Last Updated : 31 Dec, 2020 04:11 PM

 

Published : 31 Dec 2020 04:11 PM
Last Updated : 31 Dec 2020 04:11 PM

 ’நல்ல’ வார்த்தைகள் பேசினால்தான் மகாலக்ஷ்மி வருவாள்! 


நம் வீட்டில் மகாலக்ஷ்மி வாசம் செய்யவேண்டும் என்றால், துர்வார்த்தைகளை, அமங்கலச் சொற்களை ஒருபோதும் சொல்லக்கூடாது என்பதை உணர்ந்து, தெளிவோம். நல்ல நல்ல வார்த்தைகளையே பயன்படுத்துவோம்.

வார்த்தைகளுக்கு மிக மிக முக்கியத்துவம் உண்டு. மந்திரத்துக்கு மகிமை உண்டு என்கிறோம். அந்த மந்திரச் சொற்கள் அப்படி மகிமையாக்குகின்றன. மந்திரச் சொற்களை உச்சரிக்க உச்சரிக்க, நல்ல அதிர்வலைகள் நம் வீட்டில் குடிகொள்ளும்.

இறை திருநாமங்களைச் சொல்லுவதாலும் நல்ல அதிர்வுகளை உணரலாம். நம்மை துர்தேவதைகள் நெருங்கவிடாமல் இந்த மந்திரச் சொற்களும் இறை திருநாமங்களும் நம்மை காபந்து செய்யும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

ஒரு வார்த்தை கொல்லும்; ஒரு வார்த்தை வெல்லும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

நம் வீடுகளில் மகாலக்ஷ்மி வாசம் செய்யவேண்டும் என்றுதான் நாம் எல்லோருமே எதிர்பார்க்கிறோம். காலையும் மாலையும் அதனால்தான் விளக்கேற்றுகிறோம். பெண்கள், செவ்வாய், வெள்ளிக்கிழமை மற்றும் முக்கியமான நாட்களில் தலைக்குக் குளித்து, பூஜைகளிலும் வழிபாடுகளிலும் ஈடுபடுவதும் என நடைபெற்றுக் கொண்டிருப்பதும் அதனால்தான்!

ஒரு வீட்டில் திருமணம் நடந்து, மருமகள் வந்தால், எல்லோரும் சொல்லுகிற வார்த்தை... ‘வீட்டுக்கு மகாலக்ஷ்மி வந்தாச்சா?’ என்பதுதான். பெண் குழந்தை பிறந்தால், எல்லோரும் ‘வீட்டுக்கு மகாலக்ஷ்மியே வந்துட்டா’ என்றுதான் சொல்லிப் பூரிக்கிறோம். கொண்டாடுகிறோம்.

நம் வழிபாடுகளில் முக்கிய அங்கம் வகிப்பது தேவி வழிபாடுதான். அதிலும் உக்கிர தெய்வமாகத் திகழும் துர்கையையும் சாந்த சொரூபினியாகத் திகழும் மகாலக்ஷ்மியையும் வழிபடுகிறோம்.

அதேசமயம் எத்தனை வழிபாடுகள் செய்தாலும் நம்முடைய பேச்சுகளில் எதிர்மறை சிந்தனைகளோ பேச்சுகளோ இருந்தால், அந்த வீட்டில் மகாலக்ஷ்மி எப்படி வாசம் செய்வாள் என்று கேள்வி எழுப்புகின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்.

நம்முடைய வீட்டிலோ வேலை பார்க்கும் இடத்திலோ தொழில் செய்யும் இடத்திலோ நாம் எந்த மாதிரியான வார்த்தைகளைச் சொல்லுகிறோமோ அதற்கு உண்டான பலன்களையே, வினைகளையே நாம் பெறுவோம் என்று ஞானநூல்கள் விவரிக்கின்றன.

