Last Updated : 05 Nov, 2020 08:11 PM

 

Published : 05 Nov 2020 08:11 PM
Last Updated : 05 Nov 2020 08:11 PM

நீதிபதி சனீஸ்வரரை வேண்டுங்கள்; ஏற்றம் தருவார்; மாற்றம் தருவார்! 

சனி பகவானை வணங்கினால், சனி கிரகம் மட்டுமின்றி மற்ற கிரக தோஷங்களில் இருந்தும் விடுபடலாம். நமக்கு ஏற்படுகிற அனைத்து சங்கடங்களையும் கஷ்டங்களையும் இன்னல்களையும் போக்கி அருளுவார் சனீஸ்வரர்.

‘சனியைப் போல் கொடுப்பாருமில்லை; சனியைப் போல் கெடுப்பாருமில்லை’ என்பார்கள். அந்த அளவுக்கு சனி பகவான் நல்லவைகளும் செய்யக்கூடியவர். துன்பங்களையும் கொடுக்கக் கூடியவர் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

நவக்கிரகங்களில் மிக மிக வலிமையான கிரகம் என்று போற்றப்படக் கூடியவர் சனி பகவான். ராகு - கேது பெயர்ச்சி வரும். அதற்குக் கூட அவ்வளவாக கலங்கித் தவிக்கமாட்டோம். குருப் பெயர்ச்சி வரும். அதற்கும் பதறித் துடிக்க மாட்டோம். ஆனால், சனிப்பெயர்ச்சி வந்துவிட்டாலே, சனீஸ்வரர் நமக்கு என்ன செய்யப் போகிறார், நல்லது நடக்குமா, தடைகள் அனைத்தும் அகலுமா, இதுவரை இருந்து கஷ்டங்களும் நஷ்டங்களும் விலகிவிடுமா என்றெல்லாம் நெஞ்சில் கைவைத்து கண் மூடி வேண்டிக்கொள்வோம்.

சனீஸ்வரர் என்பவர், நீதிபதியைப் போலானவர். தராசு முனை போல் தீர்ப்பு சொல்லக்கூடியவர். தீர்ப்பை சொல்வது மட்டுமின்றி, அதற்கான தண்டனைகளையும் சரியாக வழங்கக் கூடியவர். அதனால்தான் அந்தத் தண்டனையைக் கண்டு அஞ்சுகிறோம்.

அதேசமயம், சனி கிரக தோஷம் உள்ளவர்கள் சனி பகவானை உரிய முறையில் சனீஸ்வரரை தரிசித்துப் பிரார்த்தனை செய்துகொண்டால், பிரார்த்தனை செய்து வந்தால், சனி பகவானின் அருளைப் பெறலாம். கிரக தோஷ பாதிப்பில் இருந்து காத்தருள்வார்.

சனீஸ்வரருக்கு, திருநள்ளாறு திருத்தலம் உள்ளது. திருவாரூர் அருகே திருக்கொள்ளிக்காடு எனும் தலத்தில் பொங்கு சனீஸ்வரராக எழுந்தருளியுள்ளார். இந்தத் தலங்களுக்குச் சென்று தரிசிப்பது விசேஷம். அதேபோல், தேனி மாவட்டத்தில் குச்சனூர் சனீஸ்வரரை தரிசிப்பதும் மிகுந்த பலன்களைத் தரும்.

மேலும் அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று, நவக்கிரகத்தை வலம் வந்து வேண்டிக்கொள்வதும் தினமும் காகத்துக்கு சாதம் வைப்பதும் எள் கலந்த சாதம் வைப்பதும் பாவங்களை நீக்கி புண்ணியங்களைக் கொடுக்கவல்லது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

சனி கிரக பாதிப்பு இல்லாதவர்களும் கூட ‘ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரெளம் ஷக் சனைச்சராய நம;’ எனும் மந்திரத்தை சனிக்கிழமைகளிலும் மற்ற நாட்களிலும் கூட தினமும் சொல்லி வந்தால், சனீஸ்வரர் நம்மைக் காத்தருள்வார். தடைகளைத் தகர்த்து அருளுவார். வாழ்வில் ஏற்றத்தையும் மாற்றத்தையும் தந்து காத்தருளுவார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x