Last Updated : 04 Dec, 2020 08:44 PM

 

Published : 04 Dec 2020 08:44 PM
Last Updated : 04 Dec 2020 08:44 PM

’ஐயப்ப சுவாமியிடம் விளையாடவே கூடாது!’ - மாது பாலாஜியின் சபரிமலை அனுபவங்கள்

‘ஐயப்ப சுவாமியிடம் விளையாடவே கூடாது. நமக்கு பாடம் நடத்திவிடுவார் ஐயப்ப சுவாமி’ என்று மாது பாலாஜி தெரிவித்தார்.

கிரேஸி மோகன், சகோதரர் மாது பாலாஜி, குழுவினர் பலரும் சபரிமலை சென்ற அனுபவத்தை வீடியோவில் பதிவிட்டுள்ளார் மாது பாலாஜி.

அதில் அவர் தெரிவித்ததாவது:

கிரேஸி மோகனின் சகோதரர் மாது பாலாஜி வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார். அதில் சபரிமலைக்குச் சென்ற அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் தெரிவித்ததாவது:

’’சபரிமலைக்கு 88ம் ஆண்டு சென்றேன். அதுதான் நான் முதன் முதலாகச் சென்றது. ஐயப்பனின் அருள் இல்லாமல் மலையேற முடியாது. எங்களுக்கு குரு சாமியாக இருந்தவர் என்னை விட இளம் வயது. அவருக்கு அப்போது 25 வயது. எனக்கு 30 வயது. சபரிமலையில் படிபூஜை செய்வதற்கு ஐயாயிரம் ரூபாய் பணம் கட்டினோம். 89ம் ஆண்டு, படிபூஜை செய்வதற்கு எங்களுக்கு ஒதுக்கப்பட்டது.

எங்கள் சித்தப்பாவுடன் கிரேஸி மோகன் சபரிமலைக்குச் சென்று கொண்டிருந்தான். அந்த வருடம் எங்களுடன் வந்தான்.

படிபூஜை என்பதும் அதற்கு பணம் கட்டியதும் பக்தியாகப் பார்க்கத் தெரியவில்லை. மாறாக அதனால் ஒரு மமதை வந்தது எங்களுக்கு. படிபூஜையோ நெய்யபிஷேகமோ தரிசனமோ... எதுவாக இருந்தாலும் ஐயப்பன் நினைத்தால்தான் எதுவுமே நடக்கும்.

நாங்கள் விபூதி, சூடம் எல்லாம் எடுத்துச் செல்வோம். கோயிலில் சேர்ப்பித்து விடுவோம். ஆனால் சிலர், ஒரு தட்டில் விபூதியைப் பரப்பி, அதில் சூடமேற்றி, அப்படியே கோயிலை வலம் வருவார்கள். ‘இதென்ன புதுப்பழக்கமா இருக்கு’ என்றோம். உடனே எங்கள் குருசாமி, ‘அது அவங்க பழக்கம். அதெல்லாம் நாம எதுவும் சொல்லக்கூடாது’ என்று சொன்னார். இப்படிச் சொன்னதே தப்புதான்.

அன்று மாலை படிபூஜை. சரியாக படிபூஜை ஆரம்பிப்பதற்கு ஐந்து நிமிடத்துக்கு முன்னதாக கொட்டித் தீர்த்தது மழை. அப்படியொரு மழையை பார்த்ததே கிடையாது. பேய் மழை என்பார்களே... அப்படிப் பெய்தது மழை. ஒரு முக்கால் மணி நேரம் மழை பெய்துகொண்டே இருந்தது. ’மழை நின்னாத்தான் படி பூஜை செய்யமுடியும். மழை நிக்காம படிபூஜையை எப்படிங்க செய்யமுடியும்? வேணும்னா, வேற இடத்துல பூஜை பண்ணுங்க’ என்று தந்திரி சொல்லிவிட்டார். ’பகவானிடம் வேண்டிக்கோங்க’ என்றார்.

