Last Updated : 07 Dec, 2020 11:37 AM

 

Published : 07 Dec 2020 11:37 AM
Last Updated : 07 Dec 2020 11:37 AM

சங்காபிஷேக தரிசனம் தரும் பலன்கள்! 

கார்த்திகை மாதத்தின் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சிவாலயங்களில் சங்காபிஷேக பூஜை விமரிசையாக நடந்தேறும். சிவனாருக்கு சங்காபிஷேகம் செய்வதை தரிசிப்பது மகா புண்ணியம் என்றும் சகல தோஷங்களையும் போக்கும் என்றும் சந்தோஷங்களையும் நிம்மதியையும் தந்தருளும் முக்திப்பேறு கிடைக்கும் என்றும் சொல்லிச் சிலிர்க்கிறார்கள் சிவ பக்தர்கள்!

கார்த்திகை என்பது குளுமையான மாதம். கார்த்திகை மாதம் தீப வழிபாட்டுக்கான மாதம். கார்த்திகை மாதம் என்பது... தீபங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தீப வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து பூஜித்து வணங்குகின்ற மாதம். தீபமே கடவுள், தீபமே சக்தி, தீபமே அருள் என்றெல்லாம் நமக்கு உணர்த்துகிற மாதம். இத்தகையை சிறப்பு வாய்ந்த கார்த்திகை மாதத்தில், சோமவார திங்கட்கிழமையில், சிவபெருமானுக்கு சங்காபிஷேகம் செய்வதில் இன்னும் குளிர்ந்து அருளுகிறார் சிவனார் என்று போற்றுகிறார்கள் சிவ பக்தர்கள்.

சங்காபிஷேகம் செய்வதில் பல சாந்நித்தியங்களும் சடங்கு நியமங்களும் இருக்கின்றன. 108 சங்கு, 1008 சங்கு என அபிஷேகம் செய்வார்கள் சிவபெருமானுக்கு!
108 சங்கு கொண்டு அபிஷேகமோ 1008 சங்கு கொண்டு அபிஷேகமோ... அந்த சங்குகளை பனிரெண்டு ராசிகுண்டங்களாகப் பிரித்து வைத்துக்கொள்ளவேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். பனிரெண்டு ராசி குண்டங்களில் ஒன்பது ஒன்பது சங்குகளாக பிரித்து வைத்துக் கொள்ளவேண்டும்.ஆக, 108 சங்கு கொண்டு ராசி குண்டங்கள் வைக்கப்படுகின்றன.

அங்கே, எட்டுத் திசைகளைப் பார்த்தபடி அந்த சங்கில் இருந்து எட்டு சங்குகள் வைக்கவேண்டும். இப்படியாக வரிசையாகவும் ராசி குண்டங்களாகவும் வைக்கப்பட்டிருக்கும் சங்குகளுக்கு நடுவே, வலம்புரிச் சங்கையும் இடம்புரிச் சங்கையும் வைக்கவேண்டும்.

வலம்புரிச் சங்கு சிவபெருமான். இடம்புரிச் சங்கு பார்வதிதேவி என்கிறார்கள். இறைவன் ஒருவன், இறைவன் சிவன், இறைவனே ஆதி, இறைவனே அந்தம் என்பதாக சங்குகள் வைக்கப்படுகின்றன.

108 சங்குகளைக் கடந்து, எட்டுத் திசைக்கு எட்டு சங்குகள், வலம்புரி, இடம்புரிச் சங்குகள் என பத்து சங்குகள் சேர்த்து 118 சங்குகள் கொண்டும் அபிஷேக பூஜையைச் செய்யலாம்.

ஒவ்வொரு சங்கிலும் நீர் ஊற்ற வேண்டும். அந்த நீரில் பூக்களிட வேண்டும். மாவிலை, தர்ப்பை முதலானவற்றை மந்திர ஜபங்களுடன் வைக்கவேண்டும். சங்கு என்பது புனிதம். நீர் என்பது புனிதம். இரண்டையும் இணைத்து மந்திரம் சொல்லப்படும் போது சங்கும் நீரும் மிக மிகப் புனித நிலையை, ஓர் சாந்நித்தியத்தை அடைகின்றன. அப்படியான சாந்நித்தியம் குடிகொண்டிருக்கும் சங்கு கொண்டு அபிஷேகம் செய்யச் செய்ய, இறைவன் சிவபெருமான் குளிர்ந்து போகிறான். இந்த பூமியைக் குளிரச் செய்கிறான். நம்மை குளிர்வித்து அருளுகிறான் என்பது ஐதீகம்.

கார்த்திகை மாதத்தின் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சிவாலயங்களில் சங்காபிஷேக பூஜை விமரிசையாக நடந்தேறும். சிவனாருக்கு சங்காபிஷேகம் செய்வதை தரிசிப்பது மகா புண்ணியம் என்றும் சகல தோஷங்களையும் போக்கும் என்றும் சந்தோஷங்களையும் நிம்மதியையும் தந்தருளும் முக்திப்பேறு கிடைக்கும் என்றும் சொல்லிச் சிலிர்க்கிறார்கள் சிவ பக்தர்கள்!


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x