திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை!

திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை!
Updated on
1 min read

சர்வம் சிவமயம் என்பார்கள். இந்தத் தத்துவத்தை உணர்த்தும் வகையில் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் உத்திரத்தில் சிவலிங்க ஓவியம் வரையப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மன் சன்னதியிலிருந்து, சுந்தரேஸ்வரர் சன்னதிக்குச் செல்லும் சிவன் சன்னதி இரண்டாம் பிராகாரத்தில் முக்குறுணி விநாயகர் தனிச் சந்நிதியில் வீற்றிருப்பார். இந்த இடத்தின் மேற்கூரையில் ஓர் ஒளிப்பிரவாகத்தின் நடுவில் சிவலிங்கம் வரையப்பட்டிருக்கும். நாம் எங்கிருந்து பார்த்தாலும் சிவலிங்கம் அமைந்திருக்கும் பீடம் நம்மை நோக்கித் திரும்பும் வகையில் இருப்பதுதான் இந்த லிங்க ஓவியத்தின் சிறப்பு. அதனாலேயே இதனைச் சுழலும் லிங்கம் என்று அழைக்கின்றனர். இந்த ஓவியத்தையொட்டி ஒரு புராணக் கதையும் சொல்லப்படுகிறது. ஒருமுறை அவ்வைப் பிராட்டி கயிலாயத்துக்குச் சென்றபோது, சிவபெருமான் இருக்கும் திசையை நோக்கிக் காலை நீட்டி உட்கார்ந்தார். உடனே பார்வதி, உலகை ஆளும் ஈஸ்வரனை நோக்கிக் காலை நீட்டலாமா அவ்வையே என்று கேட்டாராம். அதற்கு அவ்வை, “அம்மையே ஈஸ்வரன் இல்லாத திசை எது?” என்று கேட்டாராம். திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்பதை விளக்கும் ஓவியம் இந்த சுழலும் லிங்கம் என்கின்றனர் பக்தர்கள்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in