Last Updated : 03 Dec, 2020 11:53 AM

 

Published : 03 Dec 2020 11:53 AM
Last Updated : 03 Dec 2020 11:53 AM

’உன் சோகம் தீர்க்க நானிருக்கிறேன்’ என்கிறார் ஷீர்டி சாயிபாபா

‘உன் சோகத்தையெல்லாம் தீர்ப்பதற்கு நான் இருக்கிறேன். கவலைப்படாதே. துக்க மூட்டைகளை சுமந்தபடி முடங்கிக் கிடக்காதே. சோகத்தையெல்லாம் தீர்ப்பதற்குத்தான் நான் இருக்கிறேன்’ என்று பகவான் ஷீர்டி சாயிபாபா அருளியுள்ளார்.

இந்த உலகில் எண்ணற்ற மகான்கள் வாழ்ந்திருக்கிறார்கள். பக்தர்களை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு ஆசி வழங்கியிருக்கிறார்கள். அவர்களையும் அவர்களின் குடும்பத்தையும் அரவணைத்துக் காத்தருளியிருக்கிறார்கள்.

பூவுலகில் எத்தனையோ மகான்கள் பல அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறார்கள். அப்படி அற்புத அதிசயங்கள் நிகழ்த்திய மகான்களில் ஒருவர்தான் ஷீர்டி சாயிபாபா.
வடக்கே ஷீர்டி எனும் கிராமத்தை புண்ணிய க்ஷேத்திரமாக தன் அருளால் மாற்றிக் காட்டினார் சாயிபாபா. வடக்கில் உள்ள பல ஊர்களில் இருந்தும் பாபாவை தரிசிக்க ஏராளமான பக்தர்கள், குவிந்தார்கள். ஒவ்வொரு பக்தரின் குறைகளையும் கேட்டும் கேட்காமலும் போக்கி அருளினார்.

எத்தனையோ பேரின் கஷ்டங்களையும் துக்கங்களையும் தன் பார்வையாலேயே நெறிப்படுத்தி சரிப்படுத்தி அருளியிருக்கிறார் பாபா என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்.
அதனால்தான், பாபா முக்தி அடைந்த பின்னரும் கூட, அவரின் திருநாமத்தைச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள் பக்தர்கள். ஷீர்டியில் இருந்து பிடிமண் எடுத்து வந்தும், சிலை எடுத்து வந்தும் கோயில்கள் எழுப்பியிருக்கிறார்கள். சிலையைப் பிரதிஷ்டை செய்து பல ஊர்களிலும் ஆலயங்கள் எழுப்பி வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் என்று பாபாவை வணங்கி வருகிறார்கள் பக்தர்கள். வார்த்தைக்கு வார்த்தை சாய்ராம் சாய்ராம் என்று உச்சரித்து, பாபாவின் திருநாமத்தையே ஜபித்து வருகிறார்கள்.

பாபாவும், தன் பக்தர்களின் கண்ணீரை ஒருபோதும் பார்த்துக்கொண்டிருப்பதில்லை. அவர்களின் வேதனைகளைக் களைவதே தன்னுடைய பணி என்று அருளியிருக்கிறார் சாயிபாபா.

‘உங்கள் சோகங்கள் அனைத்தையும் துக்க மூட்டைகளாக்கி சுமந்துகொண்டே இருக்காதீர்கள். இந்த துக்கங்கள் எல்லாமே, வருத்தங்கள் அனைத்துமே கர்மவினைகள். உங்களைத் தொடர்ந்துகொண்டே இருக்கிற முன் ஜென்ம விஷயங்கள். இந்த வினைகளை நீங்கள் அனுபவித்தே ஆகவேண்டும்.

அதற்காக, கர்மவினைகள்தானே என்று நான் உங்களை வேடிக்கை பார்ப்பேன் என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். உங்கள் துக்கங்களைப் போக்குவதற்கும் சோகங்களுக்கு வடிகாலாகவும் நான் இருப்பேன். நான் இருக்கிறேன்.

ஆகவே, உங்கள் சோக பாரத்தை சுமக்கும் போது என்னை நினைத்துக் கொள்ளுங்கள். என் நாமத்தை சொல்லிக்கொள்ளுங்கள். உங்கள் சோகத்தைத் தீர்க்க நானிருக்கிறேன். உங்களின் துக்கத்தைப் போக்க நான் தயாராக இருக்கிறேன்’ என அருளியுள்ளார் பகவான் ஷீர்டி சாயிபாபா.

சாய்ராம் சாய்ராம் சாய்ராம் என்று மூன்று முறை மனதார பாபாவை அழைத்து வணங்குங்கள். பிறகு உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் பாபா வழிநடத்தி அருளுவார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x