Last Updated : 07 Dec, 2020 11:04 AM

 

Published : 07 Dec 2020 11:04 AM
Last Updated : 07 Dec 2020 11:04 AM

சங்காபிஷேகம்... சங்கடம் தீரும்; சந்தோஷம் பெருகும்!  அபிஷேகப் பிரியனுக்கு குளிரக்குளிர சங்காபிஷேகம்! 

கார்த்திகை மாதம் விசேஷம். அதேபோல் சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமை சிவபெருமானுக்கு ரொம்பவே விசேஷம். கார்த்திகை மாதத்தின் சோமவாரம் என்பது இன்னும் மகத்தானதாகப் போற்றப்படுகிறது.

அதற்குக் காரணம்... பெரும்பான்மையான சிவாலயங்களில், கார்த்திகை சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையில், சிவனாருக்கு சங்காபிஷேக பூஜை நடைபெறுகிறது.
சங்கு என்பது புனிதமான பொருட்களில் ஒன்று என்கிறது புராணம். மகாவிஷ்ணு தன் திருக்கரத்தில் சங்கு வைத்திருக்கிறார் சங்குடன் அபயம் அளிக்கிறார் என்கிறது விஷ்ணு புராணம்.

சங்கு வைத்திருப்பதும் சங்குக்கு பூஜைகள் செய்வதும் சங்கினைக் கொண்டே பூஜைகள் செய்வதும் எண்ணற்ற பலன்களை வழங்கவல்லது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

சிவாலயங்களில் சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையில், பொதுவாகவே வழிபாடுகள் சிறப்புறச் செய்யப்படுவது வழக்கம். விசேஷமாக பூஜைகளும் அபிஷேகங்களும் நடைபெறும். சோமவாரம் என்றால் திங்கட்கிழமை. திங்கள் என்பது சந்திரனைக் குறிக்கும். சந்திரனைப் பிறையெனச் சூடிக்கொண்டிருக்கிறார் சிவபெருமான் என்கிறது புராணம்.

அதனால்தான், சோமவாரம் என்கிற திங்கட்கிழமையில் சிவனாருக்கு வழிபாடுகள் அமர்க்களப்படுகின்றன. அதனால்தான் சிவபெருமானுக்கு சோமநாதன், சோமேஸ்வரர், சந்திர சூடேஸ்வரர் என்றெல்லாம் திருநாமங்கள் அமைந்தன.

கார்த்திகை என்பது குளுமையான மா தம். கார்த்திகை மாதம் தீப வழிபாட்டுக்கான மாதம். கார்த்திகை மாதம் என்பது... தீபங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தீப வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து பூஜித்து வணங்குகின்ற மாதம். தீபமே கடவுள், தீபமே சக்தி, தீபமே அருள் என்றெல்லாம் நமக்கு உணர்த்துகிற மாதம். இத்தகையை சிறப்பு வாய்ந்த கார்த்திகை மாதத்தில், சோமவார திங்கட்கிழமையில், சிவபெருமானுக்கு சங்காபிஷேகம் செய்வதில் இன்னும் குளிர்ந்து அருளுகிறார் சிவனார் என்று போற்றுகிறார்கள் சிவ பக்தர்கள்.

இன்று 7ம் தேதி திங்கட்கிழமை. தென்னாடுடைய சிவனார் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில் சங்காபிஷேகம் விமரிசையாக நடந்தேறும். கண்ணாரத் தரிசித்து மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள்.

சிவனார் அபிஷேகப் பிரியன். அந்த அபிஷேகப்பிரியனுக்கு சங்கு கொண்டு அபிஷேகிப்பதை தரிசித்தால், மும்மடங்குப் பலன்கள் கிடைக்கப் பெறலாம். முக்தி நிச்சயம். இம்மையிலும் நன்மை, மறுமையிலும் நன்மையைத் தந்தருள்வார் சிவபெருமான் என்று போற்றுகிறார்கள் சிவாச்சார்யர்கள்.

சங்காபிஷேகத்தை தரிசியுங்கள். சந்தோஷமாய் வாழ அருளுவான் சங்கரன்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x