உடனே எங்க குருசாமி இன்னும் சிலரெல்லாம் சேர்ந்து, பக்கத்தில் இருந்த மண்டபத்தில் உட்கார்ந்து ஸ்லோகங்கள் சொல்லத் தொடங்கினோம். கிரேஸி மோகன் இன்னும் சிலரெல்லாம் சேர்ந்து, கோயிலை 108 முறை பிராகாரம் சுற்றிவந்தார்கள். மழை கொட்டிக்கொண்டே இருந்தது. நனைந்துகொண்டே இருந்தோம்.
மழை நிற்கவே இல்லை. பிறகு எங்கள் குருசாமி, ஒரு தட்டில் விபூதியையெல்லாம் வைத்து நடுவே சூடமேற்றிக் கொடுத்தார். ‘இந்தத் தட்டை வைத்துக்கொண்டு அப்படியே கோயிலைச் சுற்றி வா’ என்று எங்களிடம் கொடுத்தார். மழை நிற்கவே இல்லை. சூடம் நனையாமல், பிராகாரமாக வந்து நின்றோம். மழை சட்டென்று நின்றது. ’ஸ்டாப்’ என்று சொன்னால் நிற்பது போல் சட்டென்று நின்றது. தெய்வத்தின் அனுக்கிரகத்தை அங்கே, அப்போது பார்த்தோம்.

ஏழே முக்காலில் இருந்து ஒன்பதே முக்காலில் இருந்து பெய்து கொண்டே இருந்த மழை, எல்லோரும் அழுதுகொண்டே இருந்தோம். தந்திரியும் மேல் சாந்தியும் ‘மழை நிக்கலேன்னா படி பூஜை செய்யமுடியாது’ என்று தெளிவாகச் சொல்லிவிட்டார்கள்.

பத்துமணிக்குள் பூஜை செய்யவேண்டும். சரியாக ஒன்பதே முக்கால் மணிக்கு மழை நின்றுவிட்டது. விறுவிறுவென படிக்கு அருகில் சென்றோம். பூஜை நடந்தது. அலங்காரங்கள் செய்து, பூக்கள் வைத்து பூஜைகள் நடந்தது. பொதுவாக குருசாமியை மட்டும்தான் படிபூஜை செய்த பின்னர் பதினெட்டாம்படியில் அனுப்புவார்கள். இதுதான் கோயில் நடைமுறை. நாங்கள் தவித்துக்கொண்டிருந்ததைப் பார்த்த மேல்சாந்தியும் தந்திரியும் ‘எல்லோரும் படியேறி வாங்க’ என்று சொன்னார்கள்.
பதினெட்டாம்படியை, நாங்கள் முப்பத்து நான்கு பேரும் ஏறினோம். அழுதுகொண்டே, சிலிர்ப்புடன் ஏறினோம். ஐயப்பனை தரிசித்தோம்.

எல்லாம் முடிந்த பிறகு, எங்கள் குருசாமி சொன்னார்... ‘பணம் கட்டிவிட்ட மமதையில் இருந்தோம். பணம் கட்டினால் எல்லாம் கிடைத்துவிடும் என்று நினைத்தோம். ஆனால் நம் மமதைக்கு இதுவொரு அடி. நமக்கு உணர்த்திவிட்டார் ஐயப்பன்’ என்று சொன்னார். ஊரு முழுக்க, ‘நாங்க படிபூஜைக்கு பணம் கட்டியிருக்கோம் கட்டியிருக்கோம்’ என்று தம்பட்டம் அடித்தோம். அதுக்கெல்லாம் ஐயப்பன் கொடுத்த அடி.

அதுமட்டுமில்லை... தட்டில் விபூதி வைத்து சூடமேற்றியதை விமர்சனம் செய்தோம். அதை கேலி செய்தோம். கிண்டல் செய்தோம். ஆனால் அவர்களைப் போலவே விபூதியில் சூடமேற்றி கோயிலைச் சுற்றி வந்த பிறகுதான் மழை நின்றது. இதெல்லாம் படிப்பினை.

ஐயப்பனிடம் விளையாடவே விளையாடாதீர்கள் என்று எங்கள் குருசாமி சொன்னார்’.

இவ்வாறு மாது பாலாஜி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x