

களத்திர தோஷம் உள்ளவர்கள், சுமங்கலிகளுக்கு புடவை உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் வழங்கி நமஸ்கரித்தால், விரைவில் திருமண தோஷம் நீங்கும். கல்யாண யோகம் கிடைக்கப் பெறலாம்.
தோஷங்களில் மிக முக்கியமானது களத்திர தோஷம். ஒருவரின் ஜாதகத்தில் களத்திர தோஷம் இருந்தால், காரியங்கள் தடைப்பட்டுக்கொண்டே இருக்கும். முக்கியமாக, திருமணம் என்பது வாழ்வில் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கும்.
நல்ல படிப்பு இருக்கலாம். கை நிறைய சம்பாத்தியம் இருக்கலாம். மிகப்பெரிய நிறுவனத்தில் வேலை பார்க்கலாம். சொந்த வீடு வாகன வசதிகளுடன் இருக்கலாம். ஆனாலும் களத்திர தோஷம் இருந்துவிட்டால், திருமணமானது தள்ளிப்போய்க்கொண்டே இருக்கும் என்பது ஜோதிட விதி.
களத்திர தோஷம் இருந்துவிட்டால், திருமணம் முதலான சுபகாரியங்கள் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கும். களத்திர தோஷம் என்பது முன் ஜென்மத்தால் விளைவது. முன் ஜென்ம வினைகளால் நிகழ்வது. முன் ஜென்மத்தின் பாவ புண்ணிய கணக்குகளின்படியே களத்திர தோஷமானது நிகழ்கிறது.
களத்திர தோஷம் உள்ளவர்கள், ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமை நன்னாளில், வீட்டில் சுமங்கலி பிரார்த்தனை செய்யலாம். நம் குடும்பத்தில் சுமங்கலிகளாக இறந்துவிட்டவர்களை நினைத்து, வீட்டில் விளக்கேற்றுங்கள். ஐந்து அல்லது ஏழு சுமங்கலிகளை அழைத்து அவர்களுக்கு பாதபூஜைகள் செய்யலாம். பூஜையில் மங்கலப் பொருட்களை வைத்து மனதார வேண்டிக்கொள்ளலாம்.
பின்னர், வந்திருக்கும் சுமங்கலிகளுக்கும் கன்யா குழந்தைகளுக்கும் உணவு வழங்கலாம். உணவு முடிந்ததும், அவர்களுக்கு பூ, வெற்றிலை, பழங்கள், புடவை, மஞ்சள், கண்ணாடி வளையல், மஞ்சள் சரடு, குங்குமம் முதலான மங்கலப் பொருட்களை வழங்கி நமஸ்கரித்து வேண்டிக்கொள்ளலாம்.
இதனால், நம் வம்சத்தில் இறந்துவிட்ட சுமங்கலிகள் அகம் குளிர்ந்து போகிறார்கள் என்றும் அவர்களின் பரிபூரண ஆசீர்வாதமானது நம் வீட்டு குழந்தைகளுக்குக் கிடைக்கும் என்றும் அந்த மறைந்த சுமங்கலிகளின் ஆசியும் வந்த சுமங்கலிகளின் ஆசியும் கிடைக்க, களத்திர தோஷம் நீங்கும் என்றும் விவரிக்கிறது சாஸ்திரம்.
ஜாதகத்தில் களத்திர தோஷம் உள்ள நிலையில், சுமங்கலி பூஜையும் பிரார்த்தனையும் நிச்சயம் பலன்களைத் தந்தருளும். அதேபோல், வருடத்துக்கு ஒருமுறையேனும் எவர் வேண்டுமானாலும் இல்லத்தில் சுமங்கலிப் பிரார்த்தனை செய்வது, வம்சத்தை சீரும் சிறப்புமாக வாழச் செய்யும் என்று தெரிவிக்கிறார்கள் ஆச்சார்யர்கள்.