Last Updated : 29 Dec, 2020 10:05 PM

 

Published : 29 Dec 2020 10:05 PM
Last Updated : 29 Dec 2020 10:05 PM

தில்லை... சிதம்பரம்... ஆனந்தக் கூத்தனின் பெருமைகள்! 

பெருமைகள் பல கொண்ட சிதம்பரம் பிரமாண்டமான திருத்தலம். உலகில் உள்ள எல்லா ஆலயங்களின் இறைவனும் தில்லை அம்பல நடராஜனின் திருநடனத்தை தரிசிக்க சிதம்பரத்துக்கு வருகிறார்கள் என்கிற புராண - புராதனப் பெருமைகள் கொண்ட புண்ணிய க்ஷேத்திரம் என்கிறார் வெங்கடேச தீட்சிதர்.

ஆனந்த நடராஜப் பெருமான் எழுந்தருளியுள்ள திருச்சிற்றம்பலம்... சிதம்பரம் திருத்தலம் நினைக்க நினைக்க வியப்பூட்டக்கூடியவையாகவும் பிரமிப்பை விஸ்தரித்தபடியேயும் இருக்கிறது. திருச்சிற்றம்பலத்தின் தங்க விமானத்தில் 9 கலசங்களுடன் கிழக்கு மேற்காக நீள் சதுர வடிவிலானது. தெற்குப்பகுதி தவிர மற்றப் பகுதிகள் சந்தனப் பலகைகளால் மூடப்பட்டிருக்கின்றன. நடராஜப் பெருமான் வீற்றிருக்கும் மேடை தரை மட்டத்திலிருந்து சுமார் 5 அல்லது 6 அடி உயரத்தில் உள்ளது.
திருச்சிற்றம்பலத்தின் முன்புறம் கனகசபை அமைந்துள்ளது. பக்தர்கள், இங்கிருந்துதான் நடராஜப் பெருமானை வணங்குகின்றனர். கனகசபையில் ஒன்பது வாசல்கள் உள்ளன. இவை நமது உடலில் உள்ள ஒன்பது வாசல்களைக் குறிக்கும். கனக சபை பிரம்மபீடப் பகுதி. கனக சபையில் உள்ள 18 தூண்கள் 18 புராணங்களைக் குறிக்கின்றன என்கிறார் சிதம்பரம் கோயிலின் வெங்கடேச தீட்சிதர்.

அந்தச் சபையில் அன்னப் பாவாடை பரப்புவதற்காக அமைக்கப்பட்டுள்ள ஐந்து பெரிய தளவரிசைக் கற்கள் பஞ்ச பூதங்களைக் குறிப்பிடுகின்றன. கனகசபையிலிருந்து திருச்சிற்றம்பலத்திற்கு ஏறும் ஐந்து வெள்ளிப் படிகள்... நமசிவாயம் எனும் பஞ்சாட்சரப் படிகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்தப் படிகளின் இருபக்கங்களிலும் யானை உருவம் இருப்பதால் இதனை திருக்களிற்றுப்படி எனப் போற்றப்படுகிறது!

கனகசபையிலிருந்து திருச்சிற்றம்பலம் எனப்படும் சித்சபைக்கு செல்லும் நுழைவாயிலில் பஞ்சாட்சரப் படிகளுக்கு மேலே அமைந்த கதவினை அவித்யை என்று விவரிக்கப்பட்டுள்ளது. இரண்டு பக்கமும் தண்டி , முண்டி எனும் துவாரபாலகர்கள் உள்ளனர். இந்த வாயில் இதயவாயில் எனப்படும். திருச்சிற்றம்பலத்தில் ஐந்து தெய்வீகப் பீடங்கள் உள்ளன. பஞ்சாட்சரப் படி ஏறி கால் வைக்கும் இடம் பிரம்ம பீடம் எனப் போற்றப்படுகிறது.

அடுத்து திருச்சிற்றம்பலத்தினுள் சுமார் ஓரடி அகலமுள்ள இடத்தில் ஐந்து தங்கத் தூண்கள் உள்ளன. இது விஷ்ணுபீடம் எனப்படும். இந்த ஐந்து தூண்களும் பஞ்ச பூதங்களாகும்.

நடராஜப் பெருமான் முன்பு தீட்சிதர்கள் நின்று பூஜை செய்யும் இடம் ருத்ரபீடம் என்றும் நடராஜ மூர்த்தியும் சிவகாமி அம்மையும் வீற்றிருக்கும் பீடம் மகேஸ்வர பீடம் என்றும் சொல்லப்படுகிறது. இது சுமார் 6 அல்லது 7 அடி நீளமும் 3 அடி அகலமும் கொண்டு தங்கத்தால் மூடப்பட்டிருக்கும் என சிலிர்ப்புடன் தெரிவிக்கிறார் வெங்கடேச தீட்சிதர்.

மகேஸ்வர பீடத்துக்கு இருபடிகள் உண்டு. மேற்குப்படியில் சந்திரமௌலீஸ்வரர் ஆகிய ஸ்படிக லிங்கமூர்த்தியும், ரத்தின சபாபதி ஆகிய ரத்தினத்தினாலான நடராஜ மூர்த்தியும் தனித் தனிப் பெட்டிகளில் எழுந்தருளியுள்ளனர். மகேஸ்வர பீடத்தில் ரத்தினம் இழைத்த இறைவனின் திருவடிகள் சிவ பாதுகை எனும் தங்கத் தட்டில் இறைவனுக்கு வலப் பக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீமத் நடராஜ மூர்த்தியின் வலப்புறத்தில் ஸ்ரீமுகலிங்கம் உள்ளது.

நடராஜமூர்த்தியும் சிவகாமி அன்னையும் வீற்றிருக்கும் மகேஸ்வர பீடத்தில் பத்து தூண்கள் உள்ளன. அதில் உள்ள 4 தூண்கள் 4 வேதங்களையும் ஆறு தூண்கள் ஆறு சாஸ்திரங்களையும் குறிக்கின்றன!

இத்தனை பெருமைகள் கொண்ட சிதம்பரம் பிரமாண்டமான திருத்தலம். உலகில் உள்ள எல்லா ஆலயங்களின் இறைவனும் தில்லை அம்பல நடராஜனின் திருநடனத்தை தரிசிக்க சிதம்பரத்துக்கு வருகிறார்கள் என்கிற புராண - புராதனப் பெருமைகள் கொண்ட புண்ணிய க்ஷேத்திரம் என்கிறார் வெங்கடேச தீட்சிதர்.

நாளை 30ம் தேதி புதன்கிழமை ஆருத்ரா தரிசனம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x