Last Updated : 06 Jan, 2021 11:26 AM

 

Published : 06 Jan 2021 11:26 AM
Last Updated : 06 Jan 2021 11:26 AM

இழந்ததையெல்லாம் தருவார் சொர்ணாகர்ஷண பைரவர்

சொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு மிகவும் விசேஷமானது. கடன் தொல்லையில் மன உளைச்சலுக்கு ஆளானவர்கள், சொர்ணாகர்ஷண பைரவரின் ஸ்லோகத்தைச் சொல்லி, தினமும் தெருநாய்களுக்கு உணவளித்து வந்தால், கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள். இழந்த பொருட்களையும் புகழையும் அடைவீர்கள். வழக்கு முதலான விஷயங்களில் வெற்றியைத் தந்தருளுவார் சொர்ணாகர்ஷண பைரவர்.

தோல்வியும் அவமானமும் யாருக்குத்தான் இல்லை. ஆனால் ஒருவரின் வாழ்வில் எப்போதும் தோல்வி மட்டுமே இருப்பதில்லை. ஒருவர், தன் வாழ்நாளில் எப்போதும் அவமானங்களைச் சந்தித்துக் கொண்டே இருப்பதில்லை. ‘திக்கற்றவர்க்கு தெய்வமே துணை’ என்பார்கள். அப்படியொரு தெய்வமாக, வாழ்க்கையை மாற்றித் தரும் வள்ளலாக, பேரருள் புரியும் இறை சக்தியாகத் திகழ்கிறார் காலபைரவர்.

சிவபெருமான் சிருஷ்டித்தவர்களில் பைரவரும் ஒருவர். நல்லதைக் காத்து தீயதை அழிப்பதற்கு சிவபெருமான் உண்டு பண்ணியவர்தான் பைரவர். உலகின் நல்லனவற்றையெல்லாம் காத்தருளுபவர் பைரவர் என்பதால்தான் இவரை காக்கும் கடவுள் என்றே போற்றுகிறார்கள் சிவனடியார்கள்.

எல்லா சிவாலயங்களிலும் பைரவருக்கு சந்நிதி உண்டு. திகம்பரராக, நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார் பைரவ மூர்த்தி.

காக்கும் கடவுளான பைரவரின் வாகனம் நாய். நம் வீட்டைக் காக்கும் என்பதால்தான் நாய் வளர்க்கிறோம். காக்கும் தெய்வம் பைரவர் என்பதன் குறியீடாகத்தான் அவருக்கு நாய் வாகனம் என்று புராணம் சொல்லிவைத்திருக்கிறது.

தேக ஆரோக்கியம் தந்து காப்பவர். தீமைகளில் இருந்து காப்பவர். கெட்ட சக்திகளிடம் இருந்து காப்பவர். நம்பிக்கை துரோகம் செய்பவர்களிடம் இருந்து காப்பவர். சொல்லால் காயப்படுத்தியவரையும் பொருளால் காயப்படுத்தியவரையும் நம்பிக்கையால் காயப்படுத்தியவர்களையும் காலத்தால் காயப்படுத்தியவர்களையும் அவச்சொல் கூறி காயப்படுத்தியவர்களையும் பூமியை, நிலத்தை, மனையை, சொத்துகளை ஏமாற்றி அபகரித்தவர்களையும் பைரவர் அழித்தொழிப்பார் என்று விவரிக்கிறது புராணம்.

மேலும் இவ்வுலகில் நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவ புண்ணியங்களையெல்லாம் பைரவரை சரணடைந்து பிரார்த்தித்துக் கொண்டால், முழுமனதுடன் சரணாகதி அடைந்தால். இம்மைக்கும் மறுமைக்கும் நம்மை காத்தருளுவார் காலபைரவர். அதனால்தான் கலியுகத்துக்கு காலபைரவர் என்று சிலிர்ப்புடன் சொல்கிறார்கள் பைரவ உபாஸகர்கள்.

பொன் பொருள் இழந்தவர்கள், காசு பணத்தை இழந்து கலங்குபவர்கள். கடன் தொல்லையால் அவதிப்பட்டவர்கள் ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரை தினமும் வணங்கி வந்தால், கஷ்ட நிலையில் இருந்து நம்மைக் கரை சேர்ப்பார். இழந்தவற்றையெல்லாம் தந்தருளுவார் பைரவர் என்பது ஐதீகம்.

பைரவ மூர்த்தங்களில் பல வடிவங்கள் உள்ளன. இவர்களில் சொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு மிகவும் விசேஷமானது. கடன் தொல்லையில் மன உளைச்சலுக்கு ஆளானவர்கள், சொர்ணாகர்ஷண பைரவரின் ஸ்லோகத்தைச் சொல்லி, தினமும் தெருநாய்களுக்கு உணவளித்து வந்தால், கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள். இழந்த பொருட்களையும் புகழையும் அடைவீர்கள். வழக்கு முதலான விஷயங்களில் வெற்றியைத் தந்தருளுவார் சொர்ணாகர்ஷண பைரவர் என்கிறார் நடராஜ குருக்கள்.

சொர்ணாகர்ஷண பைரவ மந்திரம்:

ஓம் ஏம் க்லாம் க்லீம் க்லும் ஹ்ராம் ஹ்ரீம்

ஹ்ரும்ஸக; வம் ஆபத்துத்தாரணாய

அஜாமிலா பத்தாய லோகேஸ்வராய

ஸ்வர்ணாகர்ஷண பைரவாய

மம தாரித்தர்ய வித்வேஷணாய

ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நம;

இந்த மந்திரத்தை தேய்பிறை அஷ்டமியிலும் அஷ்டமியிலும் சொல்லி வாருங்கள். முடியும் போதெல்லாம் பைரவருக்கு மிளகு கலந்த சாதம் நைவேத்தியம் செய்து வேண்டிக்கொள்ளுங்கள். வடை மாலை சார்த்துங்கள். தயிர்சாதம் நைவேத்தியம் செய்து பிரார்த்தனை மேற்கொள்வதும் நம் வாழ்க்கையையே குளிரப் பண்ணும்.

இன்று 6ம் தேதி புதன்கிழமை தேய்பிறை அஷ்டமி. பைரவரை வணங்குவோம். தெருநாய்களுக்கு உணவளிப்போம். பிஸ்கட்டேனும் வழங்கிப் பிரார்த்திப்போம்.

ஓம் பைரவ போற்றி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x