Last Updated : 27 Nov, 2020 03:34 PM

 

Published : 27 Nov 2020 03:34 PM
Last Updated : 27 Nov 2020 03:34 PM

திருக்கார்த்திகை தீபம்; தயிர்சாதம் அன்னதானம்; இல்லத்தைக் குளிர்விப்பார்கள் அம்மையும் அப்பனும்!

கார்த்திகை தீப நன்னாளில், தயிர்சாதம் நைவேத்தியம் செய்து, சிவனாரை மனதார வேண்டிக்கொண்டால், ஐந்து பேருக்கேனும் தயிர்சாதம் பொட்டலம் வழங்கினால், மங்காத செல்வங்கள் இல்லத்தில் சேரும். தடைப்பட்ட காரியங்கள் அனைத்தையும் முடித்துக் கொடுப்பார் சிவனார்.

கார்த்திகை நட்சத்திர நாள் ஒவ்வொரு மாதமும் வரும்.கார்த்திகை மாதத்தில் வருகிற கார்த்திகை நட்சத்திர நாள் இல்லை. இது மிகவும் மகோன்னதமும் சாந்நித்தியமும் கொண்டது என்கின்றனர் முனிவர் பெருமக்கள்! கார்த்திகை மாத திருக்கார்த்திகையின் பெருமைகளையும் சிறப்புகளையும் விவரித்துக் கொண்டே இருக்கலாம்.

திருக்கார்த்திகை குறித்த வேறு விசேஷத் தகவல்களையும் ஞான நூல்கள் விவரிக்கின்றன. கார்த்திகை நட்சத்திரத்தை அக்னி நட்சத்திரம் என்கின்றன ஜோதிட நூல்கள். இந்த நட்சத்திர மண்டலத்தைச் சூரியன் கடக்கும் வேளையில், வெயில் அதிகமாக இருக்கும். நெருப்புக் கோளமான சூரியனும் அக்னி வடிவான இந்த நட்சத்திரக்கூட்டமும் சேர்ந்திருக்கும் காலத்தில் வெயில் அதிகமாக இருக்கும். அதையே அக்னி நட்சத்திரம் என்றும் கத்திரி என்றும் கூறுகின்றனர். இதை சூரிய ஆதிக்கம் என்பார்கள்.

கத்திரி வெயில் முடிந்த அடுத்தடுத்த மாதங்களுக்குப் பிறகு, ஐப்பசி தொடங்கியதும் மழைக்காலம் ஆரம்பிக்கும். அது முடிந்ததும் வருகிற கார்த்திகை மாதம் மழை கொஞ்சம் கொஞ்சமாக முடிந்து, குளிர் எட்டிப்பார்க்கும் மாதம். அதாவது, மழையும் குளிரும் கலந்துகட்டி, உடலில் உஷ்ணத்தைப் பரப்புகிற மாதம் என்கிறார்கள்.

அபிஷேகப் பிரியன் என்று சிவனாரைக் குறிப்பிடுகிறோம். சிவலிங்கமானது, எப்போதும் வெப்ப தகிப்புடன் இருக்கக் கூடியது. வெம்மையான சிவலிங்கத் திருமேனியைக் குளிர்விக்கும் தாராபாத்திரம் வைக்கப்பட்டிருக்கும்.

பல ஆலயங்களில், மூலவரான சிவலிங்கத் திருமேனிக்கு மேலே தாராபாத்திரம் வைத்திருப்பார்கள். இதில் நிரப்பப்படும் நீரானது, தாரையாக, துளியாக, துளித்துளியாக லிங்கத்தின் மீது விழுதபடியே இருக்கும்.

தாராபாத்திரத்தைப் போல் குளுமையாக இறைவன் அருளும் தருணம்தான் திருக்கார்த்திகை தீபத் திருநாள் என்று போற்றுகிறார்கள்.

திருக்கார்த்திகை தீப நன்னாள் 29ம் தேதி. கார்த்திகை தீப நன்னாளில், தயிர்சாதம் நைவேத்தியம் செய்து, சிவனாரை மனதார வேண்டிக்கொண்டால், ஐந்து பேருக்கேனும் தயிர்சாதம் பொட்டலம் வழங்கினால், மங்காத செல்வங்கள் இல்லத்தில் சேரும். தடைப்பட்ட காரியங்கள் அனைத்தையும் முடித்துக் கொடுப்பார் சிவனார். சிவனாரும் பார்வதியும் இல்லத்தில் அமைதியையும் சுபிட்சத்தையும் தந்தருள்வார்கள் என்பது ஐதீகம்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x