Last Updated : 06 Jan, 2021 10:53 AM

 

Published : 06 Jan 2021 10:53 AM
Last Updated : 06 Jan 2021 10:53 AM

கலை, கல்வி தரும் புதன் பகவான்! 

வித்யாகாரகனான புதன் பகவானை மனதார வேண்டுவோம். அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று நவக்கிரகத்தை ஒன்பது முறை வலம் வந்து பிரார்த்திப்போம். இந்தநாளில், புதன் பகவானைக் குறித்து வேண்டுவோம்.

சந்திர பகவானுக்கும் தாரைக்கும் மகனாகப் பிறந்தவரே புதன் பகவான். சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தார் புதன். இதில் மகிழ்ந்த சிவபெருமான், புதனுக்கு நவக்கிரகங்களில் ஒன்றாகும்படி, நவகோள்களில் ஒன்றாகும்படி பதவியை அளித்தார் என்கிறது புராணம்.

நவக்கிரகங்களில் புதன் பகவானும் ஒருவர். நான்கு குதிரைகள் பூட்டிய தேரில் வலம் வருபவர் புதன் பகவான். சூரிய பகவானைச் சுற்றி வலம் வரும் முதல் கிரகம் புதன் பகவான் என்று போற்றுகின்றன ஞானநூல்கள். அதாவது, 24 மணி கணக்கில், தன்னைத் தானே சுற்றியும் 88 நாட்களில் சூரிய பகவானை ஒருமுறையும் என சுற்றி வருகிறார் புதன் பகவான்.

உலகிலேயே குருத்துரோகமும் நம்பிக்கை துரோகமும் மாபாதகம் என்கிறது சாஸ்திரம். அப்படியான குருத்துரோகத்தைச் செய்த பாவத்தில் இருந்தும் நம்பிக்கை துரோகத்தைச் செய்த பாவத்தில் இருந்தும் சந்திர பகவான், புதன் பகவானுடன் இணைந்து தவமிருந்து, சிவ பூஜைகள் செய்து, சாபம் நீங்கப் பெற்றான். அப்படி சாபம் நீங்கிய திருத்தலம்தான் திருவெண்காடு.

சீர்காழிக்கு அருகில் உள்ள திருவெண்காடு அற்புதமான தலம். நாம் உடலால் செய்த பாவத்தையும் மனதால் செய்த பாவத்தையும் போக்கி அருளிய திருத்தலம். இங்கே உள்ள சிவனாரின் திருநாமம் ஸ்வேதாரண்யேஸ்வரர்.

நவக்கிரகங்களில் ஒரு கிரகமான, புதன் பகவான் தனிச்சந்நிதியில் அருள்பாலிக்கும் ஒப்பற்ற திருத்தலம் இது. நவக்கிரக பரிகாரத் திருத்தலம் இது. நவக்கிரகங்களில் புதன் பகவானுக்கான பரிகாரத் திருத்தலம்.

திருவெண்காடு திருத்தலத்துக்கு வந்து, ஸ்வேதாரண்யேஸ்வரரை வழிபட்டு, தனிச்சந்நிதியில் அருளோச்சும் புதன் பகவானை மனதாரப் பிரார்த்தனை செய்து வேண்டிக்கொண்டால், ஜாதகத்தில் புதன் தோஷமெல்லாம் விலகும் என்பது ஐதீகம்.

மேலும் புதன் பகவானை வணங்கி வழிபட்டு வந்தால், கல்வியில் மேன்மை பெறலாம். இசையில் தேர்ச்சி பெறலாம். ஜோதிடத்திலும் கணிதத்திலும் வல்லுநராகலாம். கல்விக்கும் கலைக்கும் வித்தைகளுக்கும் புதன் பகவானே காரகன். இவரே காரணம். அதனால்தான் புதன் பகவானை வித்யாகாரகன் என்கிறது புராணம்.
அம்பாளின் திருநாமம் பிரம்ம வித்யாம்பிகை. அம்பாளின் இடது பக்கத்தில் அமைந்திருக்கிறார் புதன் பகவான்.

வித்யாகாரகனான புதன் பகவானை மனதார வேண்டுவோம். அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று நவக்கிரகத்தை ஒன்பது முறை வலம் வந்து பிரார்த்திப்போம். இந்தநாளில், புதன் பகவானைக் குறித்து வேண்டுவோம்.

திருவெண்காடு திருத்தலத்தில், காலை 8.30 மணிக்கும், அடுத்து 10.30 மணிக்கும், மதியம் 12.30 மணிக்கும், மாலை 5.30 மணிக்கும் புதன் பகவானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

புதன் பகவானை, திருவெண்காடு திருத்தலத்துக்குச் சென்று ஏதேனும் ஒரு அபிஷேகத்தைக் கண்ணாரத் தரிசியுங்கள். மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x