Last Updated : 19 Nov, 2020 09:42 PM

 

Published : 19 Nov 2020 09:42 PM
Last Updated : 19 Nov 2020 09:42 PM

’உங்கள் சுமைகளை என் தோளில் தாங்குகிறேன்’ என்கிறார் சாயிபாபா!

‘உங்கள் சுமைகளை என் தோள்களில் தாங்குகிறேன். எனவே கவலையே படாதீர்கள். சுமைகள் அனைத்தும் இல்லாமல் நிம்மதியாக வாழ்வீர்கள்’ என அருளியுள்ளார் பகவான் சாயிபாபா.

எத்தனை உழைத்தும் முன்னுக்கு வரமுடியவில்லையே என்று புலம்பாதவர்களே இல்லை. வருத்தப்படாதவர்களே இல்லை. ‘ஜாண் ஏறினால் முழம் சறுக்குகிறதே’ என்று கண்ணீர் விடும் அன்பர்கள் ஏராளம்.

‘என் பையன் நல்லாப் படிச்சு, நிறைய்யப் படிச்சி இன்னும் நல்ல வேலை கிடைக்காம அல்லாடிட்டிருக்கான்’ என்று பெற்றோர் வருந்துவார்கள். ‘நல்ல வேலைல இருக்கான். கை நிறைய சம்பாதிக்கிறான். ஆனா இன்னும் கல்யாணம் ஆகலையே...’ என்று கண்ணீர் விடுபவர்கள் இருக்கிறார்கள்.

திடீர் திடீரென்று வண்டி செலவு வைத்துவிட்டது, வைத்தியத்துக்கு நிறைய செலவாகிறது, இன்னும் மகளுக்கு திருமண வரன் கைகூடவில்லை, உறவுகள் எவ்வளவு செய்தாலும் மதிப்பதே இல்லை என்றெல்லாம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகள்; கஷ்டங்கள்; துக்கங்கள். போதாக்குறைக்கு, கடன் கடன் கடன்.. கடனுக்கு மேல் கடன் என்று தத்தளிப்பவர்களின் துக்கத்தைச் சொல்ல வார்த்தைகளே இல்லை.

‘இவையெல்லாம் கர்மாக்கள். கர்ம வினைகள். இவற்றில் இருந்து மீள்வதற்கு தெய்வ வழிபாடு மிக மிக அவசியம்’ என்று இவ்வுலகின் மகான்கள் வலியுறுத்தியுள்ளனர். அப்படி கர்மவினைகளால் சிக்குண்டு மருகித் தவிக்கும் பக்தர்களை, பக்கபலமாக இருந்து கடைத்தேற்றுவதைத்தான் மகான்கள் அருளி வருகின்றனர். ஷீர்டி சாயிபாபா அப்பேர்ப்பட்ட உன்னத மகான் என்று போற்றுகிறார்கள் சாயி பக்தர்கள்.

‘கர்மாக்களை நிறைவேற்றாமல் இந்த ஜென்மத்தைக் கழிக்கவே முடியாது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். உங்களின் கர்மவினையை கழிப்பதற்குத்தான் இத்தனை சோதனைகளும் கவலைகளும் உங்களைச் சூழ்ந்திருக்கின்றன. அதனால்தான் செய்வதறியாமல் தவிக்கிறீர்கள். அந்தச் சுமைகளின் அழுத்தம் தாங்காமல் வருந்துகிறீர்கள்’ என்கிறார் ஷீர்டி மகான் சாயிபாபா.

‘கவலைப்படாதீர்கள். உங்கள் தோளிலும் மனதிலும் உள்ள சுமைகளை சுமக்கத் தயாராக இருக்கிறேன். உங்கள் கர்மவினைகளில் இருந்து விடுபடுவதற்கு, சூட்சுமமாக உங்களுடனே இருந்து உங்கள் சுமைகளை என் தோள்களில் சுமந்துகொண்டிருக்கிறேன். கவலையே படாதீர்கள். உங்கள் சுமைகளும் கவலைகளும் வருத்தங்களும் துக்கங்களும் வெகு விரைவாகவே உங்களைவிட்டு நீங்கிவிடும். நானிருக்கிறேன்.

சத்விஷயங்களில் ஈடுபடுங்கள். இயலாதவர்களுக்கு உங்களால் முடிந்ததை வழங்குங்கள். சேவைகளில் நீங்கள் ஈடுபடுவதைத்தான் நான் மிகவும் விரும்புகிறேன். உங்கள் செயல்களால் நீங்கள் என்னை அழைக்கிறீர்கள். நானும் உங்களை நெருங்குகிறேன். உங்களுடைய சுமைகளையெல்லாம் என் தோளில் சுமக்கிறேன். எனவே கவலையே படாதீர்கள்’ என அருளியுள்ளார் பகவான் ஷீர்டி சாயிபாபா.

ஷீர்டி சாயிபாபா, மண்ணுலகுக்கு வந்த மகான். கலியுகக் கஷ்டங்களையெல்லாம் போக்குவதற்கு வந்த மகான். உங்கள் கஷ்டங்களை, துக்கங்களை, எண்ணங்களை, விருப்பங்களை, ஆசைகளை, சுமைகளை பாபாவிடம் சொல்லி முறையிடுங்கள். பாபாவின் தோள்கள் உங்களுடைய சுமைகளை வாங்கிக் கொள்ளும்.

நினைத்தவற்றையெல்லாம் ஈடேற்றித் தந்தருள்வார் பகவான் ஷீர்டி நாதன் சாயிபாபா!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x