிடம் சேர்த்த பின் நமது உடல் உயிர் இல்லாத சவமாகிவிடுகிறது. நம்முள் கர்வமில்லை. அலட்டல் இல்லை. ஆணவமில்லை. அகந்தை இல்லை. செருக்கு ஏதுமில்லாமல், சலனமில்லாத நிலையை அடைகிறோம் என்பதை உணர்த்தத்தான் தேங்காயின் இரண்டு பாகத்தையும் தீயில் இடுகின்றோம்’’ என விவரிக்கிறார் ஐயப்பப் பாடகர் வீரமணி ராஜூ.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in