நம்மைச் சுற்றி அஷ்ட தேவதைகள் இருக்கிறார்கள் என்கிறது சாஸ்திரம். அதேபோல் முனிவர்களும் யோகிகளும் குறிப்பாக நம்முடைய முன்னோர்களும் நம்மைச் சுற்றி இருப்பார்களாம். இவர்கள் அனைவரும் நம்மை ஆசீர்வதிக்கவே இருக்கிறார்கள். அவர்கள் ‘ததாஸ்து ததாஸ்து’ என்று சொல்லிக் கொண்டே இருப்பார்களாம். நாம் சொல்லும் நல்ல வார்த்தைக்கும் ‘ததாஸ்து’ என்று சொல்லிவிடுவார்கள். ஏதேனும் துர்வார்த்தைகள் சொன்னாலும் ‘ததாஸ்து’ என்று சொல்லிவிடுவார்கள். ததாஸ்து என்றால், ‘அப்படியே ஆகட்டும்’ என்று அர்த்தம்.

’செளக்கியமா இருக்கேன்’ என்று எவரிடமேனும் சொன்னால் ‘ததாஸ்து’ ‘அப்படியே ஆகட்டும்’ என்று சொல்ல, நாம் செளக்கியமாகவும் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இருப்போம். ‘என்ன வாழ்க்கைங்க... நாசமாப் போச்சு’ என்பன முதலான வார்த்தைகளைச் சொன்னால், ‘அப்படியே ஆகட்டும்’ என்று சூட்சுமமாக இருந்து சொல்லுவார்கள். அதன்படியே நம் வாழ்க்கையானது அமையும். இதைத்தான் ‘ஒரு வார்த்தை கொல்லும், ஒரு வார்த்தை வெல்லும்’ என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.

அதனால்தான் குழந்தைகளுக்கு தெய்வங்களின் திருநாமங்களைக் கொண்டு பெயர் சூட்டுகிறோம். அதனால்தான் வார்த்தைக்கு வார்த்தையாகவோ, வார்த்தையின் தொடக்கத்திலோ, ‘நாராயணா’ என்றோ ‘சிவாய நம’ என்றோ, ‘அம்பாள் கடாக்ஷம்’ என்றோ, ‘முருகா முருகா’ என்றோ தெய்வங்களின் பெயர்களைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் பலரும்.

வீட்டில், கடைகளில் சொல்லக்கூடாத வார்த்தை... ‘இல்லை’ என்பது. அரிசி இல்லை, பருப்பு இல்லை, எண்ணெய் இல்லை, காய்கறிகள் இல்லை’ என்றெல்லாம் சொல்லவே சொல்லாதீர்கள் என வலியுறுத்துகிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். ‘அரிசி வாங்கணும்’, பருப்பு தேவையா இருக்கு’, வரும்போது நெய் வாங்கிட்டு வாங்க’ என்று சொல்லச் சொல்கிறார்கள். ‘இல்லைஇல்லை’ என்று சொன்னால் இல்லை என்பதாகவே ஆகிவிடும். அதேபோல், ‘சனியன்’, ‘நாசமாப் போச்சு’, ‘எழவு’ முதலான வார்த்தைகளைச் சொல்லவே சொல்லாதீர்கள். இப்படியெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தால், மகாலக்ஷ்மி கோபமாகிவிடுவாள். வீட்டுக்குள் நுழையாமல் கிளம்பிப் போய்விடுவாள் என்கின்றன ஞானநூல்கள்.

நம் வீட்டில் மகாலக்ஷ்மி வாசம் செய்யவேண்டும் என்றால், துர்வார்த்தைகளை, அமங்கலச் சொற்களை ஒருபோதும் சொல்லக்கூடாது என்பதை உணர்ந்து, தெளிவோம். நல்ல நல்ல வார்த்தைகளையே பயன்படுத்துவோம்.

மகாலக்ஷ்மி சந்தோஷமாவாள். மங்காத செல்வங்கள் அனைத்தையும் தந்தருள்வாள்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x