Last Updated : 30 Dec, 2020 09:17 PM

 

Published : 30 Dec 2020 09:17 PM
Last Updated : 30 Dec 2020 09:17 PM

கேட்டதெல்லாம் தருவார் வெங்கட்டாம்பேட்டை பெருமாள்! 

கேட்டதெல்லாம் தந்தருள்வார் வெங்கட்டாம்பேட்டை பெருமாள் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அற்புதமான வைணவத் தலங்களில் வெங்கட்டாம்பேட்டை திருத்தலமும் ஒன்று. கடலூர் மாவட்டத்தில் உள்ளது குறிஞ்சிப்பாடி. இங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

நின்ற நிலை, அமர்ந்த நிலை மற்றும் கிடந்த நிலை என மூன்று திருக்கோலங்களில் பெருமாள் காட்சி தரும் ஆலயங்களில், வெங்கட்டாம்பேட்டை ஸ்ரீவேணுகோபால சுவாமி கோயிலும் ஒன்று!

இறைவனை அமர்ந்த நிலையில் வணங்கி நிற்கும் கருடாழ்வார் கொள்ளை அழகு. மேலும் சூரியனும் சந்திரனும் தன் ஒளிக்கதிர்களால் வழிபடும் கோயில் எனும் பெருமையும் இந்தத் தலத்துக்கு உண்டு.

புராண புராதனப் பெருமை கொண்டது வெங்கட்டாம்பேட்டை வேணுகோபால சுவாமி திருக்கோயில்.

கலியுகத்தின் தொடக்கத்தில், சடமர்ஷனர் என்ற மகரிஷி வடநாட்டில் தவமிருந்து வந்தார். ஒரு கட்டத்தில் அப்பகுதி முழுவதும் அமைதி குலைந்து, போர்ச்சூழலும் அதர்மமும் தலைதூக்கியது. எனவே அந்த மகரிஷி அமைதி வேண்டி தெற்கு திசை நோக்கி வந்தார்.

இப்போதைய விழுப்புரம் அருகில் உள்ள திருக்கோவிலூர் பகுதியில் பஞ்ச கிருஷ்ண ஆரண்யம் எனும் வனத்துக்கு வந்தார் மகரிஷி. அப்போது நீர் வற்றியிருந்த கருட நதியைக் கண்டார். நீரின்றி வெப்ப மணல் எதிரொலித்து தகித்துச் சுட்டது. இந்த வெப்பம் தாளாமல் தவித்தார்.

அந்த நேரத்தில் தென்கரை ஓரமாக நீரூற்று தோன்றியது. அதில் தன் காலை நனைத்து வெப்பத்தைத் தணித்துக் கொண்டார் சடமர்ஷன மகரிஷி. அதன் பாதையிலேயே பயணத்தைத் தொடர்ந்தார். அந்தப் பாதையானது, தில்லைவனத்தின் வடகோடியில் உள்ள தீர்த்தவனம் என்ற இடத்தில் முடிவடைந்தது. அங்கே சென்ற மகரிஷிக்கு ஆனந்தமும் அமைதியும் உள்ளே நிலவியது. அந்த இடம் எழில் சூழ அமைதியாகக் காட்சி தந்ததால், அங்கேயே அமர்ந்து தவம் செய்ய ஆரம்பித்தார்.

தவத்தால் மகிழ்ந்த திருமால், ஸ்ரீலட்சுமிதேவியோடு மகரிஷிக்கு காட்சி கொடுத்தார். அதில் மகிழ்ந்த முனிவர், ‘தாங்கள் உலகைக் காக்க மேற்கொண்ட அனைத்து அவதாரங்களையும் எனக்கு காட்டி அருள வேண்டும்’ என நெடுஞ்சாண்கிடையாக நமஸ்கரித்து வேண்டினார். மகரிஷி கேட்டுக்கொண்டபடி மகாவிஷ்ணுவும் அவ்வாறே காட்சி தந்து அருளினார். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு இன்றளவும் அருள்மழை பொழிந்துகொண்டிருக்கிறார்.

பின்னர் மகரிஷி, ‘தாங்கள் இந்த திருத்தலத்தில் நின்ற கோலத்திலும், கிடந்த கோலத்திலும் நிரந்தரமாய் தங்கியிருந்து, பக்தர்களுக்கு கேட்ட வரங்களை அளித்து அருள் செய்ய வேண்டும்’ என்று பணிந்தார். அதன்படியே வரமளித்த பெருமாள், இங்குள்ள ஆலயத்தில் ஸ்ரீருக்மிணி- ஸ்ரீசத்யபாமா சமேத ஸ்ரீவேணுகோபாலராகவும், ஆதிசேஷன் பாம்பணையில் பள்ளி கொண்ட ராமராகவும் காட்சி தருகிறார்.

வேண்டிய வரங்களைத் தரும் வெங்கட்டாம்பேட்டை திருத்தலத்துக்கு வாருங்கள். நினைத்ததையெல்லாம் நடத்தித் தருவார் பெருமாள்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x